நேசம் 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

நேசம் 3

 

 

 

மேடை ஏறி விருது வாங்கிய கிருஷ்ணாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசும் படி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்டுக் கொள்ள, இடதுக் கையில் விருதை பிடித்து கொண்டு வலது கையில் மைக்கை தான் வாங்கி இருப்பான்,

 

 

 

பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து கூச்சல் சத்தங்களும், கரகோசங்களும் விண்ணை பிளந்தது.

 

 

 

அவனாக இதுவரை எந்த ஒரு பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகள் எதுவும் கொடுத்ததில்லை.

 

 

 

ஆனாலும் அவனின் வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனால் திரண்ட ரசிகர்கள் பட்டாளம் தான் இது. அவனுக்காகவே பல ரசிகர்கள் விழாவிற்கு வந்திருந்தார்கள்.

 

 

 

கூச்சல் சத்தங்கள் சிறுது மட்டுப்பட காத்திருந்தவன், “குட் ஈவ்னிங் எவெரி வன்” என்று தன் ஆளுமையான குரலில் ஆரம்பிக்க அரங்கு மொத்தமும் அமைதியானது அவன் குரலை கேட்கவே. முதல் முறை கேட்கிறார்களே.

 

 

 

“தேங்க்ஸ் போர் தி அவார்ட்” என்று மட்டும் சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்க இருந்தவனை தடுத்திருந்தார்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்.

 

 

 

“என்ன சார் அவ்வளவு தானா? உங்க குரலை கேட்கவே இங்க நிறைய பேர் காத்திருக்கோம். இன்னைக்காவது பேசுங்களேன்” என்று அன்பு கோரிக்கை விடுக்க,

 

 

 

இதழ்களை கடக்காத மெல்லிய புன்னகை அவன் இதழ்களில்.

 

 

 

“என்ன பேசுறது?” என்று அடக்கமாக கேட்டவனிடம்,

 

 

 

“நீங்க என்ன பேசினாலும் கேட்போம். நீங்க பேசினா மட்டும் போதும்” என்றாள் நிகழ்ச்சி தொகுப்பாளினி சற்று குழைவாக.

 

 

 

அவள் அருகே நின்றிருந்த தொகுப்பாளனோ, “இந்த வெற்றியை பற்றி சொல்லுங்க சார்” என்று கேட்க,

 

 

 

வெற்றி… என்று கசப்பாக முணுமுணுத்து கொண்டது அவன் இதழ்கள்.

 

 

 

நீ இவ்வளவு தான். உன்னால இவ்வளவு மட்டும் தான் முடியும். உனக்கு இது மட்டும் தான் நடக்கும். ஊர் குருவி பருந்தாக ஆசைப்பட கூடாது அப்படி இப்படினு உங்களோட கனவுகளை யாராவது அடக்க நினைச்சாங்கன்னா, நீங்க அடங்கி போகணும்னு அவசியம் இல்லை.

 

 

 

அம்பானிக்கும் இருபத்தி நாலு மணி நேரம் தான் ஆறுமுகத்துக்கும் இருபத்தி நாலு மணி நேரம் தான். அந்த நேரத்தை நாம எப்படி பயனுள்ளதா மாத்துறோம்கிறதுல தான் நம்மளோட வெற்றி இருக்கு.

 

 

 

நேத்து வரை சாதாரணமா ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஒருத்தன் திடீர்னு பெரிய பணக்காரன் ஆகிட்டா, அவனுக்கு எதோ அதிஷ்டம் அடிச்சிருக்கு. அதான் பெரிய ஆள் ஆகிட்டான்னு கொஞ்சம் வயித்தெரிச்சலோட சொல்வாங்க.

 

 

 

அவனுக்கு மட்டும் தான் அதிஷ்டம் அடிக்குமா. எல்லாருக்குமே அதிஷ்டம் அடிக்கும். தன் திறமைகளை வளர்த்துட்டு, அந்த வாய்ப்புக்காக காத்திருக்கவனை அந்த அதிஷ்டம் கை கொடுத்து தூக்கி விடுது.

 

 

 

நான் இது தான். என்னால அம்பானியெல்லாம் ஆக முடியாதுனு டெயிலி பண்ற அதே வேலையை மட்டும் பண்ணிட்டு எந்த ஒரு புது முயற்சியும் எடுக்காம, ரிஸ்க் எடுக்க பயப்படுறவனுக்கு அந்த அதிஷ்டம் கை கொடுத்தாலும் அவனால அதை பிடிச்சி ஏறி போக முடியாது.

