ஆருயிர் 8
அன்று காலையில் வழக்கம் போல யாழினியும் சந்துருவும் லசர் பீரியடில் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில அமர்ந்து ஆன்லைன் மூலமாக எடுக்கும் வகுப்புகளுக்கு தேவையான குறிப்புகளையெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
"என்ன சார்.. நாம பாட்டுக்கு எடுத்துட்டு இருக்கோம். முன்னையாவது அப்பப்போ வீடியோ எடுத்து அனுப்ப சொன்னாங்க… இப்ப அதுவும் இல்ல? என்னதான் நடக்குது… ஒரே மர்மமா இருக்குது…" என்று ராகத்தோடு அவள் பாடினாலும் உள்ளே ஒரு கோபம் தான்!!
'இவ்வளவு மெனக்கெட்டு எடுக்கிறோம்.. என்ன நடக்கிறது என்று ஒன்றுமே சொல்ல மாட்டேங்கிறாங்களே?' என்ற உழைப்பவனின் தார்மீக கோபம்!!
சந்துருவோ.. "மிஸ் அமைதியா பேசுங்க!! இந்த ரூம்ல சிசிடிவி இருக்கிறது உங்களுக்கு தெரியும் தானே? நாம ஏதாவது பேசி அவங்க காதுல ஏதாவுது விழந்தா என்ன பண்றது?" என்றதும்…
"சார் சிசிடிவி கேமரா தானே இருக்கு!! வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணவா போறாங்க?" என்றாள் அலட்சியமாக..
"நம்ப முடியாது மேடம்!! எது வேணாலும்… எங்க வேணாலும் இருக்கலாம்!! நாமதான் எச்சரிக்கையோடு இருக்கணும்!! நமக்கு என்ன வேலை கொடுத்தார்களோ அதை மட்டும் நம்ம பார்ப்போம்!! எனக்கு என்னமோ இவங்க சாப்ட்வேர் வேற ஏதோ பெரிய கம்பெனியில் கொடுத்து இருக்கணும்னு நினைக்கிறேன்… ஏற்கனவே வந்தது அவ்வளவு ரெஸ்பான்ஸ் இல்லைன்னு கரஸ்பாண்டெட் சொல்லிட்டு இருந்தாங்க…" என்று அதையும் மெதுவாக ஏதோ குறிப்புகளை காட்டி சந்தேகத்தை கேட்பது போல அவன் செய்வதை பார்த்து இவளும் சற்று வாயை குறைத்துக் கொண்டாள்.
'சந்துரு சொல்வது உண்மைதானே! நாம இங்கே சம்பளத்துக்கு வேலை செய்கிறோம். அதை மட்டும் பார்ப்போம். எதுக்கு வீணா கேள்விகள் கேட்பானேன்? அதனால் தொல்லைகள் வருவானேன்?' என்று யோசித்துக் கொண்டே இருந்தவர்களின் தலையில் சட்டு என்று ஒரு பல்பு எரிந்தது!!
'அன்று அவ்வளவு நெருக்கமாக இவன் வந்து நின்றானே? இந்த அறையில் சிசிடிவி கேமரா இருக்கிறது என்று அப்போ ஞாபகமே இல்லையே… அப்படி என்றால்… அப்படியென்றால்…" என்று நினைக்கவே அவளுக்கு சற்று கை, கால் எல்லாம் உதற தொடங்கியது!!
அன்று ஒன்றும் நடக்கவில்லை தான்!! ஆனாலும் அவ்வளவு நெருக்கம்… அதை வைத்து என்னென்னவோ கற்பனைகளை தட்டி விடலாமே இப்பொழுது உள்ள டெக்னாலஜியில்…! என்று அவளுக்கு படபடப்பு கூடியது.
அவளின் வியர்த்து வழிந்த முகத்தை பார்த்து "ஐயோ மிஸ் என்ன ஆச்சு? ஏன் இப்படி மூஞ்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?" என்றான். அவள் அவனை வார்த்தை வராமல் பார்க்க… "நீங்க வேணா போய் ரெஸ்ட் எடுங்க! நான் பாத்துக்குறேன்!" என்று தண்ணீர் கொடுத்தவாறே கூற… தண்ணீரை குடுத்தவளுக்கும் சற்று மன அமைதி தேவைப்பட..
