அழகன் 10
“ப்பூம்…” என்று தன் பின்னால் இருந்து சத்தமாக கத்தி பயமுறுத்திய ஆண்டாளை நக்கலாக திரும்பிப் பார்த்தாள் அங்கயற்கண்ணி.
“ஏ பால்கோவா நீ இன்னும் வளரவே இல்லையா டி? சின்ன புள்ள மாதிரி என்னைய வந்து பயமுறுத்துறவ..” என்ற அங்கயற்கண்ணியோ தன்னுடைய காட்டன் புடவைகளை எல்லாம் கைகளாலே நீவி அழகாக மடித்துக் கொண்டிருந்தாள்.
“ம்க்கும்.. எல்லாம் இந்த வளர்ச்சி போதும் போதும்..! என்ன அத்தாச்சி.. உங்கள வரவர பாக்கவே முடியல” என்றபடி அவளுக்கு உதவியப்படி அருகில் அமர்ந்தாள் ஆண்டாள்.
“ஆத்தி..! என்னைய பார்க்க முடியலையாமே? அட நீங்க தேன் புதுசா கல்யாணம் கட்டுனவக, மறு வீடு விருந்து மருந்துனு பிஸியா இருக்கீக.. நான் எல்லாம் பிஸி இல்லப்பா..! நான் உண்டு என் ஸ்கூல் உண்டுனுதேன் இருக்கேன்” என்று சிரித்தாள் அங்கயற்ண்ணி.
இன்று மதியம் கலையரசியோடு இவள் சமையலுக்கு உதவி கொண்டிருக்கும் நேரத்தில் தன் போல கலையரசி புலம்பி இருந்தார் மகளை பற்றியும்.. அவளின் கல்யாணம் பற்றியும்..!
“உன் வயசு தேன் ஆவது ஆண்டாளு அவளுக்கும். இந்த கண்ணி கொஞ்சம் கூட பிடி கொடுக்கவே மாட்டேங்குறா கல்யாணத்துக்கு.. அப்படி என்ன தேன் மனசுக்குள்ள வச்சிட்டு இருக்கியாளோ? ஒன்னும் விளங்கல..! கேட்டாலும் இப்ப வேணா வேணானு தள்ளி போடுறா..!” என்று வருத்தத்தோடு மருமகளிடம் பேசிக் கொண்டே சமையலை கவனித்தார்.
“இவளுக்கும் அழகனுக்கு எட்டு வயசு வித்தியாசம்..! இவளுக்கு முடிச்சிட்டு தேன் அவனுக்கு முடிக்கணும்னா அதுக்குள்ள அவனுக்கு வயசு ஏறிடாது?” என்று கலையரசி அவளிடம் கேட்க..
ஆண்டாளுக்கோ இதில் தான் என்ன கருத்து கூறுவது என்று புரியாமல் பொதுவாக சிரித்து வைத்தாள்.
ஆனால் அவளின் செல்ல அத்தைக்கு மகளின் கல்யாணத்தைப் பற்றி பெரும் கவலை இருக்கிறது என்று புரிந்து கொண்டவள், அந்த கவலையை கலைந்தெடுக்க இந்த கண்ணியின் மனதில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள அவளிடம் தூண்டில் போட வந்தாள் ஆண்டாள்.
“அடி பால்கோவா.. துணிய ஒழுங்கா மடிக்கிறதுனா மடி..! கனவு கண்டுகிட்டு உட்கார்ந்திருக்காத.! இங்கன பாரு நான் புடவை எடுத்துட்டேன் நீ வெறும் பெட்ட மட்டும் நீவி விட்டுகிட்டே இருக்குறவ.. ஆளுதான் இங்க இருக்க.. நினைவு எல்லாம் வேற எங்கேயோ இருக்கு..! சொல்லு? சொல்லு? எங்க அண்ணன தானே நினைச்சிட்டு இருக்க?” என்று கண்சிமிட்டி கேலியாக கேட்ட கண்ணியை கண்டு உதடு சுழித்தாள் ஆண்டாள்.
