1
புதிய பாதை..
மழை ஜோவென்று பெய்து கொண்டிருந்தது, எங்கே செல்கிறோம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்களில் வழியும் கண்ணீர் பார்வையை மறைத்தாலும், இலக்கின்றி வெறித்தபடி சென்னை செல்லும் அந்த பேருந்தில் அமர்ந்திருந்தாள் ஆத்மிகா, பின் இருபதில் இருந்தாள் அவள்..
வெளியே தெரிந்த கும்மிரட்டை போலவே அவள் வாழ்க்கையும் ஆகிவிட்டதோ என்று மனம் ஓலமிட்டு கொண்டிருந்தது. இனி என்ன செய்யப் போகிறாள் ஆனால் பெரிதாக சபதம் போட்டாளே..
சவால் விடக்கூடிய நிலையிலா அவள் இருக்கிறாள்?, ஆனால் அதை சவாலாக ஏற்றுத்தானே கழுத்தைப் பிடித்து தள்ளினான் அவள் கணவன், ஜெயிக்க முடியுமா? ஜெயிப்பாளா தெரியவில்லையே..
பஸ்ஸில் ஓடிக்கொண்டிருந்த பாடல் அவளின் மனதை மேலும் ரணமாக்கிக் கொண்டு இருந்தது. இனி என்ன செய்யப் போகிறாள்,
“”””தண்ணியில மீன் அழுதா
கரைக்கொரு தகவலும் வருவதில்ல,
எனக்குள்ள நான் அழுதா
துடைக்கவே எனக்கொரு நாதியில்ல,
என் கண்ணீரின் ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே,
சபதம் சபதம் என்றே
சலங்கை, சலங்கை பாடுமே
மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு,
விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு””””
இதழில் ஒரு விரக்தி புன்னகை ,ஆனாலும் அந்த பாடலை கேட்கும் பொழுது ஜெயிக்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் எப்படி..
மனமோ இதுவரை அவள் கடந்துவந்த கசப்பான வாழ்க்கை பாதயை பற்றி சிந்தித்தபடி இருந்தது...
எத்தனை துன்பம்,அவமானம்,ஏளனம்,அந்தோ பரிதாபம் என்று பழகிய பலர் அவள் மேல் இரக்கப்பார்வை செலுத்த, அதை ஏற்கவும் முடியாமல், அந்த சூழலில் இருந்து வெளியேறவும் வழி அறியாமல் நொந்த அவள் மனம், அப்பப்பா எத்தனை வருடம்...
அவள் வாழ்க்கையை வீணாக்கி பாழாக்கிய நீண்ட நெடிய ஐந்து வருடம்.. இனி எல்லாமே முடிந்ததா என்று தவித்து மருகிய இரவுகள் ஏராளம், தூங்காமல் அவள் தலையணை நனைந்த நாட்கள் கணக்கில் இல்லை...
பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் அவளுடையது, எல்லாம் விசாரித்து தான் செய்தார்கள்.. யார் எழுதிய பாடலோ தெரியவில்லை ஆனால் இப்போது நினைவில் வந்தது..
"புருஷன் பொண்டாட்டி பொருத்தம் தான் வேணும்,
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்,
அமஞ்சா அது போல கல்யாணம் பண்ணு,
இல்ல நீ வாழு தனியாள நின்னு.. "
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்,
இருவருக்கும் ஏகப்பட்ட கருத்துவேறுபாடுகள். ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் என ஒரு வருடத்திற்குள் முடங்கிய மணவாழ்க்கை..
பேருக்காக,ஊருக்காக,பெற்றோர்க்காக,உற்றார்க்காக என இழுத்து இழுத்துபிடித்து கடைநிலையில் இனி தாங்காது இந்த திருமண பந்தம் என்று பிரிய நேர்ந்தது..
ஆடம்பரமும் அழகும் பணமும் தான் பெரியது,அது தான் வாழ்க்கைக்கு முக்கியம் என்ற கருத்து கொண்ட கணவனும்...
அன்பும்,காதலும்,அக்கறை,ஒழுக்கம் தான் அத்தியாவசியம் வாழ்க்கைக்கு என்று கருதும் மனைவியும் இணையும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்..
திருமணம் ஆனதிலிருந்தே பிரச்சினை போராட்டம் என்று சோர்ந்து போனவள், உன்னை பழிவாங்கவே இன்னொருத்தியை நாடினேன் என்ற வார்த்தையில் உடைந்து போனாள்.