"நீங்க பாருங்க சார் நான் ஈவினிங் வந்து ஜாயின் பண்றேன்!!" என்று ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு வந்து விட்டாள்.
அங்கே ஒன்றிரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். இவள் இருக்கையில் அமர்ந்தவள் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க.. "என்னை யாழினி… தலைவலி யா? அதுக்கு தான் அதிகமாக வேலை பார்க்க கூடாது!! கொடுக்கிற சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்த்தால் பத்தாது?? நமக்கு தான் எல்லாம் தெரியும்னு தலையால ஆடுனா… திரிஞ்சா.. நம்மள சக்கையா புழிஞ்சிருவாங்க இந்த மேனேஜ்மென்ட்.. அப்புறம் தலைவலி தான் மிஞ்சும்!! அதுவும் பிரைவேட் ஸ்கூல்ல நம்ம கொஞ்சம் பார்த்து தான் இருக்கணும்!!" என்று அவர் அறிவுரைகளை அள்ளிவிட.. இருக்கிற தலைவலியில் சுத்தியல் வைத்து அடித்து வேகப்படுத்துவது போல் இருந்தது அவரது வார்த்தைகள் எல்லாம்!!
"ஏன் டீச்சர் அவங்களே தலைவலின்னு சொல்றாங்க… அவங்க கிட்ட போய் இதெல்லாம் பேசணுமா?" என்றபடி தன் பேக்கில் இருந்த தைலத்தை எடுத்து மெதுவாக இரண்டு பக்கமும் யாழினிக்கு தடவி விட்டாள் ஆர்த்தி.
யாழினியை பேசி டீச்சர் அருகில் இருந்த டீச்சரிடம் உதட்டை மடித்து ஜாடையால் அவர்களை காண்பித்துக்கொண்டார். அவரும் ஆமா.. ஆமா.. என்பது போல தலையாட்டி கொண்டார். 'எத்தனை நாளைக்கு உங்களோட இந்த பிரண்ட்ஷிப்.. நாங்களும் பார்க்கிறோம்?' என்பதன் அர்த்தம் அது!!
"எதுக்கு டீச்சர் இவ்வளவு டென்ஷன் எடுத்துக்குறீங்க? முடிஞ்ச வரைக்கும் பாருங்க!! முடியலனா முடியலன்னு சொல்ல வேண்டியது தானே… உங்க உடம்பு நல்லா இருந்தா தானே உங்களால் நல்ல ஆக்டிவா.. ப்ளஸெண்ட் ஃபுல்லா க்ளாஸ் எடுக்க முடியும்?" என்று மென் குரலில் அவளுக்கு அறிவுரை கூறிக்கொண்டு இரு பக்கம் விரல்களால் சுழல விட்டு அவள் தேய்க்க.. அந்த மென்மையான சுகத்தில் கண்களை மூடி இருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி குறைந்தது போல் இருந்தது.
ஆனால் அடுத்து அவளுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். அதுவும் பத்தாவது அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே "உங்க நெக்ஸ்ட் கிளாஸ் நான் எடுத்துக்கிறேன்!! என்னோடது மதியத்துக்கு மேல் அந்த கிளாசுக்கு வரும். அப்போ நீங்க போய் உங்க கிளாஸ் எடுத்துக்கலாம்" என்றதும் இந்த பரஸ்பர புரிதலில் நன்றி பெருக்கோடு அவளை பார்த்து "தேங்க்ஸ் ஆர்த்தி!!" என்றாள் யாழினி.
"பரவால்ல டீச்சர் இது ஒரு ஜஸ்ட் ஹெல்ப் தானே? இதுல என்ன இருக்கு!! நீங்க பண்ணதை விட குறைவு தான்!" என்றபடி யாழினி வகுப்புக்கு ஆர்த்தி சென்றாள் கம்ப்யூட்டர் கிளாஸ் எடுக்க..
பொதுவாக பத்தாவது பன்னிரண்டாவது படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பாடத்திட்டத்திற்கு ஏற்ப உள்ள வகுப்புகள் மட்டுமே பெரும்பாலும் நடத்தப்படும். ஆனாலும் வாரத்திற்கு ஒன்று இரண்டு முறை இப்படி பொதுவான கணினி பயிற்சி.. விளையாட்டு வகுப்புகள்.. பாட்டு.. நாட்டியம் என்று இருக்கும்.