“அப்புறம் சொல்லு பால்கோவா? எப்படி கல்யாண வாழ்க்கை எல்லாம் போகுது? எங்க அண்ணே கொஞ்சமா அடி வாங்குதா இல்ல நெறையாவா?” என்று கேட்டாள் கொடுப்புக்குள் சிரித்து..!
“ம்க்கும்.. நன்னா கேட்டேள் போங்கோ..” என்று ஆரம்பித்து கர்லாக்கட்டை போல அன்று அவளை அவன் சுற்றியதை விழி விரித்து கூறியவளை கண்டு கலகலவென சிரித்தாள் கண்ணி.
“அடியே.. போதும் டி.. எங்க அண்ண மானத்த வாங்காதே..!” என்றாள் சிரிப்போடு..!
“நானுமே உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன் அத்தாச்சி.. நீங்க ஏன் இன்னும் கல்யாணத்துக்கு சம்மதிக்கல.. அத்த ரொம்ப பீல் பண்றாங்க” என்றாள் பாவமாக முகத்தை வைத்து,
“என்ன உங்க அய்த்த உன்னைய வச்சு எனக்கு தூண்டில் போட பாக்குறாய்ங்களா.. அப்படியெல்லாம் சிக்க மாட்டா இந்த கண்ணி” என்று நைட்டியில் இல்லாத காலரை தூக்கி விட்டாள்.
“ஆமா அப்படித்தான் வச்சுக்கங்கோ..! அத்தையும் பாவம் தானே.! உங்களை நினைச்சு எவ்வளவு மனசு கஷ்டப்படுறா.. நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னா தான் என்ன அத்தாச்சி? அதுவும் உங்களோட நான் சின்ன பொண்ணு எனக்கே கல்யாணம் ஆயிட்டு.. நீங்க இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தா அவங்க மனசு வருத்தமா இருக்குமோனோ?” என்றதும் ஒரு பெரும் மூச்சு கண்ணியின் நெஞ்சத்தில் இருந்து வெடித்து கிளம்பியது..!
வீட்டினில் இருக்கும் அனைவரின் மனமும் அவளுக்கு புரியத் தான் செய்தது. ஆனால் என்ன செய்ய.. அவர்களின் மனத்தை குளிரப்படுத்தினால் தன் மனது அல்லவா வெந்துத் தணியும் என்று ஒரு சிரிப்பு உடனே ஆண்டாளின் பேச்சை தவிர்த்தாள்.
“ஆமா பால்கோவா? என்ன இந்நேரத்துக்கு இங்கன உக்காந்துட்டு கத அளந்துட்டு இருக்குறவ.. இன்னிக்கு நீங்க எங்கேயும் வெளில போகலையா?” என்றதும்,
“பேச்ச மாத்தாதீங்கோ அத்தாச்சி..!” என்று மூக்கை சுருக்கி கோபமாக பார்த்தாள் ஆண்டாள்.
அவளது மூக்கை பிடித்து ஆட்டி “அழகு டி பால்கோவா நீ..!” என்று கூறிய அத்தை மகளை கண்டவள்,
“எனக்கு ஐஸ் வைக்காதீங்கோ காரணம் சொல்லுங்கோ..!” என்றாள் தீவிரமான முகத்தோடு..!
“காரணம் தானே? சொல்லிடுவோம்..! சொல்லிடுவோம்..!” என்று புடவைகளை அழகாக அவளது பீரோவில் அடுக்கி வைத்தவள் அதை பூட்டி வந்து ஆண்டாளின் அருகில் அமர்ந்து இரண்டு கைகளையும் பின்னால் வைத்து தளர்வாக அமர்ந்தாள்…
“ஆமா.. என்னத்துக்கு இப்ப கல்யாணம் பண்ணனும்? சொல்லு?” என்று கேள்வி கேட்டவளிடமே கேள்வியை திருப்பினாள் அங்கயற்கண்ணி…
“அது.. அது.. ஆமா எதுக்கு பண்ணனும்? ஹான்.. எப்படி இருந்தாலும் ஆத்துல நம்மள வச்சுக்க மாட்டாளோனோ.. ஒரு ஆணுக்கு பெண்ணுடன் தானே கல்யாணம் பண்ணி வைப்பா. அப்போ தானே லைஃப் ஃபுல் ஃபில் ஆகும்?” கண்ணியின் கேள்விக்கு என்ன சரியான பதில் சொல்வது என்று தெரியாமல் ஏதேதோ உளறி வைத்தாள் ஆண்டாள்.
