20
காலை கதிரவன் கனல்களாகவே கக்கினான் தன் உக்கிரத்தை சென்னை மாநகரத்தின் மீது!!
அந்த பத்து அடுக்கு அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் இருந்து தனது அறையில் சோபையாக கண்களைத் திறந்தாள் மாது!!
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் நேரத்திற்கு விழிப்பு சட்டென்று வந்து விட்டது.. பழக்கதோஷம்!!
ஆனால் கண்களை விழிக்க முடியாமல் கண் இமைகள் கூட வலித்தது பெண்ணுக்கு! கண்ணெல்லாம் வீங்கியது போன்ற அப்படி ஒரு பாரம்!!
நேற்றைய பொழுது அதிக நேரம் கணினியில் நேரத்தை செலவிட்டு விட்டேனோ? என்று அவள் சிந்தித்திருக்க.. அவளது மனசாட்சியோ கணினி பார்த்தது மட்டும் இந்த கண்களின் வீக்கத்திற்கு காரணமா? என்று எள்ளி நகையாடியது!!
சட்டென்று அருகிலிருந்த ஜக்கில் எப்பொழுதும் அவள் குடிக்க வைத்திருக்கும் நீரே கைகளில் ஊற்றி கண்களில் தேய்த்தாள். இப்போது சற்று பரவாயில்லை என்பது போல இருந்தது அவளது கண்கள்.
இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை. மெல்ல குனிந்து தன்னை பார்க்க அன்றொரு நாள் இதே போல் தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி படுத்திருந்த உருவத்தின் நினைப்பு அழைக்காமலே அவளது நினைவுகளில் வந்து சதிராடியது!!
'காலையிலேயே என்ன இது பைத்தியக்காரத்தனமான நினைவுகள்!' என்று தன்னை தானே கடிந்து கொண்டு வேகமாக எழுந்து குளியலறைக்குள் சென்றவளோ தன்னை பார்த்து அதிர்ந்தாள். அது அவள் போட்டிருந்த உடையை கொண்டு.. அவள் விரட்டியடித்த மனசாட்சி வந்து 'இப்போது என்ன சொல்ல போகிறாய்?' என்று அவளைப் பார்த்து கேட்டது!
கீழே லாங் ஸ்கர்ட் போட்டு இருந்தாலும் மேலே ஆண்கள் அணியும் சட்டையை போட்டு இருந்தது தான் காரணம்!!
"இந்த சென்னை வெயிலுக்கு இது போல லேசான ஷேர்ட் போட்டாதான் நல்லா இருக்கு. இல்லேன்னா இந்த வியர்வையில் நான் குளிக்க வேண்டியதுதான்" என்று மனசாட்சிக்கு கொட்டு வைத்து விட்டேன் என்று இவள் நம்பிக் கொண்டிருக்க.. அது ஒரு நக்கல் சிரிப்புடன் "நடத்து! நடத்து! எவ்வளவு நாட்கள் நீ நடத்துறேனு நானும் பார்கிறேன்!" என்று சொல்லிவிட்டு மறைந்தது.
இவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியில் வர அப்போது அவளது வீட்டில் இன்னொரு அறையில் இவளோடு வீட்டை ஷேர் செய்து இருக்கும் வித்யா வந்தாள்.
"என்ன வித்யா காலையிலேயே கிளம்பிட்ட.. இன்னிக்கும் ஒர்க்கா?" என்று இவள் சோம்பி கொண்டு சோபாவில் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்தாள்.
"ஆமாம்... தாமரை நெக்ஸ்ட் வீக் எங்க டீம்ல இன்ஸ்பெக்சன் இருக்கு. எங்க டைரக்டர் வராரு. அதனால சண்டே கூட வேலை செய்ய சொல்லி படுத்துறானுங்க. சோ இன்னைக்கு சமையல் நீயே பார்த்துக்கோ.. நான் வழக்கம்போல கேன்டினில் பார்த்துக்கிறேன்!" என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே அவளுக்கு கேப் வந்ததற்கு போன் கால் வர "ஓகே பை! கேப் வந்துட்டுச்சு நான் கிளம்புறேன்" என்று சென்றாள்.