அந்த தொடர்பு இன்றும் நீடிக்கவே, இனி தான் அங்கு இருந்தால் அது தன்னை தானே அசிங்கப் படுத்தி கொள்வதற்கு சமம் என்று புரிந்தவளாய்... அங்கிருந்து வெளியேற முடிவு செய்தாள்..
அவனுக்காகவே வாழ்ந்தாள்,அவளுடைய இன்பம் துன்பம் எதிலும் அவனில்லை,ஆனால் அவனுக்கு எல்லாமுமாய் இருக்க அவள் விரும்பினாள். அவனுக்காக எதையெல்லாம் இழந்திருப்பாள்... அவள் நிம்மதி,சந்தோஷம்,ஏன் பிடித்த உணவுகள்,அவளுடைய கெரியர் ..அவள் வாய்விட்டு சிரித்தே எத்தனை வருடங்கள் ஆனது.
இத்தனையும் சகித்து,காலம் ஒரு நாள் அவளுக்கு சாதகமாக மாறும்.. அதுவரை பொறுத்திரு என்று பலர் அறிவுரை கூற... அதற்கும் கீழ்படிந்து அமைதி காத்தாள்..
ஆனால் காலமும் மாறியது,சாதகமாக அல்ல... மகாபாதகமாய்.. முகத்தில் கசந்த புன்னகை ஒன்று தோன்றியது..
யாருக்கும் பாரமாய் இருக்க கூடாதென்று முடிவெடுத்து,இனி அவன் முகம் பார்க்கும் வாய்ப்பே வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
ஆனால் விவாகரத்து கொடுக்க வேண்டும் எண்ணம் அவனுக்கு இல்லவே இல்லை ,தன்னைப்போல ஒரு ஏமாளி அவனுக்கு பணிவிடை செய்து கொண்டு இருக்க, வேறு யாரும் இருக்க மாட்டார்களே,
அதனால் அதற்கு அவன் மறுத்துக் கொண்டே இருந்தான், தன் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அன்பாய் இருப்பது போல நடித்தான், ஆனாலும் அவன் ரகசிய தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தது, அவன் தன்னை உபயோகப்படுத்திக் கொள்கிறான் என்று ஒரு கட்டத்தில் புரிந்ததும் அவனை விட்டு விலகத்தான் நினைத்தாள்.
உற்றமும் சுற்றமும் சேர்ந்து ஆயிரம் அறிவுரைகள், ஆனால் வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு தான் தெரியும் அது நரகம் என்று..
தன்னுடைய இயலாமையையும் இல்லாமையும் பயன்படுத்திக் கொண்டு தன்னை மற்றவர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்தவளால் அங்கே வாழவே முடியவில்லை, மூச்சுக்காற்றுக்கு தவிப்பது போல இருந்தது.
ஒரு கட்டத்தில் பொறுக்கவே முடியாமல், “எனக்கு விவாகரத்து வேணும், கண்டிப்பா வேணும் ,நீங்க கொடுக்குறீங்களா இல்லையா, நானே அப்ளை பண்றேன்” என்று தான் இந்த முடிவை எடுத்தாள்.
அவள் கணவன், “அவ்வளவு திமிராடி உனக்கு, போறதுக்கு போக்கு இல்லாத நாய், ,பார்க்கின்றேன்டி நீ என்னதான் பண்றனு பார்க்கிறேன், எப்படி இருந்தாலும் என் கால் தூசுக்கு சமமா நீ, எப்படியும் என்கிட்ட தானே வந்து ஆகனும்,போய் தொலை” என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ள,
அவன் குடும்பத்தினரும் “என்னமோ உலக அழகி என்று நினைப்பு, போனா போகுதுனு என் புள்ளயை இந்த சீக்காளிக்கு வாழ்வு கொடுத்து கூட வச்சுட்டு இருக்கான், என்னமோ டைவர்ஸ கேட்டுட்டு இருக்க,
இங்கே இருக்கிறதுனால தான் ஒழுங்கா சோறு சாப்பிடுற, வெளியே போனா உன்னால என்ன பண்ண முடியும்?” என்று தரை குறைவாக ஆக பேசினார்கள்,
இப்படி இருக்கும்போதே இவ்வளவு பண்ற, இன்னும் கொஞ்சம் ஆளு அழகா அம்சமா இருந்தா அவ்வளவு தான் போலயே.. என்று வசைப்பாடினார்கள் .
