16
பின்கட்டில் இருபுறம் இருக்கும் இரண்டு அறைகளைக் கடந்தால்.. பின்னால் ஒரு கதவு. அதைத் திறந்தால் பெரிய சமையலறை.
பெரிய பெரிய விருந்துக்கு உறவினர்கள் கூடும் போது இங்கே தான் தடபுடலாய் விருந்து சமைக்கப்படும். அதைக் கடந்து போனால் பெரிய கிணற்றுடன் கூடிய தரை காணப்படும். அதை சுற்றி சிறிய தோட்டம்.
சிலபல மரங்களும் இருக்கும் மறைவிடம் போல.. சிறுவயதில் பிள்ளைகளுக்கும் வளர்ந்தபிறகு வீரா மற்றும் அவனது தந்தை எல்லோருக்கும் இங்கேதான் வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் குளியல் நடக்கும். அக்கிணற்றடியில் தான் துவைக்கும் கல்லும் அமர்ந்து குளிக்க இடமும் சற்றே தள்ளி உடை மாற்ற ஒரு அறையும் இருக்கும். வீரா எங்கும் நிற்காமல் விடுவிடுவென்று நேராக நடந்து பின் பக்கம் போனான்.
வீராவின் அருமை பெண்டாட்டி தீரா... முழங்கால் தெரிய ஏற்றி இடுப்பில் சொருகின புடவையும்.. கலைந்து விழுந்து கண்ணை மறைக்கும் முடியுமாக.. துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவள் குனிந்து துவைக்க இவளது வெண்ணிற இடுப்பு பளிச் பளிச்சென்று இவனது கண்ணை பறித்தது.
அவள் முன் நின்றவனை பார்த்துச் முறைத்தாள் வீராவின் காதலி. ஆசை மனைவி!!
''ஹாய்.. பொண்டாட்டி..!!" குனிந்து நின்று துணி துவைத்தவள்.. நிமிர்ந்தாள். ஆனால் பதிலளிக்கவில்லை.
''முடிஞ்சுதா..??'' அவளை நெருங்கிப் போனான்.
''கிட்ட வராதீரும்.. அங்கனவே நில்லும்!" அதட்டினாள் கடுப்பில். கூடவே வலி வேறு.
''சரி.. சரி.. முறைக்காத கிணத்தடியில் வந்து சரசம்மா பண்ண போறேன்?'' இடக்காக கேட்காவிட்டால் அவன் வீரா இல்லையே!!
''கிட்ட வந்தீரும்.. வகுந்திடுவேன். ஏற்கனவே மச கடுப்புல இருக்கேன்!'' தன் காலை இடுப்பை குனிந்து பார்த்துக் கொண்டாள்.
''தெரியல.. தெரியல..!'' என்று சிரித்தான் கணவன்.
"ம்ம்ம்.." என்று புரியாமல் பார்த்தாள்.
''நீயி குனிஞ்சு பார்த்தியே.. அங்கன எந்த ஈர வெங்காயமும் தெரியல.. இடுப்பு மடிப்புல ஒரு மச்சம் இருக்குமே அது கூட சரியா தெரியலடி!'' என்றான் கள்ள புன்னகையோடு.
''ச்சீ.. பொறுக்கி!!'' முணுமுணுத்து திரும்பி கொண்டாள்.
"ஹான்.. சரியா கேட்கல.. திரும்ப சொல்லு?" என்றவன் அவள் முதுகுக்குப் பின்னே நின்றிருக்க..
திடுக்கிட்டு திரும்பியவள்
சோப்புத் தண்ணீரில் வழுக்கி..
அவன் மேலே விழுந்தாள். பூங்கொத்தாய் விழுந்தவளை ஒற்றை கையால் பற்றி நிறுத்தினான் அவன் நெஞ்சோடு!!
அவனிடமிருந்து விலகி
முழங்கால் தெரிய.. இடுப்பில் தூக்கி சொருகியிருந்த புடவையைக் கீழே இழுத்து விட்டாள்.