“சோ, உனக்கும் சரியான காரணம் தெரியாது, எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாய்ங்கனு? ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கிட்ட..” என்றதும் அவளைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்து ஆமென தலையாட்டினாள் ஆண்டாள்.
“சரி பொழைச்சு போ..! இந்த கேள்விக்கு ஆன்சர் பண்ண வேணாம். அடுத்த கேள்வி கேட்கிறேன்.. அதுக்கு நீ ஒழுங்கா ஆன்சர் பண்ணிட்டேனா.. நானும் உன்னோட கேள்விக்கு ஆன்சர் பண்றேன். சரியா டி பால்கோவா?” என்று கேட்க..
இப்பொழுது நல்ல பிள்ளையாய் இரு கால்களையும் சம்மணம் போட்டு அங்கயற்கண்ணி அருகில் நெருங்கி வந்து “கேளுங்க கேளுங்க அத்தாச்சி..” என்று ஆர்வமாய் கேட்டாள் ஆண்டாள்..
“கொஞ்சம் இண்டிமேட்டா தான் இருக்கும்..! சரி சொல்லு.. லைஃப்ல உங்க ரெண்டு பேரோட இன்டிமேஷன் எப்படி இருக்கு? எல்லாம் சரியா போகுதா? இல்ல கடனேனு போகுதா?” என்று வேண்டுமென்றுதான் கேட்டாள் அங்கயற்கண்ணி..!
என்ன தான் தற்போது அண்ணி என்றாலும் அதை தாண்டி மாமன் மகள் அல்லவா சிறுவயதில் இருந்தே.. அந்த நல்ல பழக்கத்தில்.. அந்த உரிமையில்.. தான் கேட்டாள்.
“அச்சே... இது என்ன கேள்வி?” என்று முறைத்த ஆண்டாளுக்கு..
அவள் கேள்வியினை மீண்டும் ஓட்டிப் பார்க்க, இப்போது
அழகனின் முகமும்..
அவனது அருகாமையும்..
அவனது ஆண்மை வாசமும்.. திம்மென்ற நெஞ்சமும்…
திண்ணென்ற புஜமும்.. அந்த முறுக்கிய மீசையும் கண்களில் உலா போயின…!
“ஏட்டி பால்கோவா.. நான் இங்கன கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் என்னடி கனவு காண்ற?” என்று அவள் கன்னத்தை கிள்ளினாள் அங்கயற்ண்ணி.
“சீ.. போ அத்தாச்சி.. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்ல.. என்ன எல்லாம் கேட்கிற நீ? ஸ்கூலுக்கு போய் எல்லாருக்கும் நல்ல புத்தி வருமுனு சொல்லுவா.. ஆனா நீ ஸ்கூலுக்கு போய் கெட்டுப் போயிட்ட..” என்று அவள் மூக்கை சுருக்கி பேச.. கலகலவென்று சிரித்தாள் அங்கயற்கண்ணி.
“இங்கே பாரு பால்கோவா..
இந்த மாதிரி விஷயத்துல கல்யாணன நீ தேன் கல்யாணம் ஆகாத என்னைய மாதிரி சின்ன புள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்கணும். அப்பதேன் பிற்காலத்துஐ நாங்களும் கல்யாணம் பண்ணிட்டு எங்க வாழ்க்கைய ஜெகஜோதியா வாழ்வோம்..! நீ இப்படி எதுவுமே எனக்கு சொல்லிக் கொடுக்கலைன்னா அப்புறம் நான் எப்படி கல்யாணம் பண்ணிக்குறது..” என்று அவளை குழப்பி விட..
