அத்தியாயம் 15
அபிராமி அடித்த கன்னி சிவந்திருந்த கன்னத்தில் சில்லென்று இருந்த தன் உதட்டை பதித்து முத்தமிட்டான் கதிர்நயனன்.
அவனின் முத்தத்தில் அவள் இன்னும் விசும்ப, அவளின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி அவளை பார்த்தான் நயனன்.
அழுத விழிகளும்..
படபடக்கும் இமைகளும்..
துடிக்கும் உதடுகளும்..
என்று காலையில் பார்த்ததை விட, தற்போது கணவனின் கண்களுக்கு சற்று கூடுதல் அழகோடு தெரிந்தாள் பாவை.
மை தீட்டாமல் கருத்திருந்த கண்கள்.. அதற்கு மேல் வில் போன்று வளைந்திருந்த அவளின் புருவம்.. அதற்கு நடுவில் இருந்த அந்த அழகிய கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டு..
பூரித்து விரிந்த ரோஜா இதழை போன்ற மென்மையான உதடுகள்.. சங்கு கழுத்து என்று அவனை அத்தனை வசீகரித்தாள் நங்கை..!
அவளின் முகத்தை இன்னும் தூக்கி கைகளில் ஏந்தி உதட்டின் அருகே தன் உதட்டை கொண்டு சென்று,
“ஏய்.. சின்னு.. ஏன் இப்படி பயந்து நடுங்குற.. அழுது கரையுற..! அவங்க என்ன சொன்னாலும் எதிர்த்து பேச வேணாமா..” சூடான மூச்சுக்காற்றை அவளின் உதட்டில் விட்டபடியே கேட்க..
பிரக்யாவோ அவன் விட்ட மூச்சுக்காற்றில் மூச்சிரைக்காமல் பல நாள் குடும்பம் நடத்தி பழக்கப்பட்டவனிடம் பேசுவது போல் உரிமையாக
“ஆமா இதுவும் சொல்லுவீங்க இதுக்கு மேலயும் சொல்லுவீங்க..! ஏற்கனவே என்னை ரொம்ப நம்புவாங்க பாருங்க.. இதுல அவங்க கைல தொக்கா மாட்டி இருக்கு ஒரு ப்ரூஃப்… எனக்குனே வந்து தானா அமையும் போல.. என் கெரகம்..” என்று கோவை சரளா போல பேசியவளை கண்டு அவள் நெற்றி முட்டி சிரித்தான் அவளின் நாயகன் நயனன்.
பெய்யாது பெய்யும் இந்த மழையில்
இரு கைகளையும் அகல விரித்து
அண்ணாந்து பார்த்தபடி நனைய விரும்பும்
சிறு குழந்தையைப் போல
வேகமாக ஓடுகிறது
அவள் பாவங்களை கண்டு நயனனின் மனது..!
'அதில் நனைந்து விடாதே, பிறகு யார் நொட்டியம் பார்ப்பது?' எனப் பின்னாலேயே ஓடுகிறது அவன் அறிவு..!
“இன்னைக்கு நீ ஹாஸ்பிடல் போக வேணாம். உனக்கு லீவு சொல்லிட்டேன்.. உனக்கு பதிலா வேற டாக்டர் அரேஞ்ச் பண்றேன்னு ஜெகதீசன் டாக்டர் சொல்லிட்டாரு.. இன்னைக்கு நீ ரெஸ்ட் எடு. இந்த மண்டைல எதைப்பத்தியும் நினைக்க கூடாது. சரியா? மதியம் சாப்பிடணும் சரியா?” என்று அவளது நெற்றியில் அதி மென்மையாக முத்திட்டவன், “தூங்கு..!” என்று அவளை படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.
மகன் வரவையே எதிர்பார்த்து இருந்த பர்வதத்தம்மாள் “என்னப்பா சின்னு எப்படியிருக்கா?” என்று கேட்டதும் கண்களை மூடி திறந்தவன் “அவ ஓகே தான் மா..! நீங்கதான் அவளை கொஞ்சம் பார்த்துக்கணும். மத்தியானம் சாப்பாட்டுக்கு கொஞ்சம் எழுப்பி விடுங்க.. கும்பகர்ணி தூங்குனா எழுந்திருக்க மாட்டா..” என்று சிரிப்போடு மகன் பேசினாலும் அதை தாண்டி அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அன்னையை அசைத்துப் பார்த்தது.
“சரிம்மா நான் வரேன்.!” என்று போனவன் கையை பற்றியவர்
“என்ன நயனா? ஏன் இப்படி இருக்க? உன் சிரிப்பே கண்ணை எட்டல?” என்று உனக்கு நான் தாய் என்று அவர் நிரூபிக்க…
“ம்ப்ச்.. முடியல மா..! உங்க சின்னப் பொண்ணு கிட்டயும்.. உங்க பெரிய பொண்ணோட மாப்பிள்ளை கிட்டயும்.. எதுடா சாக்கு கிடைக்கும் எப்படா இவளை போட்டு தாளிக்கலாம்னு இருக்கிறாங்க.. இந்த சின்னப் பொண்ணு மேல அப்படி என்ன கோபம் அவங்களுக்குன்னு எனக்கும் புரியல? வெளி ஆளுங்களே பரவால்ல. வீட்டுக்குள்ளே இவங்கள வச்சுக்கிட்டு..!” என்று பெருமூச்சு விட்டவன்,
“சரி மா.. நான் கிளம்புறேன் நீங்க அவளை பார்த்துக்கோங்க. ஏதாவதுனா எனக்கு உடனே ஃபோன் பண்ணுங்க. இன்னைக்கு நான் தஞ்சாவூரில் தான் இருப்பேன்” என்று புறப்பட்டுச் சென்றான்.
