ராசிகா ஓரளவிற்கு தைரியத்தை வரவைத்துக் கொண்டு நடந்து செல்ல, அவளுக்கு எதிரே சற்று தொலைவில் ஒருவன் வந்து நின்றான். சுற்றியும் கரும்பு தோட்டமாக இருக்க, எப்படி இவன் என யோசித்தவள் மனமோ ஓடு என எச்சரிக்கை விடுத்தது.
அவன் முன்னோக்கி வர, அவளோ பின்னால் இரு அடி நகர்வது போல் நகன்றவள் ரெடி ஜுட் என்பது போல் ஓடத்தொடங்கினாள். தப்பித்தால் போதுமென ஓடியவளுக்கு காலில் குத்திய கல்லும் முள்ளும் பெரிதாக தெரியவில்லை.
மண் தரையில் பல முறை விழ வேண்டியவள் அதிர்ஷ்டவசமாக எங்கும் விழவில்லை. விழுந்திருந்தால் நிச்சயம் அவனிடம் சிக்கியாருப்பாள்.
"ஹேய்.. நில்லு.. நில்லு டி.. ஓடாதே.. சொன்னா கேளு.." என்றவன் அவளை விரட்டி வர, அவளும் எதிரே என்ன வருகிறது என கூட பாராமல் ஓடுவதில் மட்டுமே குறிக்கோளாக இருந்தாள்.
"ஹேய் நில்லு டி.. நில்லு.." என மர்ம ஆசாமி அவளை துரத்தியப்படி யாருக்கோ போன் செய்தான்.
மறுமுனையில் அழைப்பை ஏற்க, "பபட்சிஈஈ.. சிக்கிருச்சு டாஆஆ.. ஐயாக்கன்னு.. கரும்பு தோட்டத்து கிட்ட.." என மூச்சைச்சிரைக்க கூறியவன் அவர்களையும் வருமாறு உத்தரவிட, காதில் கேட்டவளுக்கு தான் நாடி நரம்பெல்லாம் கிலி பிடிக்க உறைந்து போனது. இப்படியொரு நாள் வாழ்வில் வருமென கனவில் கூட நினைத்ததில்லை.
வேறு யாருக்காவது இது போல் சம்பவம் நடந்தது பற்றி செய்தியில் பார்த்தால் கூட, யாருக்கும் இதனை போல் ஒரு துயரம் நடக்க கூடாது என நண்பர்களிடமும் வீட்டினரிடமும் பலமுறை அதனை பற்றி பேசி கண்ணீர் வடிக்காது நொந்து கொள்வாள்.
ஆனால், இன்று! அவளது உயிர் இருக்குமா? என்பதே அவள் கையில் எதுவும் இல்லாத நிலை. வெகுநேரம் ஓடியவள், சந்து சந்தாக நுழைந்து ஓடியதில் துரத்தி வந்தவன் தான் எந்த பக்கம் சென்றாள் என தெரியாது குழம்பி நின்றான் ஓரிடத்தில்.
'கடவுளே என்னை காப்பத்து.. ப்ளீஸ்.. என்னை காப்பாத்திரு.. எனக்கு சாவு வந்தாலும் பரவாயில்ல.. ஆனா, இவனுங்க கையில சிக்கி சின்னா பின்னம் ஆகுற மாதிரி மட்டும் வரக்கூடாது.. அப்படியொரு நிலைமை வந்தா நானே என்னை அழிச்சுப்பேன்..' என அவளோ ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு கண்ணீர் கசிய, புலம்பி தவித்தாள்.
மூச்சு விடும் சத்தம் கூட வெளியே கேட்டால் தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ என நினைத்தவள் வாயை இரு கைகளால் இறுக மூடிக்கொண்டாள்.
"ஹேய் ஆர்த்தி.. உன்கிட்ட தான் சொல்லுறேன்.. இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? வரயா? இல்லையா?" என தங்கையிடம் அழுத்தி வினவ, அவள் தான் ஏதோ யோசனையிலே கிளம்பாது தயங்கி நின்றாள்..