‘இப்பொழுது என்னத்தை இவளிடம் சொல்வது? எதை மறைப்பது? இல்ல இல்ல எங்களுக்குள்ள தான் ஒன்னுமே நடக்கலையே.. அத சொல்வதா? வேணாவா? இல்ல அப்போ அப்போ நடைபெறும் சிறு தீண்டல் சீண்டலை சொல்லுவதா?” என்றும் பெரும் குழப்பத்திற்கு உள்ளானாள் ஆண்டாள்…
“ஆனாலும்.. அந்தரங்கம் என்பது கணவன் மனைவிக்குள்ளே உள்ளது. அதை அத்தை மகளே ஆனாலும் இவளிடம் கூறவா முடியும்?” என்று நொடிப் பொழுதில் அறிவாளியான நம் ஆண்டாள்,
“உன் கிட்ட சொல்ல முடியாது. நான் இன்னும் உன்னோட மாமா பொண்ணு மட்டுமே கிடையாது. உன்னோடு மதனியாக்கும்..!” என்று அவள் நிமிர்ந்து அமர..
“ஆஹா.. பார்றா பால்கோவா குடும்ப பாலிடிக்ஸ் எல்லாம் பேசுது.. ஆக மொத்தம்.. நீ சொல்ல மாட்ட இல்ல.. அப்போ நானும் சொல்ல மாட்டேன் போடி..!” என்று இவளும் முறைத்துக் கொள்ள..
ஆண்டாளுக்கும் கோபம் வர “நீ போடி..!” என்று அவளும் மறுபக்கம் திரும்பிக் கொள்ள..
“எது? நான் போடி யா? நான் உன்னோட பத்து மாசம் பெரியவ டி, என்னைய டி போடுற? எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னைய போடி சொல்லுவ?” என்று அவள் காதை திருகினாள் அங்கயற்ண்ணி.
“ஆ வலிக்குது அத்தாச்சி..! விடு.. விடு..” என்றவள்,
“இங்க பார்.. நான் இப்போ உனக்கு மதனியாக்கும். அதனால உன்னை டி போட்டா தப்பு இல்ல..!” என்றவள்,
அங்கயற்ண்ணியின் கையில் இருந்து தன் காதினை விடுவித்துக் கொண்டு “அப்படிதான் டி சொல்லுவேன்.. என்ன டி பண்ணுவ? போ டி நாத்தி..!”:என்று கிண்டலாக உரைத்து விட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள் ஆண்டாள்.
ஆனால் கடைசியாக கேட்க வந்ததை கேட்டு அவளிடம் பதில் பெறவில்லை என்பதை மறந்து விட்டிருந்தாள் ஆண்டாள்.
அங்கயற்கண்ணிக்கும் அதுதானே வேண்டும்..!
“
சரியான வாலு.. என்னென்னு என் அண்ணன் இவள வச்சு சமாளிக்காதோ தெரியல..” என்று சிரித்தபடி ஆண்டாள் சென்ற வழியை பார்த்து இருந்தாள் அங்கயற்கண்ணி.
இரவு உணவு கணவர்களுக்காக காத்திருப்பதில்லை அவ்வீட்டில்
பெண்கள் பெரும்பாலும்..
வயோதிகத்தின் காரணமாக முத்துப்பாண்டி மாலை இருள் கவ்வியதும் வெளியில் செல்ல மாட்டார். அவருக்கு உணவு கொடுத்து அதன் பின் சொக்கியம்மாள் கலையரசி அங்கயற்கண்ணி மூவரும் இரவு உணவை சேர்ந்து உண்பார்கள்.
அதன் பின்பு போஸ்பாண்டி அழகன் வரும் நேரத்திற்கு அவர்களுக்கு உணவை பரிமாறுவார் கலையரசி.
இப்பொழுது ஆண்டாளும் சேர்ந்து விட, நான்கு பெண்களும் சேர்ந்து உணவருந்தி முடித்தனர்.
தன் அறைக்குள்ளே அமர்ந்திருந்து வாட்ஸ் அப்பில் குரூப் அரட்டையில் ஈடுபட்டிருந்தாள் தன் தோழிகளோடு ஆண்டாள். அழகன் ஏற்கனவே வந்து விட்டிருந்தான். அவனுக்கு உணவு பரிமாறி விட்டு அவன் உண்டதும் இவள் மேலே வந்திருந்தாள்.