தாமரையோ அலுப்புடன் சமையலறையை எட்டிப் பார்க்க நல்லவேளை பாலாவது காய்ச்சி வைத்திருக்கிறாள் என்று அதில் காபி போட்டுக் கொண்டு மீண்டும் வந்து சோபாவை தஞ்சம் அடைந்தாள்.
ஆயிற்று இதோடு ஆறு மாதங்கள் இங்கே சென்னைக்கு வந்து.. அவளுக்கு கொடுத்த அந்த கிஃப்ட்டை மிக சரியாக பயன்படுத்தி யாரிடமும், ஏன் ரெக்ஸியிடமும் கூட சொல்லாமல் இந்தியாவுக்கு விமானம் ஏறி விட்டாள்.
ஆனால் மனது இன்னும் அந்த சான்பகரான்ஸிக்கோவின் சின்ன வீட்டில் இருந்து வரவில்லை. இந்த ஆறு மாதங்களில் தான் எவ்வளவு மாற்றங்கள் அவளது வாழ்விலும் அலுவலகத்திலும்.
நல்லவேளை வித்யா போன்ற பெண் வீட்டு வாடகை ஷேர் செய்ய கிடைத்தாள். இல்லையென்றால் சித்தியின் குடும்பம் மொத்தமாக வந்து இங்கேயே டேரா போட்டிருக்கும். இங்கே வந்ததும் அவளுக்கு பகல் வேலையை விட நைட் ஷிப்ட் அதிகம்! அதனால் ஹாஸ்டல் ஒத்துவராது என்று இவள் வீடு பார்க்க ஆரம்பிக்க.. அப்போது அவர்கள் கம்பெனியில் வேறு ஒரு ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் வித்யாவின் அறிமுகம் கிடைத்து இங்கே வந்து செட்டிலாகி விட்டாள்.
கண்களை மூடி சற்று நேரம் அமர்ந்தாள். ஏகத்துக்கும் அந்த நினைப்பு வந்து அவளை சூழ்ந்துகொண்டது. பகலில் கூட வேலை வேலை என்று இருந்து விட்டாலும் கூட இரவில் அவளால் சமாளிக்கவே முடியவில்லை அவன் நினைவுகளின் துரத்தலை..
கூடவே மகேஷ் குடும்பத்தின் தொல்லை வேறு!! எப்பொழுது திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று!!
இன்னும் ஒன்றரை வருடம் மீதி இருக்க இவன் ஏன் இப்போது திருமணத்துக்கு அவசரப்படுகிறான் என்று புரியவில்லை தாமரைக்கு. எதையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத தனிமை வரம் அல்ல சாபம்!! இத்தனை வருடங்களில் அந்த சாபத்தை கூட வரமாக மாற்றி தன்னை மெல்ல மெல்ல செதுக்கிக்கொண்டாள் தாமரை.
சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்!! நம் நினைவுகளே நம்மை பிடித்து தின்று விடும் இதற்கு மேல் இப்படி அமர்ந்திருக்க கூடாது என்று நினைத்தவள், குக்கரில் மதியத்துக்கும் சேர்த்து சாதம் வைத்து விட்டு, ஃப்ரிட்ஜில் முட்டை இருக்க அதை அவித்து விட்டு சிம்பிளாக ரசம் வைத்து குளிக்க சென்று விட்டாள்.
குளித்துவிட்டு ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் போதே வாசலில் மணி அழைப்பு ஓயாமல் அழைத்தது.. 'ஒரு டிரஸ் கூட முழுங்க மாற்ற விட மாட்டேன்கிறாங்க' என்று அவசரஅவசரமாக மேக்ஸியை மாற்றிக்கொண்டு, தலையை துவட்டிக் கொண்டே சென்று கதவை திறந்தவள் வெளியே நின்றவனை பார்த்ததும் சற்று அதிர்ச்சி!!