 

 

 

நீங்க எடுக்கிற முயற்சி எல்லாம் வெற்றில தான் முடியும்னு இல்ல. ஆரம்பத்துல தோல்விகளும், அவமானங்களும் நேரலாம். அதுல இருந்து வாழ்க்கையை கத்துக்க பழகுங்க. தவறுகளை கண்டுபிடிச்சி திருத்த முயற்சி பண்ணுங்க.

 

 

 

இங்க வாழ்க்கை யாருக்கும் சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்காது. பல இன்னல்கள் தாண்டி தானே வாழ்றோம்.

 

 

 

போட்டிகள் நிறைந்த உலகம். உங்களுக்கான பாதையை உறுதியா தேர்ந்தெடுத்து, அதுல முன்னேறி செல்லுங்க. கை கொடுக்க எவனும் வர மாட்டான். காலை வாரிவிட கூட்டாமே நிற்கும். சோர்ந்து போனா மண்ணுக்குள்ளே புதைஞ்சி போவோம்.

 

 

 

போராடுற குணம் நம்ம பிறப்பிலே இருக்கு. ஒரு லட்சம் பேர் கூட போட்டி போட்டு தானே அன்னையோட கருவறையிலேயே சேர்றோம். மைக்ரோ மில்லி மீட்டர் அளவு இருக்கும் போதே போராடி நமக்கான இடத்தை பிடிக்க முடிஞ்ச நமக்கு, இப்போ முழுசா இருக்கும் போது போராட முடியாதா என்ன?

 

 

 

திங் பாசிட்டிவ், வொர்க் ஹார்ட், கீப் ஹாம், தி விக்டரி இஸ் டேஃபேனாக்ட்லி யூர்ஸ்” என்று அத்தனை தெளிவாகவும், நிதானமாகவும் பேசிய கிருஷ்ணாவை சற்று அசந்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

 

 

 

அவள் பார்த்த கிருஷ்ணா இவன் இல்லையே.

 

 

 

நடை, உடை, பேச்சு, தோரணை மட்டுமல்ல விளையாட்டு தனமாக சுற்றி திரிந்த இளைஞன் முற்றிலும் மாறி, தெளிவான சிந்தனை கொண்ட தொழிலதிபராக நிற்கிறான்.

 

 

 

அன்னை விரல் பிடித்து நடை பயின்ற குழந்தை சுயமாக நடக்கும் போது அன்னை அடையும் மகிழ்வு அவளுக்கும்.

 

 

 

உன் வெற்றியில் நானும் மகிழ்கிறேன் என்றால் நிச்சயம் நம்ப மாட்டான். நகைப்பான். அவனை பொறுத்தவரை தன் வாழ்வை சிதைத்த சதிகாரி அவள். கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை வதைக்க தயங்க மாட்டான்.

 

 

 

சிறு வயது துவக்கம் அவளால் எத்தனை வசவுகள் கடந்து இன்று உயர்ந்து நிற்கிறான். யாரை வேண்டுமானாலும் அருகே சேர்ப்பான். அவளை மட்டும் என்றும் நெருங்க அனுமதிக்க மாட்டான்.

 

 

 

மீரா, தன் உணர்வுகளை மறைத்து நிர்மலமான முகத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவன் விழிகளில் அலட்சிய புன்னகை. அவளை பார்த்தபடியே தரையிறங்கி வந்தவனை அணைத்து விடுவித்தாள் ஸ்ரதா.

 

 

 

அரை கண அதிர்வு மீரா விழிகளில்.

 

 

 

‘யார் இவள்?’ அறிந்து கொள்ள ஒரு மனம் உந்த,

 

 

 

‘யாரா இருந்தா எனக்கென்ன? ஐ டோன்ட் கேர் அபௌட் தெம்’ என்று அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாலும், அவளை மீறி அவள் விழிகள் அவன் திசையை அவ்வப்போது மேய்ந்து வந்தது.

 

 

 

அவன் விழிகளும் அவள் பார்க்கா நேரம் அவளை தழுவி தான் மீண்டது.

 

 

 

ஸ்ரதா… அந்த மாகாணத்தின் மேயர் மகள். கிருஷ்ணாவின் இந்த குறுகிய கால வளர்ச்சி பலரை திரும்பி பார்க்க வைத்தது. அதில் அவள் தந்தையும் ஒருவர்.

