26
இன்று..!
சிறு தொழில் முனைவோருக்கான ஜிஎஸ்டி ஃபைல் பண்ணும் ஒரு சிறு நிறுவனம் தான் டாக்ஸ் சொலுயுஷன். அந்த நிறுவனத்தை நடத்துபவன் விகர்த்தனின் நண்பன் ஆர்யன்.
சிறுவயதில் இருந்தே ஆர்யனை நன்றாக தெரியும் வதனிக்கு. அவள் காதல் திருமணம் செய்த சேன்ற பின், நண்பன் படும் வேதனையை முழுதாக அறிந்தவன், அவனுக்கு தோள் கொடுத்தவன்.
இன்று அதே நண்பன் அக்காவை மன்னித்து அவளுக்கு உதவ தன்னிடம் அழைத்துக் கொண்டு வர, வதனி மீது வருத்தம் இருந்தாலும்.. அன்போடு அரவணைத்துக் கொண்டான்.
அவனுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொடுத்தான். ஏற்கனவே அங்கே தீபா என்று ஒரு பெண் வேலை செய்ய.. வதனிக்கும் வேலை கொடுத்தான்.
“உன்னால சமாளிக்க முடியுமாடா? அக்காவையும் வேலைக்கு எடுத்துக்கிட்டு?” என்று விகர்த்தனன் சற்று சங்கடத்தோடு நண்பனிடம் கேட்க..
“விடு மச்சி.. பார்த்துக்கலாம்..! ப்ரண்டா இருந்து இது கூட செய்யலேனா எப்படி? அக்கா சம்பளத்துக்கு இன்னும் ஒரு மூணு கம்பெனிய புடிச்ச சரி ஆயிடும்டா” என்று தோள் தட்டி கொடுத்து தோள் கொடுத்தான் நண்பனாய்.
வதனிக்கு அவனுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொடுத்து சில கம்பெனிகளின் ஜிஎஸ்டியும் பார்க்க வைத்தான்.
ஆர்யனும் பெரிய ஆடிட்டர் எல்லாம் இல்லை. பார்ட் டைம்மில் ஆடிட்டருக்கு படித்துக் கொண்டே, இந்த வேலையும் செய்து கொண்டிருக்கிறான். எல்லாம் அனுபவம் தந்த பாடம் தான். சிறிது காலம் ஒரு ஆடிட்டரிடம் பணிபுரிந்தது. இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்டில் நிறைய ஆட்கள் தெரிந்திருக்க.. அதை வைத்து இவன் தானாக ஒரு சிறு கம்பெனி ஆரம்பித்து நன்முறையில் நடத்தி வருகிறான்.
வதனி பற்றி முழுவதுமாக எதுவும் கூறவில்லை.
“கொஞ்சம் பிரச்சனை டா. அக்கா தனியா வந்துட்டா. நீ எதுவும் கேட்டுக்காத” என்றது பார்த்துக்கொள்கிறேன் விடுடா என்றவன்,
இந்நாள் வரை எந்த கேள்வியும் வதனியை கேட்டு சங்கடப்படுத்தாமல்.. இப்படி நண்பனை கஷ்டப்படுத்தினீர்களே என்று அவளை குற்றம் சாட்டாமல் சாதாரணமாக நடந்து கொண்டது வதனிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
ஒரு வாரம் முன்பு இடையில் அவள் விடுமுறை கேட்க நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் கேட்காமல் அனுப்பி வைத்தான்.
ஏற்கனவே பிரச்சனை என்று தெரியும் அதனால் வதனியிடம் எதுவும் அவனாக கேட்டுக் கொள்ளவில்லை.
திரும்பவும் இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறை கேட்காமல் பர்மிஷன் கேட்டவளை பெருமூச்சோடு பார்த்தவன், “எதா இருந்தாலும் எங்ககிட்டயும் ஷேர் பண்ணலாம் கா.. நீங்களே தனியா தான் பாக்கணும்னு இல்லை” என்று கூறியவனை பார்த்தவள், வெடித்துக் கிளம்பிய அழுகையை அடக்கிய வதனி “என்னால முடியலன்னா உங்க கிட்ட தான் வருவேன். தம்பிங்கனு நீங்க எதுக்கு இருக்கீங்க?” என்று செல்ல வீம்போடு சொல்லாமல் சென்றவளை பெருமூச்சு விட்டபடி பார்த்தான் ஆர்யன்.
பின் வதனி பற்றி அனைத்தையும் நண்பனுக்கு பக்காவாக பார்சல் செய்துவிட்டான்.
விகர்த்தனன் வதனியை ஆர்யனிடம் சேர்த்தது காரணமே சட்டென்று எதையும் வெளிப்படையாக கூறி விட மாட்டாள் அவள்.