வந்திருந்தது அவளது சித்தியின் மகன் கணேஷ். ஆம்! சித்தியின் மகன் தான்!. ஒரே தந்தைக்கு இருவரும் பிறந்திருந்தாலும், அந்த சகோதர பாசம் இவர்களிடத்தில் இருக்காது. அதனால் இவளுக்கு அவர்களெல்லாம் சித்தியின் மக்களே!!
"உள்ள வா!" என்று கூப்பிட்டவள் உள்ளே வர பின்னோடு வந்தான் அவனும். பெரிதாக எப்பவுமே பேசிக்கொள்ள மாட்டார்கள். சிறுவயதில் கூட இவள் பாசத்தோடு பார்த்துக் கொண்டால் கூட சித்திக்கு பிடிக்காது. அதுவே கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடமிருந்து இவள் தனித்திருக்க தொடங்கினாள் சித்தியின் சூடு சொற்களுக்கு பயந்து!!
அமர்ந்தவனுக்கு வெயிலுக்கு இதமாக இவள் எலுமிச்சை ஜூஸ் கொண்டுவந்து கொடுக்க.. அதை வாங்கி பருகியவன் மீண்டும் அமைதியாகவே இருந்தான்.
அவனாக சொல்லட்டும் என்று இவள் எதிர்பார்த்திருக்க.. அவனும் வாயை திறப்பதாக இல்லை. இவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது. பன்னிரண்டை நெருங்கியது இன்னும் காலை சாப்பாடு சாப்பிடவில்லை.
"கணேஷ்! எனக்கு பசிக்குது. நான் இன்னும் காலைல சாப்பாடு சாப்பிடல. நீயும் வரியா சேர்ந்து சாப்பிடலாம்" என்று சம்பிரதாயமாக அழைத்தாள் அவன் வரமாட்டான் என்று!
இவள் அழைக்க அவனும் மறுப்பேதும் சொல்லாமல் சரி என்றான். அவனை அருகில் இருக்கும் அந்த சிறிய டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு இவளுக்கு என்று அவித்த முட்டையை சிறிது மசாலா சேர்த்து வறுவல் மாதிரி செய்து கொண்டு வந்து வைத்தாள்.
"சிம்பிள் சாப்பாடுதான்!" என்று அவனுக்கு பரிமாற, அவனும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே உண்டான். ஏதோ ரெஸ்டாரண்டில் அறிமுகம் இல்லாதவர் இருவர் அமர்ந்து சாப்பிடுவது போல் தான் இருந்தது.
சாப்பிட்டதும் மீண்டும் சோபாவில் அமர்ந்தவனை பார்த்து "பணம் வேண்டுமா?" என்று அவள் கேட்க அதுவரை அமைதியாக இருந்தவன் விலுக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"சொல்லு? இப்படி வந்து நீ உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன நான் என்ன முடிவு எடுக்கிறது? நான் நைட் டூட்டி முடிச்சிட்டு காலைல தான் வந்தேன். எனக்கு கொஞ்ச நேரம் தூங்கணும். அப்போ தான் நாளைக்கு வேலைக்கு என்னால போக முடியும். என் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள முடியாது கணேஷ்" என்று கத்தரித்தது போலதான் வார்த்தைகள் வந்து விழுந்தது இவளுக்கு.
தொண்டை செருமி கொண்டவன் "அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணணும்" என்றான்.
இவளும் அலட்டிக்கொள்ளாமல் என்னது ஆபரேஷனா? என்னாச்சு அவர்களுக்கு? என்றைக்கு ஆபரேஷன்? இந்த மாதிரி தகவல் எல்லாம் அவள் கேட்கவில்லை. அவள் கேட்டது எவ்வளவு பணம் வேண்டும் என்பது மட்டுமே..