 

 

 

மகளை மணமுடித்து கொடுக்கும் அளவுக்கு அவன் வளர்ச்சி மீது பிடித்தம்.

 

 

 

இவன் என் மருமகன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதில் அப்படி ஒரு கர்வம் அவருக்கு.

 

 

 

கிருஷ்ணாவை பொறுத்தவரை,

 

 

 

‘இவ்வளவு பெரிய ஆள் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?

 

 

 

ஒருவேளை லேட்டா பண்ணலாம்னு யோசிச்சிருப்பாரா இருக்கும்.

 

 

 

இல்ல… ஏதாவது லவ் பெலியரா இருக்குமா?

 

 

 

ஒருவேளை… அப்படி இருக்குமோ? அவருக்கு பொண்ணுங்களை விட பசங்களை தான் புடிக்குமோ?’ நேரடியாக அவனிடம் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை என்றாலும், அவன் பெயர் அடிப்படாது எந்த சமூக வலைத்தளங்களும் இருக்காது.

 

 

 

அந்த வீண் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முற்றுபுள்ளி வைத்தவள் இந்த ஸ்ரதா.

 

 

 

கிருஷ்ணாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது. திருமணம் ஆகாதவன் என்று மட்டும் தெரியும்.

 

 

 

 (திருமணம் ஆகாமல் குழந்தை இருக்க கூடாது என்று சட்டம் இல்லையே! திருமணம் ஆகல சரி. குழந்தை இருக்கானு எவனாவது கேட்டானா? பிளடி பர்கர்ஸ்… )

 

 

 

அடிக்கடி பள்ளிக்கு அவன் காண செல்லும் குழந்தை பற்றி தனி விசாரணை கமிஷன் வேறு கிசு கிசுப்பாக போய் கொண்டிருக்கிறது.

 

 

 

 (மீராகிட்டா கேட்டா அவளே புட்டு புட்டு வைக்க போறா!)

 

 

 

அது எதையும் கருத்தில் கொள்ளாதவன், ஸ்ரதாவுடன் அடுத்த திருமணத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறான் என்பதே கசப்பான உண்மை.

 

 

 

ஒரு நாள் தவறிற்காக மொத்த வாழ்வையும் இழக்க அவன் தயாராக இல்லை.

 

 

 

நிலா அவன் குழந்தை. அவளுக்கான உரிமையையும், கடமையையும் என்றும் நிராகரிக்க மாட்டான். குழந்தைக்காக அன்னையை ஏற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை.

 

 

 

என் வாழ்க்கை, என் விருப்பம் என்று பிடிவாதமாக இருக்கும் அவனால் அனுதினமும் அவதிப் படுவது அவன் ரத்த உறவுகள் மட்டுமின்றி, செய்யாத தவறிற்காக பலியாகி கொண்டிருப்பது மீராவும் தானே.

 

 

 

அவனை போல் அவளும் என் வாழ்க்கை தான் முக்கியம் என்று போய் விட்டால்?

 

 

 

பிள்ளை நிலை.

 

 

 

அவள் வேறு வாழ்க்கை பற்றி யோசித்தால் யாரும் அவளை தடுக்க போவது இல்லை தான். ஆனாலும் பெண் மனம் சுயநலமாக சிந்திக்க முடியாது சுயத்தை இழந்து நிற்கிறது.

 

 

 

மேடையில் கலை நிகழ்ச்சிகள் பல விதமாக நடந்து கொண்டிருந்தாலும், இருவர் கவனமும் துளியும் அதில் இல்லை.

 

 

 

இயல்பாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்டாலும், அவள் விழிகள் அவன் செயல்களை ஆராய, அவன் விழிகளோ அவளை தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

 

 

 

இமை பொழுது அவளை கண்டால் கூட நேர விரயம் என்று எண்ணுபவன் இமைக்கும் ஒவ்வொரு பொழுதும் அவளை பார்வையால் ஆராயும் காரணம் அறியாது போனான்.

 

 

 

அவள் போகும் திசை எங்கும் இவன் விழிகள் போக, ஏதாவது ஆடவனோடு நின்று பேசினால், முகம் சிவந்தது கிருஷ்ணாவுக்கு.

