41
இனி அஸ்திரா விஷயத்தில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று அவளது அன்னை முதல் வீராவின் அன்னை வரை சற்று முகம் தெளிவடைந்து அமைதியாக இருந்தனர்.
"இப்பவாது இந்த மருந்தை போட்டுட்டு வா கண்ணு.. பாரு ரத்தம் உறைந்து எப்படி இருக்கு பாரு.. வாடா ராசாத்தி!!" என்று வடிவாம்பாள் அஸ்திராவை அழைக்க..
"அத்த.. அவுக.. அவுக.. மாமா.." என்று கண்களில் கண்ணீரோடு அறுவை சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கும் அந்த அறையை அவள் சுட்டிக் காட்ட..
"என் புள்ள வீரன் கண்ணு!! அவனுக்கு எதுவும் நடக்காது!! இந்த கத்தி குத்தெல்லாம் அவனை என்ன பண்ணிடும் சொல்லு? அதுமட்டுமில்லாமல் இப்பதான் அவேன் வாழவே ஆரம்பிச்சிருக்கான். சாமி விட்டுடாது அவனை.. இந்த உலகத்திலேயே ஏன் அவேன் அப்பாரு என்னைய விட உன் மேலயும் உன் புள்ளை மேலையும் தேன் அவனுக்கு பாசம் அதிகம். உயிரையே வச்சி இருக்கியான். அவேன் உசிரு உங்ககிட்டே இருக்கும் போது அவனுக்கு என்ன ஆகும் சொல்லு?" என்று அவனின் வார்த்தைகளை அப்படியே சொன்ன வடிவாம்பாளை நிமிர்ந்து பார்த்தவள், ஆனந்தக் கண்ணீரோடு தலையாட்டினாள் "ஆமா.. அவரு உசிரு எங்க கிட்ட தேன் இருக்கு.. எங்க கிட்ட தேன் இருக்கு.. அவருக்கு ஒன்னும் ஆகாது!!" என்று சந்தோசத்தோடு அவள் கூற..
"அப்புறம் ஏன் கவலைப்படுறவ? போய் இதுக்கு மருந்து வச்சுட்டு வா" என்று அவரும் அவளை அழைத்து செல்ல முயல..
"இருங்கம்மா நான் கூட்டிட்டு போறேன்" என்று இம்முறை பூங்கோதையே அவளை அழைத்து செல்ல வந்தவள், "வா அண்ணி..!!" என்று அவளை அழைக்க ஆச்சரியத்தின் உச்சியில் அஸ்திரா.
வந்த இரண்டு மாதங்களாக தன்னிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசாதவள், அதுவும் இன்று மாலை அத்தனை பெரிய பேச்சுப் பேசியவள் அனைத்தையும் மறந்து அண்ணி என்கிறாளே என்று பார்க்க..
"நானும் சின்ன பொண்ணுதேன் அண்ணி.. புரியாம தெரியாம ஏதாவது பேசி இருப்பேன். மனசில் வெச்சுகாதே!! மனப்பூர்வமா தேன் மன்னிப்பு கேட்கிறேன்" என்று அவள் சொன்னதும், அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டு அவள் முன்னால் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்த அறைக்கு சென்றாள் நாத்தனாரோடு அஸ்திரா.
பூங்கோதையின் இந்த மாற்றத்தையும் அதற்கு அஸ்திதாவின் மன்னிப்பையும் பார்த்தவுடன் வடிவாம்பாளுக்கு ஏக நிம்மதி!! திரும்பி தன் மருமகனை பார்க்க அவனும் மெல்ல சிரித்து தலையை ஆட்டினான். இனி சின்னமகளை பற்றிய கவலையும் விட்டது என்று சந்தோச பெருமூச்சு வடிவாம்பாளிடம்.
அறுவைசிகிச்சை இன்னும் முடியாத நிலையில் இரண்டு கான்ஸ்டபிளை அந்த இடத்தில் பொறுப்புக்கு வைத்துவிட்டு கண்ணபிரான் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று விட்டான் வழக்கை பற்றி புகார் எழுத..
ஏற்கனவே கட்டப்பா காட்டு காட்டு என்று காட்டுவார். "இன்று எப்படி அந்த இடத்திற்கு சென்ற.. சொல்லு?" என்று கேட்டால், என்ன சொல்வது என்று தான் இம்முறை நேர்மையாகவே அறிக்கையை தயார் செய்தான்.