"ஒரு லட்சம் ஆகும்னு சொல்றாங்க. அது காப்பீட்டு திட்டத்தில் ஆபரேஷன் பண்ண இன்னும் குறை என்று சொல்கிறாங்க. அதுக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணிட்டேன். ஆனா இப்போதைக்கு அம்பதாயிரம் கட்டணும் சொல்லியிருக்காங்க. அதான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தேன்" என்றான்.
"அதுக்கு எதுக்கு நீ இவ்ளோ தூரம் வரணும்? ஒரு போன் செஞ்சு இருந்தாலே என்னால் முடிந்த பணத்தை அனுப்பி வைத்து இருப்பேன் தானே! இவ்வளவு நாளும் அப்படி தான் அனுப்பிவைத்தேன்!" என்றாள். இத்தனை நாளும் இவள் என்ன செய்கிறாள்? என்ன பண்ணுகிறாள்? என்று பார்க்க கேட்க தோன்றாதவர்கள் பணத்துக்கு மட்டும் வருவானேன் என்று கோபம்தான்.
"இல்ல.. நான் இங்கே தான் வேலை பார்க்கிறேன்!" என்றான்.
நிஜமாக இவன் பாலிடெக்னிக் சேர்ந்தது மட்டும்தான் தாமரைக்கு தெரியும். அதுவும் இவள் பணம் கட்டுவது நேரடியாக அவனது கல்லூரி அக்கவுண்டிற்கு என்பதால் தெரியும். இவனின் சகோதரிகள் இருவரும் மூத்தவள் கல்லூரி படிப்பை முடித்து விட இளையவள் இப்பொழுது கல்லூரி இறுதியாண்டில் இருக்கிறாள்.
மற்றவர்களும் என்ன படிக்கிறார்கள்? என்ன படித்தார்கள்? என்பது கூட தாமரைக்கு தெரியாது. கணேஷ்க்கு மட்டும் இவள் பணம் கல்லூரி மூலம் காட்டி விட மற்ற இருவருக்கும் சித்தியிடம் அனுப்பிவிடுவாள்.
ஓ என்று கேட்டுக் கொண்டாளே ஒழிய என்ன வேலை செய்கிறாய்? எங்கே தங்கி இருக்கிறாய்? என்ன வருமானம்? என்பது கேட்கவில்லை. இன்னும் இவளுடைய பங்கு ஒன்றரை வருடத்திற்கு இந்த குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே கையெழுத்திடா ஒப்பந்தம்!! மகேஷோடு கல்யாணம் நடந்தால் அதன் பின் இந்த குடும்பத்தில் எந்த ஒட்டும் கிடையாது! உறவும் கிடையாது! ஆனால் மகேஷோடான கல்யாணம்... என்று யோசிக்கவே அவளுக்கு பயமாக இருந்தது.
"என் கையில அமௌன்ட் அவளோ வைத்திருக்க மாட்டேன் எப்போதும். அதுவுமில்லாம இவ்வளவு பணம் என் அக்கவுண்டில் கிடையாது. நான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும். பண்ணிட்டு ஒரு ரெண்டு நாள்ல சித்தி அக்கவுண்டுக்கு வழக்கம்போல அனுப்பி விடுறேன். நீ டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுத்துக்கொள்" என்றாள்.
"சரி.. நான் கிளம்புறேன்" என்று வாயில் வரை சென்று திரும்பி "நீங்க ஊருக்கு வரலையா அம்மாவை பார்க்க?" என்றான்.
"என் அம்மா செத்துப் போய் இருபது வருஷத்துக்கு மேல ஆகுது!" என்று அவள் கூற அவனும் பதில் கூற முடியாமல் சென்றுவிட்டான்.