 

 

 

ஸ்ரதா அவனை நெருங்கி அமர்ந்து அவன் விரல்களை கோர்த்துக் கொள்ள, அதன் பிறகே அருகே  இருக்கும் பெண்ணை உணர்ந்தான்.

 

 

 

இவள் தான் என் வாழ்க்கை. அவன் எதிர் பார்க்கும் அத்தனை அம்சங்களும் தாராளமாக இருக்கும் பேரழகி.

 

 

 

சிடுமூஞ்சி மீரா,

 

சிரித்த முகம் ஸ்ரதா…

 

கடுகாக பொறியும் மீரா

 

காதலை பொழியும் ஸ்ரதா…

 

அவன் ஆசைகளுக்கு எல்லாம் தடை உண்டு அவளிடம்

 

அவன் ஆசைகளுக்கு எல்லாம் ஆராதனை உண்டு இவளிடம்.

 

 

 

எல்லா வகையிலும் மீராவை விட ஸ்ரதா சிறந்தவள் தான். இவள் போதும் என்று பிடிவாதமாக  மீரா நினைவுகளை ஒதுக்கி வைத்தவன் விரல்களும் ஸ்ரதா விரல்களை அழுத்தி பிடித்துக் கொண்டது.

 

 

 

அவன் விழிகள் மீராவை நிராகரித்திருந்தது.

 

 

 

ஆனால் அவள் விழிகள் மொத்தமும் அவன் கரம் கோர்த்த காரிகையை தான் எரித்துக் கொண்டிருந்தது.

 

 

 

அதுவும் சில நிமிடமே. எட்டா கனி அவனை எட்டி பிடிக்க சித்தம் இல்லை. மொத்தமாக விட்ட பிறகு எதற்கு வீண் கவலை கொள்ள வேண்டும். அவன் வாழ்வை விட்டு போனது போலவே, அரங்கையும்  விட்டும் வெளியேறி விட்டாள்.

 

 

 

அன்று இரவு வீடு திரும்பியவனுக்கு எந்நாளை விடவும் இந்நாள் பெரும் வலியை கொடுத்தது.

 

 

 

ஊரே அவன் வளர்ச்சியை கண்டு வாயை பிளக்கிறது. அவனை கொண்டாடுகிறது.

 

 

 

ஆனால் அவனை பெற்றவர்கள்?

 

 

 

ஒருவார்த்தை அவனிடம் பேச தயாராக இல்லையே.

 

 

 

அவார்டோடு மெத்தையில் சரிந்தவன் மனதில் அப்படி ஒரு வழி.

 

 

 

அப்படி என்ன பொல்லாத கோபம் நெல்லையாண்டாருக்கு?

 

 

 

மகன் வளர்ச்சி கண்ணுக்கு தெரியவில்லை. எவளோ ஒருத்தி பின்னால் நின்று அவனை அவமானப்படுத்துகிறார் என்றே தோன்றியது அவனுக்கு.

 

 

 

இந்த தனிமை, இந்த வெறுமை, இந்த ஏக்கம் என்று எல்லாம், எல்லாம்… அவள் மீது தான் மேலும் மேலும் வெறுப்பை உண்டாக்கியது.

 

 

 

எல்லாத்துக்கும் அவ தான் காரணம். என் அப்பா, அம்மாகிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டல்ல டி. நான் அவார்ட் வாங்கிற மொமெண்ட் ல என் அம்மா அடையிற ஆனந்தத்தை பார்க்க முடியமா பண்ணிட்டியேடி என்று அப்போதும் அவன் மனம் அவளை தான் பழி சொன்னது.

 

 

 

ஐ ஹெட் யூ மீரா… ஐ ஹெட் யூ இன் மை சோல் என்று அத்தனை வெறுப்பாக சொன்னவன் விழிகள் கூட அவளை நினைக்கையில் கோபத்தில் சிவந்து தான் இருந்தது.

 

 

 

இங்கே மீரா வீட்டிலிருந்த அவன் அன்னை அஞ்சம்மாளோ, சந்தோசத்தில் திக்குமுக்காடி கொண்டிருந்தார்.

 

 

 

மாலை அந்த விருது வழங்கும் விழா லைவ் ஷோவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்க, அதில் மகன் விருது வாங்கியதையும், அவன் பேசியதையும் கேட்ட பிறகு அப்படி ஒரு மன நிறைவு அவருக்கு.