அதற்குள் இங்கே இருவருக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருவரையும் தனித்தனியாக ஐசியூ வரையில் வைத்திருந்தனர். அதுவும் அம்பலவாணனுக்கு வெட்டுப்பட்ட கையை திரும்ப ஒட்ட முடியாது என்று கூற.. இனி வாழ்நாள் முழுக்க வலது கை இல்லாமல் தான் அவர் வாழ வேண்டிய நிர்ப்பந்தம்!!
அவன் வருவதற்குள் இவளுக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து இருந்தனர். ஏனென்றால் ஏற்கனவே பலவித அதிர்ச்சியில் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவளை முழு ஓய்வில் வைத்து இருந்தனர்.
வீராவும் அங்கு மயக்க மருந்து உபயத்தில் நன்றாக மயக்கத்தில் இருக்க.. இருவரையும் தொந்தரவு செய்யாமல் இருவருக்கும் தர்மாவும் பூங்கோதையின் வடிவாம்பாளும் காவல் இருக்க மற்றவர்கள் வீட்டிற்கு சென்றனர். ஆனால்.. காதல் கொண்ட மனதோ அனைவரும் உறங்கியவுடன் திருட்டுத்தனமாக காதலை தேடி சென்றது.
மெல்ல கதவை திறந்து உள்ளே நுழைந்து வீராவை பார்த்தவளுக்கு மனம் ரணமாய் வலித்தது. ஒரு நாள் கூட அவன் இப்படி சோர்ந்து தொய்ந்து இருந்து அவள் பார்த்ததே இல்லை.. கால்களில் சக்கரம் கட்டாத குறையாக வேலை.. ஊர் காரியங்கள்.. நண்பர்கள்.. என்று திரிந்து கொண்டே இருப்பான். இன்று வதங்கிய கொடியாக மெத்தையில கிடப்பதை பார்த்தவளுக்கு மனம் ரணமானது.
அவனுக்கு துணைக்கு இருந்த செவிலியரை அனுப்பி விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
"ம்மா.. மாமா" என்று அவன் நெற்றியை மெதுவாக வருடி இதழ்களை பதித்தாள். அவளாக கொடுக்கும் முதல் முத்தம்!!
அவன் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு தருணம்!! இன்றோ மருத்துவமனையில்..
நடுங்கும் விரல்களால் அவனது கன்னங்கள், மூக்கு நெற்றி என்று ஒவ்வொரு இடமாக விரல்களால் வருட.. விரல்களுக்கு போட்டியாக இதழ்களும் அவன் முகம் எங்கும் கோலமிட.. இதழ்களில் வந்து இளைப்பாறியது அவளது மெல்லிய இதழ்கள். அவ்விடத்தில் இருந்து பிரிக்க முடியாமல் அங்கேயே ஒட்டிக் கொண்டது அவளது அதரங்கள். "செத்துட்டேன் மாமா நானு.. இந்த ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் யேன் மொத்த உலகமும் ஸ்தம்பித்து போய்ச்சுது.. எப்போ? எப்படி? யேன் உலகத்த இப்படி மாத்தின மாமா நீயி.. யேன் அப்பாவுக்காக கூட நான் அழுகல மாமா... உன் ஒருத்தனுக்காக மட்டும் தேன் இந்த கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு. என்ன டா மாமா பண்ணி வைச்ச என்னைய" என்று அவன் இதழ்களிலிருந்து இதழ்களை பிரிக்காமல் அவள் பேசிக் கொண்டே இருந்தவள், மெல்ல பிரித்தாள்.
சட்டென்று அவளது அடர்ந்த கூந்தல் பற்றி இழுக்கப்பட, அவள் அதிர்ந்து நோக்கும் முன், அவளை தன்னருகே இழுத்திருந்தான்… தீராவின் காதல் வீரா!!
"ரொம்ப லேட் டி நீயி.. இவ்வளோ லேட்வா வர்து.. நானும் எம்புட்டு நேரமா நீயி வருவ.. வருவனு கண்ண மூடியே மயக்குத்துல இருக்கிற மாதிரி படுத்து இருக்கிறது? பேரு மட்டும் அஸ்திரா.. ஆனா.. ரொம்ப ஸ்லொ.. பத்தல.. பத்தல.. இந்த வேகம் பத்தல ஆபிஸர்" என்று இதழ் வளைத்து கூற.. அவ்வளோ தான் அவனது தீராவுக்குள் வீரா புகுந்தது போல வீரவேசமாக அவனை உண்டு இல்லை என்று ஆக்கினாள்.
"அய்யோ… விடு டி.. விடு டி.." என்று அவன் கெஞ்சிய பிறகே விட்டாள்.
அம்பலவாணன் அனுப்பிய ஐம்பது அடியாட்களை கூட அசால்ட்டாக சமாளித்தவன், இந்த அரவேக்காடை சமாளிக்க முடியாமல் திணறினான்.