கணேஷுக்கு இப்போதெல்லாம் ஒரு பெரும் குற்ற உணர்வு. சிறுவயதில் அன்னையோடு சேர்ந்துகொண்டு இவளை எத்தனை கீழ்தரமாக பேசி இருக்கிறான்.. அக்கா என்று கூட பாராமல் சிலசமயம் கைகூட நீட்டியிருக்கிறான். எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் அப்போது? அதுவும் அழுதால் கூட அரவணைக்க ஆள் இல்லாத அந்த சமயத்தில்.. வயதில்.. அப்போது புரியாதெல்லாம் இப்பொழுது புரிந்தது. அதுவும் வேலைக்கு என்று வந்த இடத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் போது பணத்தின் அருமை தெரிந்தது. அதுவும் அவள் இரவு பகலாக ஐடி துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இவர்களுக்கு கொடுக்க.. எவ்வளவு ஏளனமாக பேசியிருக்கிறார் அவனது தாய். இவர்களும் சேர்ந்து எத்தனை சிங்-சாங் அடித்து இருப்பார்கள் அவரோடு!!
இதோ உடம்புக்கு முடியாமல் படுத்து இருக்கும் இந்த சமயத்தில் கூட தாமரை தான் உதவுகிறாள். முன்னே இருந்த கணேஷாக இருந்திருந்தால், முகத்தில் அடித்தார் போலயே அதிகாரமாக பணம் வேண்டுமென்று கேட்டு இருப்பான். ஆனால் இவனுக்கோ அப்படி கேட்க மனம் வரவில்லை. அதுவும் பகல் 12 மணி வரை அவள் சாப்பிடாமல் இருக்கிறாள். பசியின் கொடுமை.. உணவின் அருமை கூட சிங்கார சென்னை அவனுக்கு புரிய வைத்தது.
வந்தவர்களை வாழ வைக்க மட்டுமல்ல.. அவர்களின் செருக்கை அடக்கி வாழ்வியலையும் அழகே புரிய வைத்த பெருமை நம் சிங்கார சென்னைக்கு உண்டு!! அதில் கணேஷூம் விதி விலக்கு அல்ல!!
கணேஷ் சென்றவுடன் பெரிதாக இல்லாமல் வருத்தப்பட்ட விடவில்லை சித்திக்காக!! மதியத்திற்கு மேற்கொண்டு சாதம் செய்து விட்டு, உறக்கதிற்கு செல்ல, அதுவோ வருவேனா என்றது!!
மதியம் உணவு முடித்து மாலை போல் அவர்கள் அப்பார்ட்மெண்டில் இருந்து பார்கில் தான் நடந்து கொண்டிருந்தாள். சட்டென்று யாரோ பார்ப்பது போல ஒரு குறு குறு உணர்வு.. அவளது முதுகுத்தண்டில் எழுந்து அவளை சிலிர்க்க வைத்தது. சிறிது நேரம் அசையாமல் அப்படியே நின்றாள். திரும்பிப் பார்க்கலாமா? என்று யோசிக்க வேணாம்!! ஏதாவது தருதலைங்க.. பொறுக்கி பசங்க.. தான் பார்த்துட்டு இருப்பாங்க. அவங்களுக்கு நாமே மேலும் வழிவகை செய்ய வேண்டாம் என்று விடுவிடுவென்று தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
இரவு உணவு வித்யாவுடன்! பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது அலுவலகத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.
அதன் பின் அந்த இரவு!!
இரவு ஒரு கருணையற்ற பொழுது!!
அன்றைய நாளின் வலிகளின் முடிச்சை அவிழ்த்து விட்டு மன துயரில் ஆழ்த்தி குதூகலப்படுத்த நினைக்கும் அரக்கனின் சாயல்!!
அப்படியொரு வேண்டாத நிகழ்வை மனதில் ஏந்தியப்படி உறங்க செல்ல முடியாமல் பலநாள் அவள் விழித்திருக்கும் வேளையில் ஒரு ஜீவனின் குரல்
தட்டிக் கொடுக்கும்..