''ஹா.. ஹா.. ஏய்… நாந்தேன் தெரியலேன்னு சொல்றேன் இல்லடி பெண்டாட்டி..??'' அவளை விடுத்தவாறே சீண்டினான்.
''ச்சீ .. ப்பே..!! உனக்கெல்லாம் அறிவே வராது" என்றவளிடம், "உம்ம கிட்ட இருந்தா கொஞ்சம் கொடுக்கிறது. கடனாத்தேன். இராவு திரும்ப தந்திடுறேன் புள்ள" சிரித்துவிட்டுச் சொன்னவனை பார்த்தவளுக்கு பத்திக் கிட்டு வர..
"வீரா.. ஓடிப்போய்ரும்!!" என்றாள் ஆத்திரத்தோடு.
"அதெல்லாம் முடியாது. இங்கன தான் இருப்பேன்" என்றான் அலும்போடு.
''அப்ப சரி.. நீயி பாட்டுக்கு பேசிக்கிட்டு இரு.. நானே வரேன்" என்ற செல்ல இருந்தவளை கைகளை பிடித்து நிறுத்தியவன், "குளிக்க ஹெல்ப் பண்ணுடி.. ஒத்த கையால ஒன்னும் பண்ண முடியல" என்றான் பாவமாக.
"நேத்து நியாபகம் இல்லையோ? அப்ப மட்டும் ஒத்த கையால விளையாண்டீரு!" என்றாள் கையில் வைத்திருந்த பக்கெட்டை கடுப்பில் அவன் காலில் போட்டப்படி..
"ஆஆஆ… ராட்சசி... ராட்சசி!! இப்படி பண்ணுறியேடி!! காலு போச்சு.. ஏற்கனவே கை போச்சு" என்று போலியாக வலித்தது போல கத்தியவனை பார்த்து உதட்டை சுழித்தாள் பெண்!
"எனக்கு வேல இருக்கு. துணிகள தொவைச்சிட்டு வந்தர்றேன். நீ.. நீ போ" என்றாள் கூச்சமாக..
''அவசரமில்ல மெல்லவே வா.. அதுவரை நானும் இங்கனவே இருக்கேன்!!'' அவள் பக்கத்தில் போய் நின்றான்.
''அய்யோ.. போ யா.. இங்க நிக்காத.. எனக்கு.. எனக்கு.." போ என்றால் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறானே என்று ஆயாசமாக இருந்தது அவளுக்கு. கூடவே அவளது உடல்நிலை வேறு படுத்தி எடுக்க.. எரிந்து விழுந்தாள் அவனிடம்.. "யோவ்.. போ யா!" என்று!!
''நீயி தொவைடி செல்லம்!! நான் பாட்டுக்கு இப்படி.. ஒரு ஓரமா நிக்கறேன். இல்ல உனக்கு உதவுறேன்'' என்றவனை பார்த்து அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.
''நீயி இங்கன நின்னா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும்.. வேலையே ஆகாது!!'' அவனைப் பார்த்து சொன்னாள்.
''நா உன்னைய சைட் மட்டும்தான்டி செல்லம் அடிப்பேன்! வேற ஒன்னும் பண்ண மாட்டேன்! யூ கண்டினியூ பொண்டாட்டி!'' என்றான் விடாப்பிடியாக..
''ம்கூம்.. நீ போ..!!''
''சரி.. எனக்கு ஒரு கிஸ் குடு போறேன்..!!'' என்றான் வீரா.
''தெரியும்.. நீ இப்படி ஏதாவது லோயாய் தனம் பண்ணுவேன்னு. ஒழுங்கா ஓடிடு!!" எனச் சிடுசிடுத்தாள்.
''தெரியுதுல்ல..?? அப்ப கொடு..!!'' அவள் பக்கத்தில் போய் ஈரமாக இருந்தவளின் கையை பிடித்தான்.
"சொன்ன புரிஞ்சு தொல வீரா.. நான் வீட்டுக்கு தூரம். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீயி இப்படி யேன் பக்கத்துல உரசி உரசி நிக்குறது" என்றாள் எங்கோ பார்த்து..