அவன் இன்னும் அறைக்குள் வரவே இல்லை..
ஆனால் இங்கே அரட்டைக் கச்சேரியில் “புதுப் பெண்ணையும் உட்கார வச்சி ரொம்ப அறுக்காதிங்க டி.. அவ இந்நேரம் எங்க எப்படி இருக்க வேண்டிவ?” என்று சிரிப்பு வெட்க ஸ்மைலிகளோடு மெசேஜ்களை அவளது தோழிகள் பகிர இவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.
எதுவும் சொல்ல முடியாமல் வெறும் சிரிக்கும் ஸ்மைலிகளை போட்டு இவள் சமாளித்துக் கொண்டிருக்க..
அவ்வப்போது அத்தோழிகள் கூட்டத்தில் “டி மாமி.. நான் மாம்ஸ கேட்டதா சொல்லு?” என்று
“ஆண்டாளு.. மாம்ஸ இப்படியே இதே ஃபிட்டோட பார்த்துக்கடி..!” என்று அவனையும் அவனது உடற்கட்டையும் கள்ளத்தனமாய் ரசித்தபடி சில தோழிகள் குறிப்பிட அவர்களுக்கு கோப ஸ்மைலியை அனுப்பி வைத்து குட் நைட் போட்டு வெளியே வந்து விட்டாள் ஆண்டாள்.
சற்றே பொறாமை பொங்கி வழிந்தது அவளது வதனத்தில்..!!
“ஆனாலும்.. அவ்வளவு அழகான இந்த கள்ளழகன்? இத்தனை பேரு என்கிட்டயே ஜொள்ளு விடுறாளுங்க?” என்று அவள் சிந்தனை செய்து கொண்டிருக்கும் போது..
வீட்டில் கட்டும் வேட்டி கையில்லா வெள்ளை பனியனோடு வேட்டி நுனியை இடது கையால் பிடித்துக் கொண்டு, வலது கையால் ஃபோனை பார்த்துக் கொண்டே அவர்களது அறை உள்ளே நுழைந்தான் கள்ளழகன்.
அவனது உடலை கவ்வி பிடித்து இருந்தது அந்த வெள்ளை பனியன்.
அந்த வெள்ளை பனியன் ஏதோ ஒரு கவர்ச்சியை அவனுக்கு கொடுத்தது உண்மை..!
அப்பனியனை மீறி நெஞ்சின் மீது லேசாக வெளிப்பட்ட சுருசுருவென்று இருந்த அடர்ந்த கருத்த முடியும்..
கையில்லா பனியன் வழியே திண்ணென்று தெரிந்த அவனது உருண்டு திரண்ட புஜங்களும்…
நீளமான அழுத்தமான விரல்களும்.. அவன் இடையை இறுக்கி பிடித்திருந்த அவன் வேட்டியும்.. தொப்பை இல்லா வயிறும்.. அழுத்தமான முரடான கால்களும் அதன் விரல்களும்.. என்று
அறையிலேயே நடந்து கொண்டே ஃபோன் பேசிக் கொண்டிருந்தவனை அணு அணுவாக பார்த்திருந்தாள் ஆண்டாள் அவளை அறியாமல்..!
சாதாரண பார்வை தான்..!
அந்த பார்வை மெல்லிய சலனமாக மாறி அவளை அறியாமலேயே அவளை ஈர்த்துக் கொண்டிருந்தான் அவன்.. அழகன்..!
கள்ளழகனுக்கு கிஞ்சித்தும் தன் மனைவி தன்னை ரசிக்கிறாள் என்ற எண்ணமே இல்லை. இவன் யாரிடமோ தொழில் விஷயமாக ஃபோன் பேசிக்கொண்டு அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் ஏதோ அவனது உள்ளுணர்வு அவனை உந்தி திரும்பி பார்க்க சொல்ல.. நடந்து கொண்டே திரும்பி பார்த்தவனை கண்டு திடுக்கிட்டாள் ஆண்டாள்.