 

 

 

பார்த்தீங்களா என் புள்ளையை? மிதப்பாக கணவரிடம் மகனை மெச்சிக் கொண்டார்.

 

 

 

அன்று இரவு, கிருஷ்ணாவுக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் தான் மேஜையில் படைக்க பட்டிருந்தது.

 

 

 

அவன் அன்னை அஞ்சம்மாள் தான் மகனுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்தது.

 

 

 

ஆனால் என்ன பயன்.

 

 

 

இதையெல்லாம் சாப்பிட அவன் தான் இல்லையே. இங்கு வரப்போவதும் இல்லை.

 

 

 

மகனுக்காக அத்தனையையும் செய்து முடித்த பிறகே அந்த தாய் மனம் நடப்பை உணர, நெஞ்சில் பாரம் கூடி போனது.

 

 

 

அவன் மனசு மாறி மீராவை ஏத்துக்கிட்டா என் மகன் இப்போ என்கூடவே இருந்திருப்பான்ல. நானும் அவனுக்கு இதையெல்லாம் ஆசையா ஊட்டி விட்டிருப்பேன் என்று மனம் கேளாது அவர் தன் மன உளைச்சலை சபையில் சொல்லிவிட,

 

 

 

அங்கிருந்த பெரியவர்கள் மூவருக்கும் சங்கடமாக போனது.

 

 

 

அங்கு யாரும் அவரை இருக்க சொல்லி நிர்பந்திக்கவில்லை. ஆனால் அவர் பேச்சு அப்படி ஒரு அர்த்தத்தை தானே இப்போது பறை சாற்றியது.

 

 

 

நல்லவேளை மீரா இன்னும் வீடு திரும்பவில்லை. விருது நடந்த அரங்கை ஒதுங்க வைக்கும் வேலையில் இருந்தாள். இல்லையேல் அவளுக்கு தானே அதிக வருத்தம் ஏற்படும்.

 

 

 

“அஞ்சம்மா… என்ன பேசுற?” என்று நெல்லையாண்டார் அவரை அதட்டிய பிறகே அவரும் தன் வார்த்தைகளை உணர்ந்து, மீராவின் பெற்றோர்களை சங்கடமாக பார்த்தவர், நிலா குட்டி… இன்னொரு சப்பாத்தி வைக்கவா? என்று கேட்டு குழந்தையை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

 

 

 

மீராவின் பெற்றோர்களுக்கு அவர் மனம் புரியாமல் இல்லை. ஆனாலும் அவர் மகனால் தானே தன் மகளுக்கு இப்படி ஒருநிலை என்று உள்ளுக்குள் வலி இருந்தாலும், பழகிய நட்புக்காக எதையும் வெளிக்காட்டி கொள்வதில்லை.

 

 

 

கசப்பான புன்னகையுடன் அவர்கள் நாட்கள் கடந்தது.

 

 

 

அதற்கு பிறகு ஒரு மாதம் கிருஷ்ணாவும், மீராவும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அமையவே இல்லை.

 

 

 

அவ்வப்போது மகளுடன் சில வார்த்தைகள் அன்னை அலைபேசி வழியே பேசுவான். நிலாவை தவிர வேறு யாரும் அவனோடு பேசுவதும் கிடையாது

 

 

 

ஸ்ரதாவை அவன் திருமணம் செய்ய போகும் செய்தி கூட பத்திரிக்கை வழி அவர்களுக்கு தெரிந்திருந்தது.

 

 

 

மீராவின் பெற்றோர் கவலையாக மகளை பார்த்து செல்ல, நெல்லையாண்டாருக்கோ ஏக கோபம்.

 

 

 

அவனால் ஒருத்தி வாழ்க்கை இழந்து தவிக்கிறாள். அவளை சிறிதும் கருத்தில் கொள்ளாது, தன் விருப்பு, வெறுப்பு தான் பெரிது என்று கடந்து செல்லும் மகன் மீது கொலைவெறியே வந்தது.

 

 

 

“சம்பாதிச்சு பேர் புகழ் அடைஞ்சாலும் இன்னும் மீரா கால் தூசுக்கு ஈடாக மாட்டான் உன் புள்ளை” என்று தன் கோபம் முழுவதையும் அவர் வெளிப்படுத்தும் ஒரே ஆள் அஞ்சம்மாள் தான்.