"அதுக்கு ஏன்டி சமஞ்ச புள்ள கணக்கா திரும்பி நிக்குறவ.. நீ சமைஞ்சதையே உன் கிட்ட சொன்னதே நாந்தேன்!" என்றவனின் பார்வை திடுக்கிட்டவளின் பார்வை கவ்வி பிடிக்க.. இருவர் விழிகளின் வழி அந்த நாள் விரிந்தது.
வீராவுடன் ஜெகன் தர்மா கல்லூரி பயில மதுரைக்கு சென்று விட.. விடுமுறை நாட்களில் மட்டுமே ஊருக்கு விஜயம்.
சஞ்சயனோ அருகிலுள்ள கல்லூரியிலேயே படித்தான். அவன் கல்லுாரி செல்லும் போது வழக்கம்போல அஸ்திராவை அழைத்துக் கொண்டு சைக்களில் தான் செல்லுவான். ஐவராக இருந்தவர்கள் மூவராக சுருங்கிய போதும் அவளுக்கு வருத்தமில்லை. ஏனென்றால் வீராவோடு செல்லும் போது இவள் வாயே திறக்க முடியாது. ஏதாவது பேச வாய் எடுத்தால் வீரா நக்கலாக பதிலடி கொடுப்பான் இல்லை அவளுக்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் அவனே மற்றவர்களோடு வாய் அடித்தப்படி வருவான்!! இவள் வாயை அடைத்த படி!!
அதனால் வீராவின் மீது சிறு பிராயத்தில் இருந்தே சொல்ல தெரியாத வெறுப்பு!! ஆனால் அதே மனது தான் ஆபத்துக் காலங்களில் அவனின் பாதுகாப்பை அரவணைப்பை நாடும்!! அது ஏனோ தெரியாது.. புரியாது அவளுக்கு!! மனம் ஒரு விசித்திர ஜந்து!! அது பேசும் பாஷையை.. யோசிக்கும் எண்ணங்களை அதுக்கு மட்டுமே புரியும்!!
அதனால் இப்போது எல்லாம் சஞ்சயனுடன் உரக்க பேசி சிரித்துக் கொண்டே தான் செல்லுவாள் பள்ளிக்கு. அவனும் அவள் பேசுவதற்கு எல்லாம் தலையை தலையை ஆட்டிக் கொண்டே செல்வான்.
அன்றும் அப்படிதான் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே செல்ல.. எதிரே தன் புல்லட்டில் வந்துக் கொண்டிருந்தான் வீரா!!
மூன்றாண்டுகளில் அவனின் உடல் உருவ அமைப்பில் நல்ல மாற்றம்.. விடலை பையனாக இருந்தவன் இப்போது சற்றே முறுக்கேறிய சதையோடு ஆண் மகனாய் காணப்பட்டான். சஞ்சயனுக்கு வீரா அடிக்கடி விடுமுறைக்கு வரும் போது ஜெகனோடு பார்த்து பழக்கம். தீராவோ அவனை பார்த்து வெகு நாட்களாக ஆகிவிட்டது. அவ்வப்போது திருவிழா நாட்களில் மட்டுமே பார்ப்பாள். அதுவும் தோழிகளோடான அரட்டையில் இவனை சரி வர கவனித்து இல்லை.
இப்போது தங்கள் சைக்கிளை வழி மறித்து நிற்கும் இவன் யார்? என்று யோசனை ஒரு பக்கம்!! எவ்வளவு தைரியம் என்ற கோபம் மறுபக்கம்!!
"யேன் வண்டிய மறிக்குற அளவு உனக்கு தைரியமா? அவ்வளோ பெரிய அப்பாடக்கரா நீயி? எங்க அப்பாரு ஆரு தெரியும்ல? அவருகிட்ட சொன்னேன் மறிச்ச உன் வண்டியையும் உன்னையும் உரு தெரியாம ஆக்கி புடுவாரு? ஆளு தெரியாம விளையாடுற நீயி? ஒழுங்கா வழி விடுல!!" என்று ஏகத்துக்கும் இவள் மரியாதையை காற்றில் பறக்க விட்டே இவள் பேச.. சஞ்சயன் எவ்வளவோ இடையில் அவளை நிறுத்த முயன்றும் முடியவில்லை.