"ஹேய் அறிவுகெட்ட மாடே, ஒரு பொண்ணை காணாம்ன்னு பதட்டம் இருக்கா? அதை விட்டுட்டு இப்படி எருமை மாடு மாதிரி நிக்கிற?" என்றவன் வண்டியில் ஏறாமல் நின்றிருந்தவளை பளாரென அறைந்தே விட்டான்.
அந்த அறைக்கு பின் தான் சுயம் பெற்றவள், தழுதழுத்த குரலில் "அஸ்வத் நிஜமா எனக்கு என்ன செய்யன்னு தெரியல. நாம வீட்டை பூட்டிட்டு போய்ட்டா அவ எப்படி இங்க வருவா?" என அஸ்வத் கோவம் புரியாது அக்கேள்வியை கேட்க, அவனுக்கு தான் மேலும் கோவம் எகிறியது.
"நீ வந்தா வா.. இல்லை நான் போறேன்.." என கூறி அவனும் கிளம்ப, அவனையும் செல்ல விடாது தடுத்தாள்.
"ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம்.. அவ நிச்சயம் வந்திடுவான்னு தோணுது.. பால்குடம் பாக்க எதுவும் போய்ட்டாளான்னு தெரியல.. கொஞ்சம் வெயிட் பண்ணு அஸ்வத்.." என தன் மனதில் தோன்றிய எண்ணத்தை அவனிடம் கூற, அவனுக்கோ உடன்பிறந்தவள் என்பதை மறந்து கண்மண் பாராத அப்படியொரு சீற்றம் உருவெடுத்தது.
"இருக்கிற கொலைவெறியில உன்னை வெட்டி போட்டுடலாம் போல இருக்கு.. வந்தா வா.. இல்லை தொலைஞ்சு போ.. அவ வரல நீயும் இருக்க கூடாது.." என எச்சரித்தவன் சிந்தையெல்லாம் நள்ளிரவு ஒரு பெண்ணை காணவில்லை என்பதோடு, விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்னும் பதட்டமே நிறைந்திருந்தது.
பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்ப, ஒரு பைக் மின்னல் வேகத்தில் சர்ரென வந்து அவளின் வீட்டின் முன்பு நின்றது.
ஆடவன் ஒருவன் பின்னால் அமர்ந்திருந்த ராசிகா கீழிறங்கினாள், அவனுக்கு நன்றி கூறிக்கொண்டே. ஆர்த்தி ஓடிச்சென்று அவளை இறுக கட்டிக்கொண்டு அழுது குசலம் விசாரிக்க, அஸ்வத்தோ முதலில் அவள் வந்த சந்தோசத்தில் சிலாகித்தவன் மனமோ அவன் யாரென அறிய துடித்தது.
ஆரத்தழுவிய மனமோ இப்போது, "ராசிகா எங்க போயிட்டு வர? சொல்லாம கொள்ளாம எங்க போன? அதுவும் நடுராத்திரில போக என்ன அவசியம்?" என்றவன் பார்வை பைக்கை ரிவர்ஸ் எடுத்து திருப்பியவன் மீது பதிய, "யாரு இது? யாரு இவன் சொல்லு.." என்றான் அதட்டலான தொனியில்.
அவளுக்கு அவன் பெயர் கூட தெரியாது. அப்படியிருக்கும் போது எப்படி கூறுவாள்?
"அது வந்து.. அது.. " என அவளோ தடுமாற, "பீ சேஃப்.. டேக் கேர்.." என கூறியவன் ஹெல்மெட்டை கழட்டாது தலையசைப்பை தெரிவித்தான்.
அவனுக்கோ பெரும் நன்றி கூறும் விதமாக கண்ணீரிலே பதில் கூறினாள். அவனும், அவளை ஆழ ஒருப்பார்வை பார்த்து விட்டு நகன்றான்.
வந்த வேகத்தில் அவனும் கிளம்பிட, முன்பு அவள் காணவில்லை என்ற பதட்டத்தை விட எவனோ ஒருவனோடு ஜோடி போட்டு வந்த செயல் அஸ்வத்திற்கு பெருங்கோவத்தை உண்டாக்கியது. ராசிகா! என அலறியவன், அவளை அடிக்க ஓங்கிய கையை கூட மையல் கொண்ட மனம் மறுத்ததில் கையை கீழிறக்கினான்.