எப்பொழுதும் பாடத்தை மட்டுமே திணிக்காமல் அவ்வப்போது இப்படி பிள்ளைகளுக்கு பிடித்த முறை கொடுத்தால் மட்டுமே பிள்ளைகள் உயிர்ப்போடு.. துடிப்போடு இருப்பார்கள்!! இல்லை என்றால் வெறும் புத்தகம் மூட்டை தூக்கும் உழைப்பாளிகள் போல தான் போய்விடுவார்கள் சோர்ந்து எதிலும் நாட்டமின்றி…
சரியென்று யாழினி அமர்ந்துவிட்டாலும் அவளுக்கு மனது "க்ளாஸை மிஸ் பண்ணிட்டேன்!" என்று யோசித்தவாறே இருக்க.. அவளுக்கு அதற்கு மேல் இருப்ப கொள்ள முடியவில்லை. எப்பவுமே சோம்பி இராமல் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பவளுக்கு இன்று எப்படி உட்கார சொல்வதும் பிடிக்காமல் இருக்க.. அதே சமயம் பிள்ளைகளிடம் பேசினால் மனம் குழப்பம் தீரும்!! தலைவலியும் போகும் என்று அவளுக்கு உரிய நல்ல ஆசிரியர் தலைதூக்க.. வகுப்பை நோக்கி நடந்தன அவளது கால்கள்!!
அங்கே தெளிவான ஆங்கில உச்சரிப்போடு.. அழகான நேர்த்தியோடு ஆர்த்தி பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய பாடம் தான். ஆனாலும் அதை அவள் நடத்தும் விதம்… பிள்ளைகளை கையாளும் விதம்.. அனைத்திலும் ஒரு நிமிர்வு இருந்தது பல நாள் அனுபவம் போல…
"கரஸ்பாண்ட்டுக்கு கரெக்டா தான் தெரிஞ்சிருக்கு! ஆள் கரெக்டா தான் சூஸ் பண்ணி போட்டு இருக்கார். இல்லன்னா இந்த பொண்ண போய் டென்த்துக்கும் 12க்கும் கம்ப்யூட்டர் எடுக்க சொல்வாரா?" என்று ஆர்த்தி பற்றி நினைத்தவாறு திரும்பவும் ஓய்வுறைக்கு சென்று விட்டாள் யாழினி.
ஒரு வாரம் சென்ற நிலையில்… அன்று அதிரதன் வந்திருந்தவன், இவர்கள் இருவருக்கும் கொடுத்த வேலையெல்லாம் முடித்து விட்டார்களா என்று பார்த்து அவற்றை அவ்வப்போது அவனின் ஸ்பெஷல் டீமுக்கு அனுப்பி வைத்தான். கூடவே இருவர்களிடமும் சில கேள்விகளின் கேட்டவன் சந்துருவை அனுப்பிவிட்டு யாழினியை பார்த்தவன் "கம் டூமை கேபின்!" என்று நகர்ந்து விட்டான்.
'இவன் எதுக்கு இப்ப நம்மள வர சொல்றான்?' என்று யோசனையோடு அவன் பின்னே சென்றாள்.
தன்னுடைய அலுவலக அறையில் தன் இருக்கையில் அமர்த்தலாக அமர்ந்தவன், எதிரில் அவளுக்கு இருக்கை காட்டிவிட்டு மிக தீவிரமாக ஒரு கோப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளோ "டைம் ஆகிட்டே அர்வி வந்திருப்பானே!!" என்று மணியையும் அவனையும் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் கோப்பையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் அழைப்பு மணி ஓசையில் "கம் இன்!" என்றான்.
கொண்டு வந்திருந்த இரண்டு ஜூசை பியூன் வைத்துவிட்டு நிற்க.. செல் என்பது போல அவனுக்கு செய்கை காட்டி விட்டு யாழினியை பார்த்தவன் "குடி யாழ்.. ரொம்ப டயர்டா தெரியுது உன் ஃபேஸ்!!" என்றான் கன அக்கறையாக…
மாலை நெருங்க நெருங்கவே அவளுக்கு வயிற்றில் மணியடித்து விட்டது!!