கண்களால் சஞ்சயனை கட்டுபடுத்திய வீரா அவள் பேசட்டும் என்று கையை கட்டிக் கொண்டு பார்த்திருந்தான்.
"எம்புட்டு நேரமா பேசிக்கிட்டே இருக்கேன். கொஞ்சமாச்சும் காதுல வாங்குறானா பாரு!!" என்று அவள் மீண்டும் பேச.. வண்டியை ஸ்டாண்ட் போட்டு "அடிங்க!! என்ன வர வர மரியாத தேயுது.. பல்ல கழட்டி கையில கொடுத்துபுடுவேன். ஜாக்கிரத!! யாருகிட்ட!! உங்க நொப்பன் பெரிய கொம்பனா? எங்க வர சொல்லு அந்த கொம்பன!!" என்று சட்டையை மடிக்கி கொண்டு வீராவேசத்தோடு வந்தவனை பார்த்து பயந்து மிரண்டு போனவளுக்கு அப்போது தான் புரிந்தது அவன் யாரென்று!!
அந்த குரலும்..
அதில் தெறிக்கும் நக்கலும்..
உச்சி கோபமும்..
போதுமே அவன் யாரென்று நச்சென்று அவளுக்கு உரைக்க!!
"அண்ணே.. விடுணே!! நீ யாருன்னு தெரியாம பேசிட்டா.." என்று சஞ்சயன் அவளுக்கு பரிந்து வர..
"நீயி என்ன அவளுக்கு மவுத் பீஸா?? அதெப்படி யாரு என்னான்னு தெரியாம வாய் விடலாம்? பொம்பள புள்ளைக்கு வாய் அடக்கம் வேணாம்? அது என்ன பெத்தாம் பொதுவா எல்லாரையும் அவனே இவனேனு பேசுறது? பத்து தானே படிக்கிற.. அதுக்குள்ள உனக்கு இம்புட்டு அதப்பு திமுரு ஆகாது! நான் ஊருல இல்லனதும் உனக்கு கூடிப் போச்சு.. இரு.. சாய்ந்தரம் ஸ்கூல் முடிஞ்சு இந்த பக்கம் தான் வருவ.. அப்ப இருக்கு உனக்கு?" என்று சற்று தொண்டை உயர்த்தி பேசிவனின் உயரமும் கோபமும் அவளை பயம் கொள்ள செய்ய.. கோழிக்குஞ்சு போல் பயந்து சஞ்சயன் பின்னே ஒழிய.. அதற்கும் அத்தணை கோபம் வந்தது அவனுக்கு.
இது நாள் வரை அவனிடம் தஞ்சம் கொள்ளுபவள் இன்று சஞ்சயன் பின்னே ஒதுங்குவதை பார்த்து ஆண் மகனாய் பொறாமையும் ஹார்மோன்களின் ரசவாதமும் சேர்ந்து கொள்ள..
"தள்ளி போ.. அதென்ன ஆம்பள புள்ள கிட்ட தொட்டு தொட்டு பேசுறது.. என்ன வளர்ப்பு உன் வளர்ப்பு? அது சரி.. உங்க அம்மைய தான் ஊருக்கு தெரியுமே!!" என்று கோபமாக ஆரம்பித்து நக்கலாக முடித்தான்.
அதில் தன் அன்னையை பற்றி சொன்னவுடன் அவளுக்கு ஆத்திரம் மிக.. "போடா.. எங்க அம்மாவ பத்தி பேசின மண்டைய உடைச்சிபுடுவேன்!" என்றவள் சிட்டாக பறந்து விட்டாள் சைக்கிளில்..
"அடியே நில்லுடி! போடாவாம்ல.. இருடி உனக்கு இருக்கு! சாயந்தரம் வா.." என்று இவனும் கோபத்தோடு கத்த.. பார்த்திருந்த சஞ்சயன் மீண்டும் அவளுக்காக மன்னிப்பு கேட்டான்.