 

 

 

அவருக்கும் மகன் செயலில் சிறிதும் பிடித்தம் இல்லை தான். இருந்தாலும் மகனை யாராவது ஏதாவது சொன்னால் மனம் வெதும்புகிறதே! கண்ணீர் மட்டும் தான் வடிக்க முடிந்தது அந்த அன்னையால்.

 

 

 

கண்டிக்க வேண்டிய வயதில் சுதந்திரமாக விட்டு விட்டார். கண்டித்தவரையும் அடக்கி வைத்தார்.

 

இப்போது அனுதினமும் மகனை எண்ணி கவலை கொள்கிறார்.

 

 

 

முழுதாக ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சூழ்நிலையை உருவாக்கினான் ஒருவன்.

 

 

 

ஈஸ்வர்… கிருஷ்ணா மற்றும் மீராவின் கல்லூரி கால நண்பன்.

 

 

 

கிருஷ்ணாவின் உயிர் நண்பனும் கூட. உயிர் நண்பன் என்பதை விட கிருஷ்ணா இப்போது வரை தொடர்பில் இருக்கும் ஒருவன். அவனை தவிர யாரிடமும் பெரிதாக பேச்சு வார்த்தை கிடையாது.

 

 

 

ஈஸ்வருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க, அதற்கான பேச்லர்ஸ் பார்ட்டிக்காக தான் கிருஷ்ணாவை காலில் விழாத குறையாக அழைத்து வந்திருந்தான்.

 

 

 

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவன் பெரிதாக செல்வதே இல்லை.

 

 

 

ஊரே வாயை பிளந்து பிரமிக்கும் ஒருவன், அந்த ஊராரின் வார்த்தைகளுக்கு பயந்து தான் எந்த நிகழ்வுக்கும் போவதில்லை.

 

 

 

ஈஸ்வர் கெஞ்சி கேட்கவே மறுக்க தோணாது வந்தவனை தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடினார்கள் அவன் நண்பர்கள்.

 

 

 

“எங்க நண்பன் உயர்வான இடத்தில இருக்கிறத பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?”

 

 

 

“ஹீரோ டா நீ” புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.

 

 

 

புகழ்ச்சி கூட போதை தானே. அவனும் மயங்கி தான் போனான் அந்த போதையில்.

 

 

 

ஈஸ்வர் திட்டமிட்டே மீராவிடம் தன் திருமண காண்ட்ராக்ட் மொத்தமும் ஒப்படைத்திருக்க, இந்த பார்ட்டியை கூட அவள் தான் ஏற்பாடு செய்திருந்தாள்.

 

 

 

அங்கே குளிர் பானங்கள், மதுபானங்கள் வைத்திருந்த இடத்தில் நின்றிருந்தவளை கண்டுக் கொண்ட கல்லூரி நண்பன் ஒருவன்,

 

 

 

“அது மீரா தானே. இங்க என்ன பண்றா?” என்று கேட்க,

 

 

 

“மேரேஜ் காண்ட்ராக்ட் எடுத்து பண்றா” என்று மற்றொருவன் சொன்னான்.

 

 

 

கிருஷ்ணாவின் விழிகளும் ஒருமுறை அவளை உரசி மீண்டது.

 

 

 

கருநீல நிறத்தில் வெள்ளை பூக்கள் வேலைபாடுடைய சாதாரண காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள்.

 

 

 

கைகளை முழுதாக மறைத்திருந்த ஃபுல் ஸ்லீவ், இருபக்க தோளிலும் துப்பட்டாவை பின் செய்து முழுதாக தன் அங்க வளைவுகளையும் மறைத்திருந்தாள்.

 

 

 

கிருஷ்ணாவின் விழிகள் அவளை பார்த்தது அரை கணம் தான். ஆனால் அந்த அரை கண பொழுதிலே முழுதாக அவளை அளவெடுத்து கொண்டது.

 

 

 

அடுத்த நொடி அசட்டையாக அவள் மீதிருந்து விழிகளை திருப்பி கொண்டான்.

 

 

 

ஆனால் அங்கிருந்த அவன் நண்பர்களின் பார்வை மொத்தமும் அவளில் தான் இருந்தது.