மாலை வேளையில் பள்ளியில் மணி அடிக்கிறார்களோ இல்லையோ வயிற்றில் அவளுக்கு கண்டிப்பாக மணி அடித்து விடும். 'யானை பசிக்கு சோள பொறி போல இந்த ஜூஸ் எல்லாம் எனக்கு எம்மாத்திரம் டா? வீட்டுக்கு போய் அம்மா கையால சாப்பிடணும்!! சீக்கிரம் விடுடா!' என்று 'சந்தைக்கு போனும்.. ஆத்தா வரையும்.. காசு கொடு!' என்று சப்பானி ரேஞ்சில் இருந்தாள் நம் யாழினி!!
பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம்.. காதல் மட்டும் நிற்க வா செய்யும்? அதுவும் இன்னும் அவன் மீது ஈர்ப்பே இவளுக்கு வரவில்லை. இதில் எங்கிருந்து காதல் வந்து பசியை துரத்த.. ஜோகத்த!!
பெரும் அரக்கனாய் நின்ற அந்த மாலை நேர சிறும் பசி.. அவள் பின்புறமாய் நின்று கொண்டு அவளை ஆட்டி விட்டுக் கொண்டிருந்தது.
இவனும் அவளது நிலை புரியாமல்.. பசி அறியாமல்.. முகத்தில் சோர்வை மட்டும் பார்த்து மேல் வர்க்கத்தின் போல இவள் கொஞ்சமாய் சாப்பிடுவாள் என்று நினைத்து ஜூசை ஆர்டர் செய்து கொடுத்தான் நல் காதலனாக நடக்கும் பொருட்டு…
கண்ணாடி குவளையில் உள்ள மூடியை திறந்து அவனே அவளுக்கு கொடுத்தான். அவள் அழகை ரசித்தப்படி!!
அவளது நீள மூக்கும்..
சிவந்த மெல்லிய உதடுகளும்..
கனிந்த கன்னங்களும்… அலைபாயும் கண்களும்…
அவனின் காதல் உணர்ச்சியைக் கிளர்ந்து எழ வைத்தது. இறுக்கிக் கட்டிய புடவைக்குள் அடக்கமாக ஒளிந்து கொண்டிருக்கும் அவளது அழகியலை அள்ளி கொஞ்சி களித்திட வேண்டுமாய் ஆசை உந்தியது!!
அவள் கழுத்தில் தொங்கும் மெல்லிய செயின் கழுத்தில் பளீரிட.. அங்கே தெரிந்த அவளின் வெண் சங்கு கழுத்து நரம்புகள் நன்றாக தெரிந்தன!! அவனை பித்தாக்கின!!
அவள் ஜூஸ் எடுக்காமல் இருக்க..
"எடுத்துக்க யாழ்.. !!” என்று நகர்த்தி வைத்தான்.
ஐஸ் போடாத ஜூஸை எடுத்தவள், அதை கொஞ்சம் கொஞ்சமாக சிப்பினாள்.!! எதிரில் உட்கார்ந்து நேருக்கு நேராக பார்த்து.. நன்றாக சைட் அடித்துக் கொண்டிருந்தான் அதிரதன்!!
அவனின் குறுகுறு பார்வையில்.. அவளின் இதயம் படபடக்க.. மூச்சு முட்டியது அவளுக்கு.
"அப்பறம்.." என்றான்.
"சொல்லுங்க..?" என்றாள்.
"டுடே.. யூ லுக் சோ ப்யூட்டிஃபுல் யாழ்" என்றான் கரகர குரலில்…
"ம்ம்.." சொல்லியதும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தலை குனிந்து கொண்டாள், லேசாக முகம் கூட சிவந்தது. அவள் வெட்கப்படுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
"ரியலி யாழ்… இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க.. அதுவும் லேசா கலைந்த தலை.. ஓய்ந்த தோற்றம்.. குடும்ப பங்கான உன் தோற்றம் அள்ளுது போ!" என்றான் கண்களால் அவளை தின்றபடி!!
"ஹையோ... போதும்!! நிறுத்துடா!!" என்று கத்த வேண்டும் போல இருந்தது யாழினிக்கு!! அவனின் பார்வை நேரம் செல்ல செல்ல அவளுக்கு ஒரு அசௌகரியத்தை கொடுத்தது.
”எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்குனு சொல்லி அத்தனை நாள் ஆகுது. இன்னும் உன்கிட்ட இருந்து ஒரு ரெஸ்பான்ஸ் கூட எனக்கு இல்லை!!" என்று ஓய்ந்த குரலில் கூறினான். அப்போதும் அவளிடம் பதில் இல்லை படப்படடப்போடு காணப்பட்டாள் பெண்.
"நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு தெரியும் தானே?" என்று சத்தமாக கேட்க.. அதில் அவளது மெல்லிய உடல் தூக்கி போட..
"தெரியும்.. !!” என்றாள் மெல்லிய குரலில்.
"அப்போ ஏதாவது ஒன்னு சொல்லலாம் தானே? எஸ்னோ இல்லை உங்களை பிடித்து இருக்குனோ இல்ல எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னோ…" என்று அவனுக்கு சாதகமாகவே கேட்டபடி இருக்கையில் பின்னால் சாய்ந்து மெல்ல ஆடியவாறு அவன் கேட்க…
மெல்ல நிமிர்ந்து அவனை ஆழ்ந்து பார்த்தாள் பாவை!!
"ம்ம்.. நீ பாக்குற பார்வை… எப்படி சொல்ல அப்படியே இங்கே என்னமோ பண்ணுது?" என்று இதயத்தை சுட்டி காட்டினான்.
"அப்போ... என் பார்வை… என்ன சொல்லுதுன்னு உங்களுக்கு புரியுதா?" என்றாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..
"புரியல… சத்தியமா புரியல!! உன் கண்ணை பார்த்து அது சொல்லும் விஷயத்தை கேட்கும் அளவு நான் தெளிவாக இல்லை!! கண்ணை பார்த்தாலே மயங்கி விடுகிறேனே!!" என்றான் லேசாக சிரித்துக் கொண்டு…
அவளின் கடுமையை விட இந்த சிரிப்பு ரொம்ப பயத்தை கொடுத்தது யாழினிக்கு!! இதெல்லாம் சரியாக வருமா என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை. அரவிந்திடம் காதலை பற்றி இவள் அளந்து கொட்டினாலும்… அன்னை தந்தையின் மீறி இவள் எதுவும் செய்யப் போவதில்லை. 'அதனால் இவனுக்கு ஹோப் கொடுக்கக் கூடாது!' என்று நினைத்து பேச்சை தவிர்த்து ஜூஸில் கவனமானாள்.
"ம்ம்..." பேச்சை நிறுத்தி ஜூஸை பருகினாள். அவனும் பருகினான்.
"யாழ்…!!"
"சொல்லுங்க..?"
"உ.. உன்… கண்கள்.."
"ம்ம்.. என் கண்கள்..?"
"கொல்லுது என்னை.."
கூச்சத்தில் நெளிந்தாள் பெண். 'இவன் போகிற போக்கு சுத்தமா சரியில்லையே!! என்னை இரவு சாப்பாட்டுக்காவது அனுப்புவானான்னு தெரியலையே? இல்லை இப்படி பேசிப்பேசியே கொல்லுவானா தெரியலையே! இவன் கொல்றானோ இல்லையோ பசி என்ன கொன்னுடும் போல!' என்று இடது கையை மெதுவாக வயிற்றோடு பிடித்தாள்! மீண்டும் பசி அரக்கன் இவளை ஆட்கொண்டான்.
"நான்.. நான் ஒண்ணு சொல்லணும்.." உற்சாகத்துடன் அவன்!!
"சொல்லுங்க? " அலுப்புடன் அவள்!! 'சொல்லும் சொல்லி தொலையும்!' என்ற நிலையில்….
"ஐ... ஐ..."
"இ.. இல்ல.. ஐ.. யூ..."
"ம்ப்ச்.. சொல்லுங்க.. ?"
"ஐ லவ் யூ.. !!” பட்டென சொல்லி விட்டு அவளையே பார்த்தான்.
அவள் படபடத்தாள். ஆனால் பேசவில்லை. மார்புகள் எழுந்து அடங்க பெருமூச்சு விட்டாள்.
படபடப்பில் அவன் காலை எடுத்து டேபிளுக்கடியில் வைத்தான். அவன் கால் அவள் காலை உரசியது. சட்டென விலக்கிக் கொண்டாள்.
அதே நேரம் அரவிந்திடமிருந்து அவளுக்கு கால் வந்தது…
இருவருக்கும்
இடையில் இருந்த ஃபோனை யாழினி வெறித்து பார்க்க.. சட்டென்று அதை கைப்பற்றினான் அதிரதன்!! அவள் விக்கித்து பார்த்தாள் அவனை பயத்தோடு!!