"சரி சரி விடுடா.. அவளுக்கு வாய் துடுக்கு ஜாஸ்தியாகிடுச்சு.. நீ சொல்லு உனக்கு காலேஜ் படிப்பு எப்படி போகுது? நீயும் எங்க கூட சேர்ந்திருக்கலாம்.." என்று பேச ஆரம்பித்தவன் பதினைந்து நிமிடங்கள் கழித்தே அவனை விட்டான். அதற்குள் அருகே உள்ள பள்ளிக்கு தீரா போய் சேர்ந்திருப்பாள் என்று அவனுக்கு தெரியும். அது தானே அவனுக்கும் வேண்டியது!!
"ஏன்டா இன்னும் அவ எதுக்கு சைக்கிள வரா.. சமைஞ்ச புள்ளைய அனுப்ப மாட்டாரே அவ அப்பன்" என்று இவன் சந்தேகம் கேட்க..
"அவ இன்னும் சமைல ணே.. அதேன் ஊர சுத்திக்கிட்டு திரியுது. அத்தையும் மாமாவும் கொஞ்ச நாளு தானேனு சும்மா இருக்காக.. இல்லனா காருல தான போவா மாகராணி!!" என்று கூறயவன் "நேரம் ஆகிடுச்சு அண்ணே நான் வரேன்" என்று காலேஜுக்கு சென்றான் சஞ்சயன்.
மாலை வேளை.. எப்போதும் அவள் வரும் வழியில் காத்திருந்தான் வீரா.
காலையில் சஞ்சயனோடு ஒன்றாக செல்லும் அஸ்திரா மாலையில் தனியாகத்தான் வருவாள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக பழகிய வழித்தடம், கூடவே அவளது அப்பா பெயரை கேட்டாலே அவளை நெருங்குபவர்கள் கூட பத்தடி பறந்து போய் விடுவார்கள். அதனால் பயமில்லை!!
சஞ்சயன் கல்லூரி செல்லும் இந்த இரண்டு ஆண்டுகளாக இவளுக்கு தனியே வந்து தான் பழக்கம். அன்றும் அவ்வாறு வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு சந்து போன்ற அமைப்பு இருக்கும். ரோட்டில் சுற்றி செல்வதை விட இதில் சற்று சீக்கிரம் சென்று விடலாம் என்ற நினைப்பில் அவள் திரும்பினாள்.
இது அவர்கள் பொதுவாக வரும் வழி. அதனால் இவள் எப்படித்தான் வருவாள் என்று அறிந்திருந்த வீராவும் குறுக்கே தன் பைக்கை நிறுத்தி அதில் ஒரு காலை குத்துக்காலிட்டு மற்றொரு காலை அதன் மீது போட்டு ஒய்யாரமாக படுத்திருந்தான்.
காலையில் இருந்து வீராவின் கோப முகமே அவளது மனதில் வந்து வந்து போக.. நெஞ்சோ திக் திக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. ஒருவித அசூசை உணர்வு அவளுக்கு!! அன்று முழுவதும் பாடத்தில் கவனம் இல்லை.. கவனம் மொத்தமும் வீராவின் பேச்சிலேயே அவனது கோபத்திலேயே!!
இது கண் முன்னாலேயே வந்து நின்றவனை பார்த்து அவளுக்கு எங்கே அடித்து விடுவேனோ என்ற பயத்தில் சட்டென்று சைக்கிளை போட்டுவிட்டு வந்த வழியே அவள் ஓட.. சும்மா மிரட்டுவதற்காக தான் அங்கு இருந்தான் வீரா. இவள் செயலில் "நிஜமாகவே பயந்துட்டாப் போல!!" அவளையே சிரிப்புடன் அவனும் தொடர்ந்து போக.. ஓடியவள் போன வேகத்திற்கு வந்து இவனை நோக்கி ஓடி வந்தவள், "மா.. மா.. மா.. மா.." என்று அழைத்துக் கொண்டே இவன் மீது மோதி விழுந்தாள்.