 

 

 

“ஆமா டா நானும் பார்த்தேன். தெரிஞ்ச பொண்ணுனு போய் பேசினேன். மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுறா. காலேஜ் டைம்ல எத்தனை பேர் டிரை பண்ணியிருப்போம். அப்போல்லாம் கொஞ்சமும் மதிக்காம திமிரா சுத்தின பொண்ணு. எவன்கிட்டயோ நல்ல ஏமாந்து குழந்தையோட நிற்குது. இத தான் சொல்றது. நல்லதுக்கே காலம் இல்லனு. காலடில வந்து விழுந்த நல்ல பசங்களை எல்லாம் எட்டி உதைச்சா. இப்போ எவனோ உரசுற வரை உரசிட்டு கிள்ளி கீரை போல தூக்கி வீசிட்டு போய்ட்டான். ஆனாலும் அந்த திமிர் குறையல”

 

 

 

ஆல்கஹாலை வாயில் சரித்து கொண்டே மீராவின் பாதி சரித்திரம் அறிந்து முழு கதையை ஒருவன் உருவாக்கிட,

 

 

 

நண்பர்கள் மத்தியில் சுவார்ஸ்யம் கூடியது.

 

 

 

“கிருஷ்ணா… அவ உன் ப்ரெண்ட் தானே. யார் அந்த எக்ஸ்னு தெரியுமா உனக்கு?” என்று பிள்ளை கொடுத்தவனிடமே பில் இன் த பிளாங்க்ஸ் கேட்க,

 

 

 

தெரியாது என்று தலையை மட்டும் அசைத்தானே தவிர ஒரு வார்த்தை வாயை திறக்கவில்லை.

 

 

 

இத்தனை நேரம் அவளை அவன் பார்க்கவே இல்லை. இப்போது பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவளை குத்த வேண்டும் என்பதே அவன் குறிக்கோளாக மாறியது.

 

 

 

அவளை முன்னுதாரணம் காட்டி என்னவெல்லாம் பேசி இருப்பார் நெல்லையாண்டார். புண் பட்ட மனதை அவளை ரணமாக்கி தான் ஆற்றிக் கொள்ள முயன்றான்.

 

 

 

அவள் புத்திசாலி தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக அவனை அல்லவா அடி முட்டாளாக பாவித்தார்கள்.

 

 

 

மீரா போல் படிக்கவில்லை.

 

மீரா போல் மதிப்பெண் இல்லை.

 

மீரா போல் ஒழுக்கம் இல்லை.

 

 

 

"மீராவுக்கு கேம்பஸ் இன்டெர்வியூல வேலை கிடைச்சிருக்கு. உனக்கு ஏன் இல்ல… இப்படியே இருந்தா பிச்சை தான் எடுக்கணும்" என்று தந்தை அவளுடன் ஒப்பிட்டு அவனை திட்டும் ஒவ்வொரு நொடியும் நெஞ்சு வெதும்பும் அவனுக்கு. அவளுடன் அவனை ஒப்பிட்டே அவன் மனதில் அவள் மீது வெறுப்பை உருவாக்கி விட்டார்.

 

 

 

இப்போது அவன் உச்சஸ்தானியில் இருக்க, அவளோ அகல பாதாளத்தில் அல்லவா கிடக்கிறாள்.

 

 

 

இதற்கு காரணம் அவன் தான் என்று சொன்னால், சொன்னவர் வாயிலே நாலு மிதி மிதிப்பான். அகம்பாவம் பிடித்தவன்.

 

 

 

என்னை பார், என் வெற்றி களிப்பை பார் என்று அவள் முன் ஆட்டம் போட, மகிழ்ச்சியா, எரிச்சலா? ஒரே நேரத்தில் இரண்டும் சாத்தியமா?

 

 

 

சாத்தியம் ஆகிறதே அவனை பார்க்கும் ஒவ்வொரு நிமிடத்திலும். அவன் வெற்றி மகிழ்ச்சியே. அதற்கு அவன் செய்யும் அலப்பறைகள் தான் தாங்க முடியவில்லை.

 

 

 

ஆள் செட் செய்து அராஜகம் செய்தான்.

 

 

 

பிறகு அவன் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் நாளை தலைப்பு செய்தியில் அவனை அல்லவா தாளித்து எடுப்பார்கள். மரியாதை முக்கியம் அமைச்சரே. எப்பாடு பட்டு இந்த இடத்தை அடைந்து இருக்கிறான். அவ்வளவு எளிதில் இழக்க அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே.

 

 

 

ஆகையால் வேண்டுமென்றே நண்பர்களை தூண்டி விட்டு, பாரில் நின்ற பையனுடன் சண்டை போட வைத்தான்.