உடனே அவள் பார்வையை மாற்றிக்கொள்ள… இவனும் யோசனையோடு ஃபோனில் பேசிக்கொண்டே ‘இவ நம்பள இப்ப பார்த்தாளா? அட இவளாவது நம்மள பார்க்கிறதாவது? உனக்கு ஓவர் கற்பனையடா அழகா’ என்றபடி அவன் தொழில் விஷயத்தினை பேச..
மீண்டும் மீண்டும் அதே உள்ளுணர்வு அவனுக்கு அழுத்தி சொல்லியது அவன் மனைவி அவளை ரசிக்கிறாள் என்று..!
மீண்டும் திரும்பிப் பார்க்கலாமா என்று ஒரு எண்ணம் அவனுக்குத் தோன்ற..
“வேணாம்.. வேணாம்.. அவளே இப்போ தேன் நம்மள பார்க்குறா.. நல்லா பார்த்துக் கொள்ளட்டும்..! அப்பயாவது நான் அவ புருஷனா உன் மனசுல பதியட்டும்” என்றவன் இன்னும் அந்தப் பக்கம் ஃபோனை வைக்க முயன்றும்… இவனோ விடாமல் இன்னும் பேச்சை வளர்த்துக் கொண்டே இருந்தான், தன் மனைவி தன்னை நன்றாக பார்க்கட்டும் என்று..!
ஆனால் மனைவியின் பார்வை தற்போது தன் மீது அழுத்தமாக படிந்ததை கண்டு, அதன் மேலும் அவளை கண்டு கொள்ளாமல் விடக்கூடாது என்று நினைத்தவன், நடந்துகொண்டே கதவை தாழ் போட்டு வந்தவன், ஃபோனை அணைத்து ஓரமாக வைத்துவிட்டு அவள் முன்னே கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.
கணவன் தன்னை கவனிக்கவில்லை என்று அவனையே கவனித்துக் கொண்டிருந்த ஆண்டாளுக்கு.. அவன் கதவை தாழிட்டதோ? ஃபோனை அணைத்து வைத்ததோ? தன் முன்னே நின்றதோ? எதுவுமே தெரியவில்லை..!
தன் போல அவனையும் அவனின் அசைவுகளையும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் பொம்மா..!” என்று அவன் சத்தமாக அழைக்க..
அவளோ அப்பொழுதும் அவன் முகத்தை தின்று விடுவது போலவே பார்த்துக் கொண்டிருக்க..
“என்ன இவ இப்படி பார்க்கிறா?” என்று கருத்த கள்ளழகனின் முகமோ வெட்கத்தில் சிவந்து போனது..!
அதற்கு மேல் தாங்காமல் “அடியே பொம்மா..” என்று வேகமாக அவன் அழைக்க.. அதற்கு பின்னே தான் திடுக்கிட்டு விழித்தவள் அவனை திருதிருவென பார்த்தாள்.
வெண்ணெய் திருடி மாட்டிக்கொண்ட கண்ணனை போல…
“ஓய் என்ன? என்ன பண்ணிட்டு இருந்த!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி இடுப்பில் கை வைத்தபடி அவன் கேட்டதும்..
“அச்சோ.. ரங்கநாதா..!” என்று முகத்தை மூடிக்கொண்டவள் அவன் அசையாது நின்றிருந்ததை பார்த்து “போச்சு.. போச்சு..!” என்று அங்கிருந்து அவள் ஓட முயன்றாள்.
கட்டிலில் இருந்து எழுந்து ஆண்டாள் ஓட, அழகன் அவளின் புடவையை பிடித்து இழுத்தான். சுவற்றில் அடித்த பந்தைப் போல் அவள் வேகமாக திரும்பி வந்து, பல்லியை போல் அவனின் மேல் ஒட்டிக் கொண்டாள். அவளின் மென்மைகள் இரண்டும் கோமகனின் வன் நெஞ்சில் நசு
ங்க, கைகள் இரண்டும் அவன் கழுத்தில் பின்னிக் கொண்டாள்.
“பொம்மா..” என்று ஆசையாக அழைத்தவன் அவளது முகம் காட்டிய வெட்க பாவனையில் அசந்து தான் போனான் அழகன்..!
தொடரும்..