ராசிகா அவன் ஓங்கிய கையை கூட கவனிக்கவில்லை. தான் உயிர் பிழைத்து வந்த நினைவுகளே, அவளை எதன் மீதும் கவனம் செலுத்தாதப்படி மோன நிலையில் ஆழ்த்தியது.
ஆர்த்தி தான் தோழியை ஆறுதலாக அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்த ஆர்த்தியை கனலாக பார்த்தபடி உள்ளே நுழைந்த அஸ்வத், "போதும்.. போதும்.. அவ சாப்பிட்டாளா என்னனு கேட்டு குடிக்க ஏதாவது கொண்டு வா.." என கட்டளையிட அவன் இப்போது ஆர்த்தியின் இடத்தில் அமர்ந்து கொண்டான்.
ராசிகாவிற்கு அவன் மீது காதல் கிடையாது. ஆனால், ஒரு நண்பன் ஸ்தானத்தில் அவனை பார்க்க கூடியவள். அவன் காதலிப்பது நன்கு தெரியும். ஆனால் தெரியாதப்படி இருக்கிறாள்.
"ராசிகா!" என அவன் அழைத்ததுமே அவன் தோளில் சாய்ந்து அழுதவள், நடந்த நிகழ்வு அனைத்தையும் விசும்பலோடு விவரித்தாள்.
எல்லாம் கூறியவள் இறுதியில் அடைக்கலம் கொடுத்தவனே, ஏதேர்ச்சியாக தன்னை காப்பாற்றிக் கொண்டு வீடு வந்து சேர்த்ததை கூறும் போது தான் அஸ்வத் முகம் சந்தேகத்தின் பிறப்பாக மாறியது.
'அதெப்புடி? ஒன் டைம் அவ இவன் வீட்டுக்கு போயிருக்கா. அப்போ இவளை அவன் சேஃப் பண்ணிருக்கான். இது கோ-இன்சிடென்ட். தென் எப்படி அவனே வருவான்?' என ஆழ்ந்து யோசித்தவனை, "அஸ்வத் இந்தா இதை அவளுக்கு குடு." என ஜூஸினை நீட்டியப்படி வந்து நின்ற ஆர்த்தி குரல் சிந்தையை கலைக்க எழுந்து விலகி நின்றான்.
"எப்படியோ நீ வந்ததே போதும். இல்லை விடிஞ்சதும் என்ன ஆகியிருக்கும்? அதுவும் கோவிலுக்கு போன என் அம்மா அப்பா திரும்பி வந்தா, என்னை கொன்றுப்பாங்க." என்றவள் தோழியின் கண்ணீரை துடைத்து ஜூஸினை குடிக்க வைக்க, அவளுக்குள் இருந்த படபடப்பு தான் இன்னும் குறையவில்லை.
"சரி ரெண்டு பேரும் போய் தூங்குங்க. ஆர்த்தி ரூம்க்கு போ." என்றதும் அவள் நகர..
அருகே அமர்ந்தவன், "ராசிகா! சொல்லாம எங்கையும் போகாதே." என அவளது உள்ளங்கை பற்றி கூற, அவள் ஆயாசமாக அவனை நிமிர்ந்து பார்த்த நொடி, தன்னுள் உண்டான மாற்றத்தில் குதூகலித்தான்.
விழியால் கொல்லாதே..
இன்சொல் கூறி ஜீவனாகி விடு!
"அஸ்வத் ஸாரி.."
"எதுக்கு?" என்றவன் அவனது பிடியை மட்டும் விடவில்லை. மேலும் இறுகியது தான் நிஜம்.
"எனக்கு அவங்க.. யாருன்னு தெரியாது.."
இறுக பல்லை கடித்தான். அவளை ரசித்த விழிகள் ரெண்டும் கூர் பார்வை பார்த்தது. எவனோ ஒருவனுக்கு தந்த மரியாதையை எண்ணி.
"லிசன் ராசிகா, நீ வந்த பின்னாடி தான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு. உன்னை காணாம்ன்னு.." என்றவன் முகம் மேலும் இறுக, அவளோ "ஸாரி டா.." என்றாள் முதன் முறையாக. எபோதும் ஆர்த்தியிடம் பேசும் நியாபகத்தில்.