“அண்ணா இந்த நேரத்துக்கு போய் வெளிய அனுப்புற, பொழுது விடிந்த பிறகு அனுப்பு” என்று பரிந்து கொண்டு வந்த தங்கையிடம்,
“சுற்றி பத்து ஆம்பளைங்க இருந்தாலும் இந்த சீக்காலி மேல ஒருத்தனுக்கும் ஃபீலங்ஸ் போகாது, ஆளை பாக்குறதுக்கு ரசிக்கிற மாதிரியா இருக்கிறா? இவளை பார்த்தால் தான் இருக்கிற இருக்கிற ஃபீலிங்ஸ் காணாமல் போகுது, ஆளையும் மூஞ்சியும் பாரு” என்று கேவலமாக பேசினான் அவள் கணவன்.
அந்த வார்த்தைகள் எல்லாம் அவள் மனது கேட்டு கேட்டு மறுத்துப் போன விஷயங்கள், கண்ணீரை துடைத்தபடி திரும்ப அந்த பஸ் எதிரில் போடப்பட்டிருந்த கண்ணாடியில் தன் பிம்பம் தெரிந்தது,
உயிர்ப்பே இல்லாத கண்கள் ,ஒட்டி இருந்த கன்னம், கன்னத்தில் எலும்புகள் ,தூக்கிக்கொண்டு தெரிந்திருந்தது, வறண்டு போன சருமம், உதிர்ந்த தலை முடி, கழுத்தில் ஒரே ஒரு செயின், தாலி செயினும் கழட்டி வைத்து விட்டு தான் வெளியே வந்தாள்.
கழுத்து எலும்புகள் தூக்கிக்கொண்டு தெரிந்தது , மெலிந்த தேகம், ஒரு எலும்புக்கூடிற்கு புடவை கட்டிக்கொண்டு வந்தது போல் இருந்தது அவளது தோற்றம் ,
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு திருமண வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்த பரிசு இதுதான், தன்னையே முற்றும் இழந்திருந்தாள் பெண்ணவள் ,
ஆத்மிகாவிற்குள் ஆவி ஒன்று இருக்கிறதா? என்பது போல உயிர்பே இல்லாத ஒரு தோற்றம், அவன் பேசிய அத்தனையும் உண்மைதான். யார் பார்த்தாலும் ஏன் இப்படி இருக்கிற என்று பரிதாபப்படக்கூடிய நிலையில் இருந்தாள் அவள்,
ஒரு பெண்ணுக்கு நல்ல கணவனாவது அமைய வேண்டும், அல்லது குழந்தையாவது இருக்க வேண்டும், பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றிகரமானதா இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான், ஆனாலும் குழந்தைகளுக்காக பொறுத்துப்போவார்கள், இங்கே அதுவும் கிடையாது,
மனதில் ஆறாத ரணங்கள் நிறைய இருக்கிறது, எல்லாவற்றையும் ஒரேடியாக நினைத்துப் பார்க்க சலிப்பாக இருந்தது,
நினைத்து நினைத்து வெம்பி வெதும்பி தானே இந்த நிலைமையில் இருக்கிறாள், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் தேக்கி வைத்த காயங்கள் அவளையே உருக்கி இருந்தது,
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை நினைத்துப் பார்த்தாள், டேட்ஸ் லிட்டில் பிரின்ஸ் ஆக இருந்த அந்த காலம் மீண்டும் கைக்கு வராது ,
காரணம் அந்த தந்தையே இல்லையே, தந்தையை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் மீண்டும் அதிகரித்தது, தன்னை தனக்காகவே மட்டும் நேசிக்கும் உறவுகள் இப்போது இல்லையே,
எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது, “நேசிப்பவர்கள் எல்லாம் அருகில் இருப்பதில்லை, அருகில் இருப்பவர்கள் எல்லாம் நம்மை நேசிப்பதும் இல்லை, எத்தனை உண்மையான வரிகள்”
இப்படி நினைத்து நினைத்து கழிவிரக்கம் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை, இருட்டில் இதையெல்லாம் யோசித்தால் பயம் தான் அதிகரிக்கும், இந்த உலகம் எத்தனையோ வித்தியாசமான மனிதர்களை கொண்ட உலகம், தனக்கும் ஒரு வழி இருக்கும், தளர்ந்து விடக்கூடாது என்று நினைத்தவள் உறங்குவதற்காக கண்களை மூடினாள்.
வெளியே மழையின் சத்தம் பேரிரைச்சலாக கேட்டுக் கொண்டே இருந்தது.
சென்னை அவள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருமா பார்
க்கலாம். புதிய பாதை பழைய ரணங்களை ஆற்றுமா? ஆத்மீகாவின் ஆவி உயிர்பெறுமா ? பார்ப்போம்..
வருவான்…
