9
நேற்றைய மனநிலையிலேயே அவனிடம் பட்டும் படாமல் ஒரு தலையசைப்பு கொடுத்துவிட்டு இவள் செல்ல.. ஈரமான கடல் காற்றுக்கூட ஜெர்ரிக்கு வெம்மை ஊட்டுவதாக இருந்தது.
அதிலும் கடல் ஈரக்காற்று
தாமரையின் உள்ளே நுழைந்து..
இடையில் இளைப்பாறி..
உடையில் நடனமாடி..
முகத்தில் முத்தமிட்டு..
கற்றை கூந்தலை களைத்துவிட்டு.. கன்னத்தில் சரசமாடி..
கழுத்து வளைவில் உறவாடி...
என்று காதலனாக அவளோடு களியாட்டம் போட்டதை கண்டவனுக்கு கண்மண் தெரியாத கோபம் எழுந்தது உருவமில்லா காற்று மீது!!
ஜெர்ரிக் பார்வையை எல்லாம் தாமரை கண்டுகொள்ளவே இல்லை. ரெக்ஸியோடு ஏதோ பேசிக்கொண்டே அந்த ரிசார்ட்டில் கடற்கரையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
இரவு உணவுக்கு அழைக்க சிலர் தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு.. சிலர் அங்காங்கே குழுவாக நின்று சாப்பிட்டுக் கொண்டு இருக்க.. தாமரைக்கு இந்த பதார்த்தங்களை பார்த்தாலே பிடிக்கவில்லை. ஏதோ ஒன்றிரண்டு முறை சாப்பிடலாம். அதையே தினத்துக்கும் சாப்பிடுவது என்றால் எப்படி? என்று அவளுக்குள் ஒரு ஒவ்வாமை ஏற்பட..
ரசம் சாதம் சாதாரண துவையலுக்கு நாக்கு ஏங்கியது. "பாம்பு திங்கிற ஊரிலிருந்தால் நடு கண்டம் நமக்குன்னு எடுத்து வைத்து சாப்பிடனும் டி ஆத்தா!!" என்று அவளது ஆச்சியின் குரல் காதில் ஒலிக்க.. சரி தான் என சிரித்துக் கொண்டவள் தானும் உணவு எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
ஜெர்ரிக்குள் ஏன் இந்த மாற்றம் என்று அவனுக்கு புரியவில்லை. அவளின் அழகு நம்மை ஈர்க்கிறது. அதை தவிர அப்படி அவளிடம் ஒன்றுமே இல்லை பழகுவதற்கும் வாழ்வதற்கும்!! இனிமையானவள் கிடையாது!!
ஸ்வாரசியமான பேச்சுகள் கிடையாது!!
அன்பு ஆரவணைப்பு மருந்துக்கு கூட கிடையாது!! எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேச்சு.. உம்முனு என்ற முகம்.. இப்படி இருப்பவளிடம் எப்படி ரொமான்ஸ் தோன்றும்?? எப்படி கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுக்க தோன்றும்?? என்று தான் அப்பொழுது அவன் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.
கடுகடு கட்டுபெட்டி!!
சிடுசிடு சிங்காரி!!
என்று எண்ணிவாறே உணவு உண்டான்.
ஆனால் அந்த சிடுசிடு சிங்காரியின் இறுக்க முகத்தில், கடல் காற்று பட்டு இலகுவாக்கி மென்மையாக குறுஞ்சிரிப்பு முகத்தில் தவழ.. அதுவே அவனை காந்தம் என அவள் பால் ஈர்த்தது.
மற்றவர்கள் எல்லாம் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால்.. ஜெர்ரிக் அவளை தன் கண்களால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
உணவு முடித்து ரெக்ஸி வழக்கமான ஒரு கல்ப்புக்கு போய்விட.. "சீக்கிரம் வா ரெக்ஸி" என்று அவளை கடிந்து கொண்டு, கடற்கரை நோக்கி சென்றாள் தாமரை.
ரம்யமான ஈரக் காற்று..
நிலா உலா வரும் நேரம்..
இயற்கையான சூழ்நிலை..
மெல்ல சத்தத்துடன் தவழ்ந்து வரும் அலைகள்..
மனத்தையும் உடலையும் அவ்வளவு புத்துணர்ச்சி ஆக்க.. ஏகாந்தமான அந்த இரவில் தன்னையும் மறந்து அந்த சூழலில் லயித்து மெதுவாக நடந்து கொண்டிருந்தவள் எதன் மேலோ முட்டி நின்றாள் தாமரை!!
சட்டென்று விதிர்விதிர்த்து இரண்டு எட்டு பின்னோக்கி சென்று நிமிர்ந்து பார்க்க, இரு கைகளையும் தன் பேண்டில் விட்டுக்கொண்டு அவளைத்தான் சற்றே போதை ஏறிய கண்களால் பருகிக் கொண்டிருந்தான் ஜெர்ரிக்.
"எப்ப தான் என்கிட்ட நீ சாரி சொல்லுவ டாம்?" என்றான் ஒருவிதமான குரலில்..