அதனினும் இப்பொழுது உள்ளுக்குள்ளேயே இறுக்கமாக இறுகி இருக்க.. எதையும் பகிராமல் அடமண்டாக இருக்கும் அக்காவை வழிக்கு கொண்டு வரத் தெரியாது நண்பனிடம் ஒப்படைத்திருந்தான். அவன் மூலமாக ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று தான்.
அன்று நிரஞ்சன் வந்து பேசும்பொழுது அக்கா ரேஷ்மா மருத்துவமனைக்கு வர சொன்னதுமே, அதன் பின் இவன் சென்று விசாரித்து விட்டு தான் வந்தான்.
“அபார்ட் பண்ண வந்திருந்தாளா?” என்று கேட்டதுமே அவனுக்கு அதிர்ச்சி தான். ஆனால் அதை எதையுமே பெற்றோரிடம் பகிரவில்லை. ஏன் இப்படி செய்கிறாய் என்று கேள்வி கூட அக்காவிடம் கேட்கவில்லை. ஏனென்றால் நிரஞ்சனும் கூடவே தான் இருக்கிறான். அதனால் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை.
மதியம் வதனி மயக்கம் போட்டு விழ.. அவளோடு இருந்த பெண் ஆர்யனுக்கு ஃபோனில் பதற்றத்தோடு தகவல் சொன்னாள்.
ஆர்யனுக்கு வீடு அருகில் என்பதால் மதிய உணவுக்கு அவன் சென்று விடுவான். அதுவும் இரண்டு பெண்கள் மட்டும் என்பதால் அவர்களும் சற்று இளைப்பாறட்டும். தான் இருந்தால் அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்றுதான் அவன் சென்று விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் வருவான்.
அவன் நினைத்தது சரி என்பது போல இரு பெண்களும் தங்களுக்குள் ஏதோ பேசி சிறிது ஓய்வு எடுத்து ரிலாக்ஸாக இருப்பார்கள் அந்த இரண்டு மணி நேரமும்.. அதன் பின் ஆர்யன் வந்ததும் அவர்களுக்கும் அடுத்தடுத்து வேலைகள் வரிசை கட்டி நிற்கும்.
உணவை முடித்து அமர்ந்திருந்தவன் தீபா என்று ஃபோனில் திரையில் ஒளிர், அந்த பெண்ணிடம் இருந்து போன் வந்தது. ஏதாவது கிளைன்ட் வந்திருக்கிறார்களோ என்று நினைத்து, “சொல்லுங்க தீபா யாராவது புது க்ளைண்டா?” என்று கேட்டான்.
“இல்ல சார். வதனி அக்கா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க சார். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள் பதட்டத்தோடு.
“கர்சீஃப் இல்லைன்னா ஏதாவது துணியில தண்ணி நெனச்சு அவங்க மூஞ்சில தொடச்சு விட்டு கன்னத்த தட்டி எழுத்தை ட்ரை பண்ணுங்க தீபா இதோ நான் வந்துக்கிட்டே இருக்கேன்” என்றவன் அவசரமாக கிளம்பி வீட்டில் சொல்லிவிட்டு பைக் எடுத்தான்.
கிளம்பும்போது “எங்கடா இருக்க?” என்று கேட்டபடியே வதனி பற்றி கூறி தன் அலுவலகத்துக்கு வர சொன்னான் விகர்த்தனனை..!
ஆர்யன் கொஞ்சம் பயத்தோடு தான் வந்தான். சரியாக சாப்பிடாமல் இருந்திருப்பாங்க.. அதனால் தான் மயக்கம் என்று அவன் எண்ணியிருக்க, இங்கு காரணமோ வேறாக இருந்தது.
அதே நேரம் விகர்த்தனனும் வேகமாக வந்தவன் வரும் போதே ஆம்புலன்ஸ் தகவல் செய்து வரவழைத்து இருந்தான். அந்நேரம் அதுவும் வந்துவிட.. வதனியை இருவரும் தூக்கி ஆம்புலன்ஸ் அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
“ஏன் டா விகா.. உங்க அத்தானுக்கு சொல்லனுமேடா?” என்று கேட்டவனை முறைத்தான் விகர்த்தனன்.
“எதுக்கு என்ன முறைக்கிற உங்க அக்காவே அன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகும்போது உங்க அத்தான அழைச்சிட்டு தானே போனாங்க? இப்போ என்னன்னு அவர்கிட்ட விவரம் சொல்றது தானே.! நீ எதுக்கும் ஃபோன் பண்ணி சொல்லிடு” என்று இருவரும் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் “யாருங்க பேஷண்ட்டோ ரிலேட்டிவ்” என்றபடி வெளியே வந்தாள் செவிலியர்.
போக்குவரத்து காவல் சீருடையில் நின்று இருந்த விகர்த்தனை பார்த்து “சார் அவங்க ஹஸ்பண்ட்?” என்று கேட்க..