ஆனால் திணறியது என்னவோ சில நொடிகள் தான்!
"எங்க வேணாலும் அடி டி… யேன் இதயத்துக்கு பக்கம் மட்டும் அடிக்காதடி.. ஏன்னா அங்க இருக்குற உனக்கு வலிக்கமுல்ல" என்று கூறி சிரித்தான் அந்த குறும்பன்.
"ஆஹான்.. வாயிலேயே வட சுடுக" என்று கூறி முடிக்கும் முன் அவளின் வார்த்தைகள் எல்லாம் அவனின் அதரங்களுக்குள் சென்று மறைந்தன.
வாய்க்குள் ஒரு கலவரமே நடத்திக் கொண்டிருந்தான் வீரா. அவள் சொன்ன வடையை வாய்க்குள்ளேயே சுட்டுக் கொண்டிருந்தான் காதல் கள்ளவனாக!!
கொய்யாவென அவளின் இதழ்களை கவ்வியிருந்த அவனது இதழ்களும்..
சுனாமியாக அவளது நாவினை சுழண்டு அடித்த அவனது நாவும்..
காது மடலை உரசிய அவனது கை விரல்களும்..
பின் உச்சி முடியை அழுத்தமாக பற்றி இழுத்த அவனது மற்றொரு கையும்..
அவளை மற்றொரு உலகத்திற்கு கொண்டு சென்றது!!
அடுத்த ஒரு வாரத்தில் வீரா உடல்நிலை தேறி வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். ஆனால் அம்பலவாணன் மருத்துவமனையிலேயே இருந்தார். இழந்த போன கையை மீட்க முடியாமல் வெறும் வைத்தியம் செய்து கொண்டு. அதுவே அவருக்கு மன உளைச்சலை அதிகப்படுத்த.. அதேநேரம் அதீத ஆத்திரத்தையும் கொடுத்தது வீராவின் மீது.
இருபது நாள் முடிவடைந்த நிலையில் கை காயம் குணமாகி விட அவரை அன்று சிறையில் அடைக்க காவல்துறை வந்திருந்தது. அப்போது ஸ்பெஷல் பர்மிஷனில் அவரை பார்க்க வந்த வீரா..
"எப்படி இருக்க அம்பலவாணன்? ஒரு கை இல்லாமல் வாழ்க்கை வெகு ஜோராக போகுது போல" என்றவனை அவர் அடிக்க முயல "அச்சச்சோ.. அப்படி எல்லாம் வரம்பு மீறி கூடாது அம்பலவாணன். இங்க இருக்கிற சிசிடிவி மூலமா வெளியில உம்மை கண்காணிக்குறாக.. ஏற்கனவே உன் மேல கொலை கேஸ் இருக்கு. பத்தாததுக்கு நீயி யேன் மேல பாஞ்சிட்டு வந்த.. இன்னும் கேஸ் உனக்கு பாதகமாக போய்விடும் எனக்கு சாதகமா போய்விடும்" என்று சிரித்தான்.
'அவன் சொல்வது உண்மைதானே.. எப்படியாவது இந்த வழக்கில் இருந்து விடுபட்டு ஆகவேண்டும்' என்று அமைதி காத்து இருந்தார் அம்பலவாணன்.
"என்ன இந்த கேஸ்ல இருந்து எப்படியாவது வெளியில வரலாம்னு நீயி நினைச்சுக்கூட பார்க்காத.. ஏன்னா இந்த கேஸோடு இன்னொரு கேஸ் உம்ம மேல பைல் பண்ண போறேன். தெரியலையா? சஞ்சயன் கொலை வழக்கு!!"
"டேய்.. டேய்.. அவேன் யேன் தங்கச்சி பையன் டா.. அவனை போய் நான் எப்படிடா கொலை பண்ணுவேன்? அவனை கொன்னது நீயி.. அதுக்கு நான் பழிவாங்காம விடமாட்டேன் டா" என்று கோபத்தில் பல்லை நற நற கடித்தவாறு அவர் பேச…
"ஆமா.. உண்மைதேன் நீயி சஞ்சயன கொல்லல தேன்.. ஆனா ஆதாரமே தெரியாம நீயி எத்தன உயிர்கள கொன்னுயிருப்ப.. அதற்கான தண்டனை இது!!
புரியலையா கோர்ட்டுல தெரியும்!!"
என்றவன் திரும்பி பார்க்காமல் சொன்றான்.
அப்போ உண்மையில் சஞ்சயனை கொன்றது யாராக இருக்கும்???
தீருமோ தாகம்!!