செல்லும் மகனையே பெருமூச்சோடு பார்த்தார் பர்வதத்தம்மாள்..!
பின் ஹாலில் பெரிய சட்டத்தில் சட்டமாய் அமர்ந்து புன்னகையோடு இருக்கும் கணவனைப் பார்த்தவர் “ஏங்க.. நம்ம புள்ளைங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறீங்க? நீங்க தெய்வமா இருந்து அவங்களுக்கு ஒரு நல்லது செய்யக்கூடாதா? இப்படியே காலம் முழுக்க சண்டையும் சச்சரவுமா தான் அவங்க காலம் போகுமா?” என்று ஏக்கமாய் கேட்டார்.
படத்தில் சிரித்த முகமாக இருந்த சிவஞானமோ ‘சில கஷ்டங்களை தாண்டி தான் வைரங்களை பெற முடியும் பர்வதம்..! கவலைப்படாதே, சீக்கிரம் எல்லாம் சரியாகும்..!’ என்பது போலவே பார்த்தார்..!
மாலை போல வீடு வந்தான் கதிர்நயனன்.
சோர்வான முகத்துடன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி வந்தாள் பிரக்யா..
”குட் ஈவினிங் மாமா.. !!”
”குட் ஈவினிங்டா.. சின்னு !!”
”இப்போதான் எழுந்தியா.. ??”
”ம்..ம்ம்..!!
“சாப்பிட்டியா?”
“மதியம் அம்மம்மா ஊட்டி விட்டாங்க.. திவ்வியமா சாப்பிட்டேன்” என்றாள் சன்ன சிரிப்போடு.
“அப்புறம் நீ ஏன் ரொம்ப டயர்டா இருக்க? ஃபேஸ் ரொம்ப டல்லடிக்குது?”
”எஸ் மாமா.. கொஞ்சம் டயர்ட் அது.. அது.. வந்து டேட்டாகிட்டேன்!!” எனச் சிரித்தாள்.
”ஓஹ்.. ஹேப்பி.. மென்ஸஸ் டே.. !!” என்று மனைவியின் கன்னத்தில் தட்டிச் சிரித்தான் நயனன்!!
“அய்யே.. ச்சீ.. என்ன விஷ் இது கருமம்?” என்று முகம் திருப்பினாள்.
“எது கருமம்? அஸ் அ டாக்டர் நீயே இப்படி பேசலாமா?”
“நான் டேட் ஆனதை கருமம்னு சொல்லல நீங்க விஷ் பண்ணீங்களே அதைத்தான் சொன்னேன்” என்று முகத்தை சுருக்கினாள்.
“இங்க பாரு நம்ம நாட்டுல தான் ஆண்கள் கிட்ட இதைப்பத்தி பேசக்கூடாது.. நாப்கின் வாங்கி வர சொல்லக்கூடாது.. இது பொண்ணுங்களுக்கான விஷயம். அப்படின்னு ஒரு குறுகிய மனப்பான்மையிலேயே இருக்காங்க அது அப்படி கிடையாது..!”
“பார்றா மாமாவை..!” என்று அவள் அதிசயக்க..
“ஏன்.. நீ ஃபர்ஸ்ட் பூபர்டி ஆனதை எங்கிட்ட தானே சொன்ன?”
“அது.. அது.. அறியாத வயசு மாமா”
“அதுல தப்பில்ல சின்னு..! இது ஆண்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஒரு பெண் பிள்ளையை பெத்த தகப்பன்.. கூட பிறந்த சகோதரன்.. கட்டிய கணவன்.. இப்படி எல்லாருமே அந்த பெண்ணின் உடலில் மனதில் ஏற்படும் மாற்றங்களை புரிஞ்சு வைச்சிக்கிறது தான் நல்ல ஆண் மகனுக்கு அழகு” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல..
“போங்க.. போங்க.. நீங்க பட்டிமன்றத்தில் பேசுற மாதிரி பேசுறீங்க..! நான் கீழ போறேன் பா” என்று வேகமாக கீழே சென்று விட்டாள் பிரக்யா.
மனைவி காலையில் நடந்தவற்றிலிருந்து முற்றிலுமாக வெளிவந்துவிட்டாள் என்று நிம்மதி பெரும் மூச்சோடு தன் அறைக்குச் சென்றான் கதிர்நயனன்.
மாலை போல கணவன் சமாதி இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பர்வதத்தம்மாள் கூற..
“எல்லாருமே போலாம் மா” என்றான் நயனன்.
மூவரும் குடும்பமாய் அங்கே சென்று அவர் சமாதியில் மாலை அணிவித்து விளக்கேற்றி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
தாத்
தாவை பார்த்ததும் பேத்திக்கு தன் போல கண்கள் நீரால் நிறைய.. கடந்த காலம் அவள் கண்முன்னே விரிந்தது..!