அந்த ஸாரியில் மேலும் உயிர் பெற்றவன் போல் அவளை ரசித்து பார்த்தவன், "போய் தூங்கு எதுனாலும் மார்னிங் பேசிப்போம்.." என்றவன் விலகி செல்ல, அவளது நினைவு முழுதும் அவள் தப்பித்து வந்த நினைவே ஆக்கிரமித்தது.
பிரதீஷிற்கு எது நடந்தாலும் அவனை பொறுத்த வரை எல்லாம் சாதாரண விடயம் தான். அதே போல் இதுவும் சாதாரண ஒன்றாக தெரிய, வழக்கம் போல் நிம்மதியாக உறங்கி விட்டான்.
விடிந்த பின்பு தான் பெரிய தலைவலியே உண்டானது நாயகனுக்கு. எல்லோரும் பெண்பார்க்க செல்ல முடிவு எடுக்க, சாவித்திரி பாட்டியோ எப்படியோ அனுமதி வாங்கி விட்டார் அவனிடம். இதே சந்தோசத்தோடு எல்லோரும் பிருந்தா வீட்டிற்கு பயணமாகினர்.
மாப்பிளை வீட்டினர் வருவதால் வீட்டில் எல்லோரும் ஒருவித பரபரப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அக்கம் பக்கத்தினர் வேறு பிருந்தாவை பெண் பார்க்கும் செய்தி கேட்டு, சமையலுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.
ஏனோ, பிருந்தா மனம் தான் நெருடலாக இருந்தது. வேறு வழியின்றி அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் அவளது அத்தை வேதகி அவரின் உதவியோடு.
"பிருந்தா வந்ததும் எல்லாருக்கும் வணக்கம் சொல்லு. கொஞ்சம் சிரிச்ச முகமா இரு!" என்றவர் கடல் நீல நிற பட்டுபுடவையில் மின்னும் மருமகளை கன்னம் வழித்து, நுதல் முத்தமிட்டார்.
அவளோ, ஏதோ கட்டாயத்தின் பேரில் மல்லிகை சரத்தை சூடுவதை போல் சூடிக் கொண்டாள்.
ராணி, "பிருந்தா நகையெல்லாம் எடுத்து போட்டுக்கோ.." என குரல் கொடுத்தப்படி அவளது அன்னை உள்ளே நுழைய, அவள் எல்லாம் அணிந்து தயாராக இருப்பதில் நெகிழ்ந்தவர் கன்னம் கிள்ளி முத்தமிட்டு கொஞ்சி நகர்ந்தார்.
அவளின் மௌனமும், வெறித்த பார்வையையும் வேதகி புரிந்து கொண்டவர் "பிருந்தா இந்த மாப்பிளை தான் உன் லைஃப்ன்னு சொல்லல. முதல பாக்கட்டும். மாப்பிளைக்கு பிடிக்கும். ஏன், கண்டிப்பா உன்னை பிடிக்கும்!" என்றார் அழுத்தமாய்.
"அத்தை எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்." என இயல்பாக கூறியதில், அவரும் நிம்மதி பெருமூச்சு ஒன்று விட்டு நகர்ந்தார். பிருந்தாவை பெண் பார்க்க வரும் முதல் மாப்பிளை பிரதீஷ் தான். அதான் ஒருவித பதட்டமும், எதிர்பார்ப்பும் அவளிடம் அதிகமாக இருந்தது.
"மாப்பிளை வீட்டுக்காரவங்க வந்தாச்சு.." என ஒருவர் குரல் கொடுக்க, ஆண் பெண் உட்பட எல்லோரும் அனைவரையும் வாசலில் வந்து நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
எல்லோரின் மனநிலையும் சதோஷத்தில் திளைத்திருக்க, மாப்பிளையாக வந்தவன் மனமும் முகமும் என்ன நிலையில் உள்ளது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
தலை கவிழ்ந்து அமர்ந்தப்படி வாட்சப் குரூப் மெசேஜ்ஜை பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை ஆப்ரேஷன் கேஸ் முடிந்துள்ளது, யாரெல்லாம் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர். அவசர கேஸ் ஏதேனும் வந்துள்ளதா என்பதில் தான் அவன் கவனம் இருந்தது..
தேன்மழை💖💖