'எந்த நேரத்துல வந்து எதை கேக்குறான் பாரு!' என்று நினைத்தவள், "சாரி தானே.. கேக்கறதுக்கு இப்ப நீ தெளிவான மனநிலையில் இல்லை. உனக்கு நான் ரெண்டா தெரியுறேனா? இல்லை நாலா தெரியுறேனா தெரியல.. அப்புறம் நான் இப்ப சாரி சொல்லி, காலையில் எல்லாத்தையும் மறந்து போய், மறுபடியும் கேட்க சொல்லுவ.. அதனால நாளைக்கு காலையில சொல்றேன். சரியா?" என்று இலகுவான மனநிலையிலேயே அவனிடம் இருந்து விடைபெற அவள் முயல சட்டென்று அவளது இடது கையை பற்றி தடுத்தான்.
"என்னை என்ன குடிகாரன் என்று சொல்லிக் காட்டுறியா?" என்று அவன் குதர்க்கமாக கேட்க..
ஆரம்பிச்சுட்டான் இவனோட அட்ராசிட்டிய!! பேச்சை வளர்க்க விரும்பாதவள், "இல்லை ஜெர்ரிக் நிஜமா தான் சொல்றேன் நீ இப்போ தெளிவா இல்ல.." என்று செல்ல, அவளது கையை இறுக்கமாக இறுக்கினான். அவன் கையில் இருந்த தன் கையை விடுவிக்க முயல அது ஒரு சவாலாகவே இருந்தது அவளுக்கு.
"கண்ண மட்டும் தான் தெளிவா இல்லை.. ஒத்துக்குறேன்!! ஏன்னா சுமார் ஃபிகரான உன்னையே சூப்பர் ஃபிகரா காட்டுது என் கண்ணு" என்று அவன் நக்கல் அடிக்க..
அவனைப் பிடித்து பக்கத்தில் இருக்கும் கடலில் தள்ளி விடும் அளவு வேகம் வந்தது அவளுக்கு. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் 'நான் சுமார் பிகராகவே இருந்துட்டு போறேன் விடு என்னை" என்று அவள் அழுத்தமாக கூற..
"ஆனா பாரேன் என் தெளிவான மனது கூட உன் அழகை ஆராதிக்குதுப்பா அதுக்கு என்ன அர்த்தம் டாம் கேட்..?" என்று தலையை சாய்த்து சிறுபிள்ளை போல அவன் வினவ...
அவன் சொன்ன மற்றது மறந்து விட, "என்னை கேட்னு சொன்ன?" என்று அவள் அவன் புறம் பாய்ந்து கொண்டு வர..
"பாத்தியா! பாத்தியா!! நீ கேட் தான்னு நிரூபிக்கிற.. அதுவும் சாதாரண கேட் இல்லை.. வைல்ட் கேட்.. மியாவ் மியாவ்" என்று சத்தமிட்டு காட்டினான்.
உன்னை என்றவள் சுற்றுமுற்றும் அதில் ஏதும் கிடைக்கிறதா என்பதை பார்க்க.. ஒன்றும் கிடைக்காமல் மணலை அள்ளி அவன்மீது கோபத்தில் வீசி விட்டாள். அவன் முகத்தில் பட்டு கண்களில் நுழைந்து எரிய ஆரம்பிக்க கத்த ஆரம்பித்து இருந்தான் அவன்.
"போச்சு!! போச்சு!! என் கண்ணு போச்சு!! உனக்கு ஏன் இவ்வளவு பொறாமை என் மேல.. இப்போ எனக்கு கண்ணு தெரியாம போச்சுனா நாற்பது ஃபிகர் என்னை எப்படி பார்க்கும்? நாலு ஃபிகரை நான் எப்படிப் பார்ப்பேன்? அதைவிட முக்கியம்.. முக்கியமான வேலையை நான் எப்படி செய்வேன்?" என்று அவன் கத்த ஆரம்பிக்க, தாமரைக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. "நீ கைய விடு நான் உனக்கு ஊதி விடுறேன்" என்றவள் அவன் முகத்தருகே சென்று கண்களை விரித்து ஊதினாள்.
என்ன மாயமோ மந்திரமோ இன்று ஜெர்ரிக் இரண்டாவது ரவுண்டில் இருந்ததால் அவன் கண்களுக்கு எல்லாமே.. குறிப்பாக தாமரை ஒற்றையாக தான் தெரிந்தாள். தன் கண்களுக்கு அருகே தெரிந்த அவளது அழகிய பூ முகம் அவனுள் சொல்லனா உணர்வை தந்தது. அதுவும் கண்ணெதிரே பளபளக்கும் அவளது சிவந்த கனிந்த உதடுகள் குவிந்து குவிந்து வருவது, தன்னை முத்தமிடேன் என்பது போல எண்ணம் மிக.. அவளது ஈர உதடுகளில் தன் உதடுகளை மெதுவாக உரசினான் பட்டும் படாமல்.. ஆனால் அதுவெல்லாம் போதாது மொத்தமாக வேண்டும் என் ஆர்ப்பரிக்கும் மனதை அடக்க முடியாமல்.. நொடியும் தாமத்திக்காமல், அவளது பூ முகத்தை தன் இரு கைகளால் தாங்கி
அவனின் அழுத்தமான உதடுகளால் அவளின் மென் இதழ்களை கொய்திருந்தான். அவனின் வன் உதடுகள் அவளின் உதட்டு அமுதத் துளிகளை உறிஞ்சி எடுத்து விட்டு விலகியபோது, அவள் உடல் மழையில் நனைந்த புறாக் குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்தது. மெல்லிய உதடுகளின் நடுக்கத்தை மறைக்க அவைகளை வாய்க்குள் இழுத்து கவ்விக் கொண்டாள்.