"என்னது மாமா வா?" என்று சற்று அதிர்ச்சியோடு இவன் திரும்பிப் பார்த்தால் அவளை துரத்திக்கொண்டு வந்தது பெரிய கொம்போடு ஒற்றை மாடு ஒன்று!! அன்று போல்..
அவனும் நிலைமையில் கையில் எடுத்தவவன் அவளை இறுக்கி அணைத்தவாறு பக்கவாட்டில் உருள.. அவனது மார்பில் அவளது மார்பு புதைய...
அவள் உதடுகளும் அவன் உதடுகளும் உரசிக் கொள்வதைப் போல மிகவும் நெருக்கமாக இருக்க.. இருவரின் வெம்மையான மூச்சுக் காற்று இருவரின் மூக்கை தொட்டு தொட்டு மீள.. அப்போதும் அவளை விட்டுவிடாமல் தன் பெரிய சிறகெனும் இரு கரங்களுக்குள் அவளைப் பொத்தி வைத்திருந்தான் வீரா பாதுகாப்பாக...
மாடு சிறிது நேரம் அங்கேயும் எங்கேயும் தேடி பார்த்துவிட்டு தன் வழியே ஓடிவிட்டது. மெல்ல அவளை எழுப்பி தானும் எழுந்தான். அவளோ பயத்தின் உச்சியில்!! அவனின் சட்டையை இறுக பற்றிக் கொண்டிருந்தாள்.
"அது ஓடிடுச்சு தீரா.. சரியாகிடுச்சு வா போலாம்" என்று அவள் முதுகை நீவி விட்டு அவளை சுற்றி வளைத்து அழைத்து வந்து சைக்கிளை எடுத்து நிறுத்தி விட்டு அவளிடம் கொடுக்க.. அப்போது தான் கவனித்தான் அவளின் பின்னிருந்த சிவப்பு கறையை.. எங்கேயும் அடி பட்டுவிட்டதோ என்று பயந்து அவளிடம் சென்றவன் விசாரிக்க.. "இல்ல.. ஒன்னும் அடிப்படல!" என்றவளின் முகம் வலியில் சுருங்கி.. "இங்கன தேன் வலிக்குது" என்று அவளது இடுப்பு அடிவயிற்றை காட்ட.. இரண்டு தங்கைகளோடு பிறந்தவனுக்கு அவளது நிலை புரிந்தது.
மெல்ல அவளை தன் தோளோடு அணைத்து "அது.. சரியா போய்டும்.. அதோட இது நல்ல விஷயம் தேன்! இயற்கை நிகழ்வு கூட… பயப்பட கூடாது!" என்று அவளிடம் மெல்லிய குரலில் அவளது நிலையை கூற.. புரிந்தவள் விழி விரித்தவள் பார்த்து அவனிடமிருந்து தயங்கி பயந்து விலகிப் போக எத்தனிக்க..
"ம்ப்ச்.. இருடி.. நான் ஒன்னும் ஒன்ன பண்ண மாட்டேன்" என்றவன் தன் சட்டையை கழற்றி கொடுத்து அவளை அணிய சொன்னான். வாங்க மறுத்தவளை கண்களால் காட்டி காரணம் கூற.. மறுப்பின்றி வாங்கி அணிந்துக் கொண்டாள்.
சைக்கிளை அவளோடு தள்ளிக் கொண்டு வந்தவன், தெரு ஆரம்பிக்கும் இடத்தில் ஜெகனை வரச்சொல்லி அவனோடு அனுப்பி வைத்தான்.
"இப்ப சொல்லுடி.. என் பொண்டாட்டி! அப்பவே மாமன் தான் உனக்கு சமைஞ்சவுடன் துணிக் கொடுத்தது. இந்த மாமன் துணிய தேன் முதல்ல உடுத்துனவ.." என்று கர்வமாக வழக்கம் போல இடது கையால் மீசையை முறுக்கியவனைக் கண்டு உள்ளுக்குள் ஒரு உணர்வு தோன்றத்தான் செய்தது அஸ்திராவுக்கு.