 

 

 

மூக்கு வரை குடித்து கண்ணு மண்ணு தெரியாமல் தள்ளாடி கொண்டிருந்த ஒருவனை தூண்டி விட்டு,

 

 

 

"என்ன சர்வீஸ் நடத்துறீங்க? கூப்பிடு உன் மேனேஜரை" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வைத்து, மீரவையும் வர வைத்து விட்டான்.

 

 

 

யாரை பார்த்தும் பயம் இல்லை மீராவுக்கு. தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று நன்கு அறிவாள். இருந்தாலும் இருக்கும் இடம் தணிந்து போக வைத்தது.

 

 

 

"என்ன ஆள் வேலைக்கு வச்சு இருக்க? ட்ரிங்க்ஸ் ஒழுங்கா சர்வ் பண்ண தெரியலை. மேல கொண்டு வந்து ஊத்தி வச்சிருக்கான்" என்று பாவம் அந்த சிறு பையனை பிடித்து ஒருவன் அடிக்க போக, அவனை காப்பற்றி விட்டவள், தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டாள்.

 

 

 

இவர்களை தூண்டி விட்டு கமுக்கமாக சிரித்து கொண்டிருக்கும் அவன் சதி திட்டம் அவளுக்கு புரியாமல் இருக்குமா என்ன?

 

 

 

அவனை விட அவனை பற்றி அதிகம் தெரிந்தவள் ஆகிற்றே அவள்.

 

 

 

எலி ஏன் ஏரோபிளேன் ஓட்டுகிறது என்றும் தெரியும்.

 

நரி ஏன் நாதஸ்வரம் வாசிக்கிறது என்பதும் புரியுமே.

 

 

 

சாதாரணமாக நின்றிருந்தாலும், உள்ளுக்குள் அத்தனை கோபம் மூண்டது அவளுக்கு. வேலை நேரத்தில் வந்து சேட்டை செய்யும் அவனை என்ன செய்தால் தகும்?

 

 

 

 

 

 

 

அன்று விருது வழங்கும் விழாவில் வைத்து தானே பெரிய ஆளாக மாறிவிட்டான் என்று அவனை பார்த்து வியந்தாள். அதற்குள் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்கிறானே என்று சலிப்பு தோன்றியது.

 

 

 

இனி இதுபோல தவறு நடக்காது என்று உத்திரவாதம் கொடுத்தவள் வேறு வழியின்றி அங்கேயே நிற்க வேண்டியதாகிற்று.

 

 

 

கிருஷ்ணாவின் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு மீராவை நன்கு தெரியும். இருவருக்கும் இடையே நடக்கும் பனி போர் அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

 

 

 

தெரிந்தவர்கள் அமைதி காக்க, குறை குடமோ ஓசி குடியில் கூத்தாடியது.

 

 

 

பாச பிணைப்பில் கிருஷ்ணாவின் நண்பன் சுதன் அவனுக்கும் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொடுக்க, வேண்டாம் என்று மறுத்தவனை, வித்தியாசமாக தான் பார்த்தான் சுதன்.

 

 

 

"இல்ல நான் குடிக்கிறது இல்ல" என்று சொல்ல, கல்லூரி காலத்தில் சுதனுக்கு குடிக்க கத்து கொடுத்ததே கிருஷ்ணா தான்.

 

 

 

‘எங்கே என் குரு’ என்று அரை போதையில் பிதற்றியவன் விழிகள் மீண்டும் மீரா மீது பதிய,

 

 

 

“விதிய பார்த்தியா மச்சான். படிக்கிற காலத்துல பாட்டம்ல இருந்த நீ இப்போ டாப்ல இருக்க, டாப்ல இருந்த அவ பார்ல நிக்கிறா.” என்று இருவரையும் கலாய்த்து சிரிக்க, தன்னை கலாய்க்கும் நண்பனை முறைத்து வைத்தான் கிருஷ்ணா.

 

 

 

வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லையே,

 

 

 

வாழ்க்கையே அதற்கு பிறகு தானே ஆரம்பம் ஆகிறது.

 

 

 

அவமானங்களும், வீழ்ச்சிகளும் இல்லாது வெற்றி பயணத்தை துவங்க முடியாதே.

 

 

 

ஒவ்வொரு அடியையும் வெற்றியின் படிக்கட்டாக மாற்றுவதும்,

 

 

 

துவண்டு முடங்குவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top