பெரு மூச்சு விட்டு தன்னை சமன்படுத்த முயன்று முடியாமல் அவள் திணற.. அதை பார்த்தவனுக்கு அப்போது தான், தான் காரியத்தின் வீரியம் புரிய..
"சாரி.. சாரி டாம். நான் இன்டன்ஷனா செய்யல.. அது.. அது.. உன் லிப்ஸை கிட்ட பார்க்கும் போது.." என்று அவன் தடுமாற, அடுத்த நிமிடம் அவனது மூக்கு பயங்கரமாக வலித்தது.
ஆம்!! இம்முறை மூக்கை பஞ்சராக்கி இருந்தாள் தாமரை!!
இருகைகளாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு "ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆ" என்று அவன் கத்த, கைகளைக் கட்டிக்கொண்டு அவனை தான் அழுத்தமாக பார்த்தாள். அவனது சின்னி மூக்கு உடைந்து சிறிதாக இரத்தம் கூட எட்டி பார்த்தது.
"இனி என்கிட்ட உன் வாலை ஆட்டாதே!! ஒட்ட நறுக்கி விடுவேன்" என்று அவள் வேகமாக விரைய..
வேகமாக ரிசார்ட்டுக்கு சென்று டிஷ்யூ பேப்பரை எடுத்து தன் மூக்கில் வழிந்த ரத்தத்தை எல்லாம் துடைத்தவன் கண்ணாடியில் முகத்தைப் பார்க்க.. சற்றே மூக்கு வீங்கியது போல தோன்றியது. "அன்னைக்கு கன்னம் இன்னைக்கு மூக்கு!! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பார்ட்டை டேமேஜ் ஆக்குறா!!!" என்றவனின் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.
வெளியில் வந்தவன் மீண்டும் இரண்டு ரவுண்டு உள்ளே தள்ளிவிட்டு அடுத்து அழைத்தது அவனது தந்தைக்கு தான்.
"பா எனக்கு இந்த பொண்ணை எப்படி கரெக்ட் பண்ணனும் சொல்லி கொடு பா!!"
என்று அப்பாவை மட்டும் தமிழில் கூறி மற்றவற்றை பிரெஞ்சில் கூறிக் கொண்டிருந்தான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அரங்கநாதன் ஜோன்ஸூக்கு மகன் கேட்டதில் தூக்கிவாரிப் போட எழுந்து அமர்ந்தார்.
"என்ன.. என்ன சொன்ன?" தன் காதில் விழுந்தது உண்மையா என்று திரும்பவும் கேட்டார். காதலித்து மணம் செய்து கொண்ட.. எனக்குப் பிறந்தவனா இவன்?? என்னும் வகையில் காதல் என்றாலே வெறும் லஸ்ட் என்று கூறுபவன் இன்று கூறியதைக் கேட்டதும் தான் அவருக்குத் திகைப்பு.
"முதல்ல அந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ் சொல்லு" என்று அவரும் அவனை போலவே பிரெஞ்சில் கேட்டார்.
அவனும் தாமரையை பற்றி உளறல் ஆகவே கூறினான் அந்த டேபிளில் தலை சாய்ந்து படுத்தவாறு..
"தமிழ் பொண்ணா?" என்று மகிழ்ச்சியோடு கேட்டவர், அவன் ஆம் என்றவுடன் "ஹூரேரே!!!! என்று கத்தினார் நடு சாமத்தில்!!
"ப்ப்ப்பா.. முதல்ல எப்படி கரெக்ட் பண்றதுன்னு சொல்லு" என்று அவன் பற்களை கடித்து கூற..
"இருடா விடிந்ததும் என் பழைய புக் ஷெல்ப் எல்லாம் தேடி திருக்குறள் இருந்து சுஜாதா நாவல் வரை எடுத்து உனக்கு கூரியர் அனுப்புறேன். அதற்கெல்லாம் முன்னாடி அரிச்சுவடினு ஒன்னு இருக்கு. அதை ஃப்ரஸ்ட் படி.. அப்புறம் காதல் படி!!" என்றார்.
"ப்பா!!" என்று அதிர்ந்து அவன் கூவ..
"ஹா ஹா.. கர்மா இஸ் பூம்பராங் டா மகனே!! என்னை கல்யாணம் பண்ணிக்க.. உன் அம்மா என்னை எப்படி பிரஞ்ச் படிக்க சொன்னாளோ அதே மாதிரி நீ தமிழ் படி" என்றவர் போனை அணைத்து விட..
"தமிழ் படிக்கனுமா?" என்று எச்சில் விழுங்கினான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!