உண்மைதான்!! அன்று அவன் செய்தது எந்த ஆணும் செய்யாத ஒரு செயல். தங்கைகளுடன் பிறந்து எத்தனை அண்ணன்கள் மற்ற பெண்களையும் தங்கையாக பாவித்து செய்கிறார்கள். சிறு வயதில் முதிர்ந்த பக்குவம் வீராவுக்கு உண்டு. ஆனால் என்ன கூடவே இந்த எகத்தாளமும் கேலியும் நக்கலும் அவன் கூடவே பிறந்தது.
அதேபோல தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற வறட்டு பிடிவாதம் உண்டு அஸ்திராவுக்கு.
அதனால் அவன் சொன்னதை ஒப்பாதவள் "அன்று நீரு குறுக்கே வரலனா நிம்மதிய வீட்டுக்கே போய் சேர்ந்திருப்பேன். அப்படி பாதையில நான் அப்படி ஆனதுக்கு நீரு தான் காரணம்" என்று அவன் மீது பழியை போட்டவளை கண்டவனின் கண்களில் மின்னல் தெறித்தது.
"ஓஹ்.. அப்போ மாமன பார்த்துல தேன் நீயி சமைஞ்சிட்ட.. வேற லெவல் போ தீரா குட்டி!!" என்று அவள் கன்னம் கிள்ளி இவன் கொஞ்ச… "விடு.. பொது இடத்துலே.." அவளோ லேசாக நெளிந்தாள்.
''யேன் பொண்டாட்டிய நான் என்ன வேணா செய்வேன்!"' அவளின் பட்டுக் கன்னத்தில் தன் கன்னம் வைத்துத் தேய்த்தான்.
''யோவ்.. போ யா!" என்று எரிந்து விழுந்தாலும் இப்போது அவளது குரலில் முன்னேயிருந்த கோபம் இல்லை.
''யேன் பொண்டாட்டி என்னைய பத்தி சொல்லும் போதே சும்மா ரொமான்ஸ் மூடு கிர்ருனு ஏறிது டி யேன் மைனா!!'' என்று அவள் கன்னம் தேய்த்து.. அவள் முகத்தை தன் பக்கம் இழுத்து.. அவளது மெல்லிய கவர்ச்சியான உதட்டில் தன் உதட்டைப் பொருத்திய வேளையில்...
''மச்சான்.. நான் வந்திட்டேன். நீ கவலைப்படாத..!!'' என நந்தி மாதிரி வந்து நின்றான் தர்மா!!
அவனை தள்ளிவிட்டு சடாரென விலகினாள் அஸ்திரா. சட்டென்று உடுப்பு மாற்றும் அறையில் புகுந்து கொண்டாள். வீராவோ அவனை முறைத்தான்.
"இப்போ எதுக்கு இவேன் முறைக்கியான்?" என்று தர்மா வர..
"எதுக்கு காலையிலேயே இங்கன விஜயம் மாப்புள?" என்றான் கடுப்பை உள்ளடக்கிய குரலில் வீரா..
"வேற எதுக்கு மச்சான்? உனக்காக தான்!! ஒத்த கையில் அடிபட்டு இருக்குல எப்படி குளிப்ப.. தங்கச்சி பாவம்ல உன்னைய குளிப்பாட்டி விட முடியுமா ஒத்தையா? அதேன் காலையிலேயே.. வெளள்ளனவே.. சீக்கிரமாவே.. வந்துட்டேன். சரி சரி.. பாசமா பார்க்காத மச்சான். உக்காரு!!" என்று அவனை கேட்க கூட இல்லாமல் தரதரவென்று இழுத்து அந்தக் குளியல் கட்டையில் உட்கார வைத்து.. சரசரவென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து.. சடசடவென்று அவனது தலையில் ஊற்றி.. பரபரவென்று அவனது உடம்பைத் தேய்த்து.. வளவளவென்று பேசிக் கொண்டே.. கலக்கலப்பாக்கினான் அவ்விடத்தை!!
ஒருவழியாக வீரா குளித்து முடித்து வீட்டுக்கு செல்ல.. அங்கே வீராவை விசாரிக்க என்று வந்து அமர்ந்திருந்தான் கண்ணபிரான்.. இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்!!
தீருமோ தாகம்!!