“நான் அவங்க தம்பி தான் என்னன்னு சொல்லுங்க?” என்றதும்
“இல்ல சார் அவங்க ஹஸ்பண்ட் கிட்ட தான் பேசணும்னு டாக்டர் சொல்றாங்க. நீங்க அவங்க ஃபேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணி வர சொல்லுங்க” என்றாள் அவள்.
“ஏன் தம்பின்னு சொல்றான். அப்போ நாங்க ஃபேமிலி கிடையாதா? ஹஸ்பண்ட் மட்டும் தான் ஃபேமிலியா?” என்று எகிறிக் கொண்டு வந்தான் ஆர்யன்.
‘அறிவிலியா நீ?’ என்பது போல அவனைப் பார்த்தவள்,
“இதுவே நாங்க சொன்னா ஒத்துக்குவீங்களா? போங்க சார் போங்க.. இந்த விஷயத்தை அவங்க ஹஸ்பண்ட் கிட்ட தான் பேசணும் டாக்டர் சொன்னாங்க. அவங்க பேமிலிக்கு சாரி சாரி நீங்களும் பேமிலி தான்ல. அவங்க ஹஸ்பண்டுக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்று சென்ற செவிலியர் சென்றுவிட,
அவளின் முதுகை முறைத்துக் கொண்டு நின்ற நண்பனின் முதுகில் தட்டியவன் “ஏன்டா இப்படி ஆவேசபடுற? இரு கூப்பிடுவோம்” என்றபடி தன் ஃபோனில் வதனி ஹஸ்பண்ட் என்று பதிவு செய்திருந்த நம்பரை அழுத்தினான்.
அதனை எட்டிப் பார்த்த ஆர்யனும் சிரிப்போடு “ஓஹ்.. உங்க அக்கா ஹஸ்பெண்ட் ஆனா உனக்கு யாரும் இல்ல.. அப்படித்தானே?” என்றவனை முறைத்தான் விகர்த்தனன்.
விகர்த்தனனின் எண் நிரஞ்சனிடம் இல்லை. புது எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் யோசனையோடு எடுத்து “ஹலோ?” என்றவனிடம்,
“அக்கா ஆஃபிசில் மயக்கம் போட்டு விழுந்துட்டா” ஹாஸ்பிடல் பெயரை சொல்லி இங்கே வாங்க என்று அழைத்தான்.
‘ஃபோன் பண்ணும்போது யாரு என்னனு இன்ட்ரடுயூஸ் பண்ண மாட்டானா? இவன் குரல் என்ன எஸ்பிபி குரலா? குரலை வைத்து கண்டுபிடிக்க?’ என்று நக்கலாக நினைத்தவன், சில நாட்கள் முன்னாடி தான் அவனிடம் அத்தனை கெஞ்சினோம் என்பதை மறந்து மச்சானை ஒரு பாட்டு பாடியபடியே வேகமாக அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் நிரஞ்சன்.
பதட்டத்தோடு வந்தவனை பார்த்து விகர்த்தனன் முறைத்துக் கொண்டு நிற்க.. ‘என்ன முறைச்சு என்ன பண்ண.. இவங்க குடும்பத்துக்கு வாகா வந்து சிக்கிட்டேன் நானு’ மனதினுள் திட்டிக்கொண்டு “என்ன ஆச்சு மேகாவுக்கு?” என்று கேட்க, ஆர்யன் நடந்தவற்றை விவரித்தான்.
தலையில் கை வைத்தபடி சாய்ந்து நின்று ஒரு பெருமூச்சு விட்டவன் “நான் சொன்னா கேட்கப் போற ஆட்களா நீங்க எல்லாம்? எவ்வளவு சொன்னாலும் உங்க அக்கா கேட்கவே மாட்டேங்குறா” என்றவன் முதலில் சாருபாலாவை சந்தித்தது அதற்கு பின் ராவண்னை சந்தித்து அவன் கூறியவற்றையெல்லாம் கூற… ஓரளவு விஷயம் விகிர்த்தனனுக்கு தெரியும் என்றாலும் முடிவு விஷயத்தை கேட்டதும் அவனுக்கும் அதிர்ச்சி..!
“சார் பேஷண்டோட ஹஸ்பெண்ட் வந்தாங்களா இல்லையா?” என்று கேட்டப்படி வந்த செவிலியரிடம்
“நான் தான் சிஸ்டர்” என்றபடி முன்னால் வந்தான் நிரஞ்சன்.
“டாக்டர் கூப்பிடறாங்க சார். வாங்க” என்றதும் அவனுக்குள் ஒரு சிறு நடுக்கம்.
இவர் ஏதேனும் புதிய புரளியை கிளப்பி விட்டால்.. அதை தாங்குமா என் மனது? என்றபடி பயம் தயக்கம் பதட்டத்தோடு நின்றிருந்த மாமனின் கையை அழுத்தமாக பற்றி
ய விகர்த்தனன் “வாங்க போகலாம்” என்று அவனோடு மருத்துவரின் அறைக்குள்ளே நுழைந்தான்.
தொடரும்..