ஆறுதல் படுத்தும்..
மென்மையாக வருடிவிடும்..
சமன் படுத்தும்..
தடவிக் கொடுக்கும்..
மொத்தத்தில் அவளின் மன துயரை போக்கி அவளை உயிர்ப்புடன் இருக்க செய்யும் வித்தை அந்த குரலுக்கு மட்டுமே உண்டு!!
"செல்விக்கண்ணு.. செல்விக்கண்ணு..
நானிருக்கிறேன் டா உனக்கு!!" என்று மெதுவாக மார்பில் கை வைத்து தடவிக்கொடுத்து வலிகளை குறைக்கும்!
வலிகள் பல வகை!!
ஒவ்வொன்றும் ஒவ்வோரு வகை!!
அதில் மிக கொடுமை, ஏன் வலிக்கிறது என்று கேட்க கூட ஆள் இல்லாத தனிமை.
இவ்வளவு நாட்களாக அப்படிப்பட்ட தனிமையில்தான் தவித்துக் கொண்டிருக்கிறாள் தாமரை.
அந்த தனிமையில் அக்குரல் மட்டுமே அவளுக்கு ஆறுதல்!! வலிமை!!
இன்றோ அந்த குரலின் ஒலி மெல்ல மெல்ல உரு பெற்றது.
அவள் அருகில் அமர்ந்தான்..
அவள் கை விரலை நீவினான்..
அவள் நெற்றியில் குனிந்து முத்தமிட்டான்..
அவள் உடல் சிலிர்த்தது..
அவள் மனது அவனிடம் சரிந்தது..
அவள் உதடுகள் வறண்டன..
அவளை நெருக்கமாக இழுத்தான்.. அவளை இறுக்கமாக அணைத்தான்..
அவளை மிருதுவான கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்..
இன்னும் என்ன என்ன செய்திருப்பானோ? அதற்குள் அந்த உருவத்தின் முகத்தை மிக அருகில் பார்த்தவள் அதரி பதறி எழுந்து உட்கார்ந்தாள்!!
அவன் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!
உடலெல்லாம் வியர்த்து வழிந்தது அவளுக்கு. எப்படி? எப்படி? அந்த குரலின் உருவம் இவன் ஆக மாறியது எப்படி? என்று அவள் இரவெல்லாம் புலம்பித் தவிக்க..
அவள் புலம்பலின் நாயகன்..
எண்ணத்தின் காவலன்.. இரவுகளின் அரக்கன்.. அடுத்த வாரம் அவள் கண் முன்னே நின்றான்.
நின்றது மட்டுமா??
அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவளை நெருங்கினான். தன் முகத்தை அவள் கழுத்தருகே கொண்டு போய் அவளது வாசனையை ஆழமாக முகர்ந்தவன், அடுத்த நொடி அவள் இதழ்களை கொய்திருந்தான்.
அவள் உதடுகளின் சுவையில் அவன் கிறங்கி, இருவரின் சுடு மூச்சின் வருடல்களுடன் அவள் இதழின் அமுதம் சுவைத்து உதடுகள் பிரித்து மேலுதட்டை சிறைப்பிடித்தான். அவனின் நுனிநாக்கு மெல்ல அவள் இதழ்களை ரசித்து, பின்வாங்கி மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது. அதன்பின் அவள் இதழ்களின் நீள அகலங்களை அளக்க முயன்று தோற்று இணைந்து பின்னி முக்குளித்து மீண்டது.
பொசு பொசுவென வேகமாக மூச்சு வாங்கியபடி அவள் அவனை கடுமையாக முறைத்தாள். அவனோ அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவளை இடித்தபடி அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன், "என்னை விட்டு ஓடி போக முடியுமா?
நாம் இருவரல்ல ஒருவர் என்று புரியுமா?" அட்சரம் பிசகாத அழகு தமிழில் கூறி கண் சிமிட்டினான் மாயவன்!!
