பல சண்டை சச்சரவு, எத்தனையோ பேரின் வஞ்சகம், பிரிவின் ஏக்கம் அனைத்திற்கும் ஒரு தீர்வாக இருவரும் கொண்ட மையலுக்கு இனிதே திருமணம் முடிந்தது.
சில காதல் தோல்வியில் முடியலாம்;
சிலரது காதல் ஜெயித்திடலாம்..
அனைத்தும் விதியே!
அது போல் பிரிவை சந்தித்த இவர்கள் காதல் திருமணத்தில் கை கூடியது. மணமகன் பெண்ணவள் வகிட்டில் திலகமிடும் போது கூட அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்து வைத்தான்.
அப்பார்வையிலே அவனது கோவத்தை நன்கு அறிந்து கொண்டாள். எப்படியும் தனக்கு தகுந்த வெகுமதி உள்ளது என்பதை உணர்ந்தவள், அவனை ஏதேர்ச்சியாக கூட காணவில்லை.
சிறிது நேரத்திற்கு பின் எல்லோரும் வீடு திரும்பியினர். ஆரத்தி எடுத்து வரவேற்ற மணமக்களுக்கு பால் பழம் ஊட்டுதல் நடந்தது. அனைத்து சம்பிரதாயங்களையும் கடமையே என ஏற்றுக் கொண்டான் பிரதீஷ்.
மகனுக்கு திருமணம் முடிந்த சந்தோஷத்தில் பம்பரமாக வேலை செய்தார் கல்யாணி. இதையெல்லாம் காண கணவருக்கு தான் அத்தனை கடுப்பு.
வந்த விருந்தினர்களை கவனிக்காமல் இருக்க முடியுமா? அது போல் அவர் விழுந்து விழுந்து உபசரித்தார்.
"சித்தி.. இது தாக்கு பிடிக்குமா?" என்ற ருத்ரா வாய் திராட்சை பழத்தை மென்றப்படி இருவரின் விலகளை வைத்து கணக்கிட..
"உன் அண்ணன் கூட மனுஷி இருப்பாளா? சிரிச்சு பேசணும். சிடுசிடுன்னு விழுந்தா எவ தான் இருப்பா? அதான் அவ வேணாம்ன்னு சொல்லிட்டா.." என்றார் பேரீச்சம்பழத்தை தின்றப்படி..
"இவ ஏதோ விளம்பரத்துல நடிக்கிறவளாம். சார் இதுக்கு என்ன ரியாக்ஷன் காட்ட போறாரோ?"
"ஏற்கனவே உன் அண்ணனுக்கு பேச தெரியாது. இதுல இது வேறயா?" என்றவர் ஏளனமாக நகைப்பை உதிர்த்து கடந்திருந்தார்.
எதிர்பாராத திருமணம் மாப்பிளை வீட்டில் ஒருவித நிறைவை தந்திருந்தாலும் வீடு திரும்பிய பெண் வீட்டினருக்கு அக்கம் பக்கத்தில் தலை காட்டவும், குசலம் விசாரித்ததில் மனம் கனத்தது. அக்காவிற்கு முன் தங்கைக்கு திருமணம் நடந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பது தெரியும்.
பிருந்தா மன நிலையை கருத்தில் கொண்டு யாரும் அவளிடம் பெரிய விவாதம் மேற்கொள்ளவில்லை.
ஆனால், அன்னைக்கு தான் அவளின் செயலில் அத்தனை கோவம். பொறுமையிழந்தவர் அவள் என்ன மனநிலையில் இருப்பாள் என கூட யோசியாது, அறைக்கதவை ஆவேசமாக தட்டினார்.
அவளோ அழுது சிவந்த கண்களோடு அறைக் கதவை திறக்க, "இப்போ உனக்கு நிம்மதியா டி? என்ன தான் நினைச்சுட்டுருக்க? யாரு வீட்டுல தான் பிரச்சனை இல்லாம இருக்கு?
ஏன் உன் அப்பா என்னை பேசலையா? இல்லை எங்க ரெண்டு பேருக்குள்ள இதுநாள் வரை எந்த பிரச்சனையும் வராம இருந்துருக்கா?
என்னமோ பெரிய வியாக்கினம் பேசுற? வாழ்க்கை இப்படி தான் இருக்கும்ன்னு நீ நிர்ணயிக்க கூடாது. அது கடவுளா தீர்மானிக்கிறது." என்றவர் உச்சபட்ச கோவத்தில் அவளை அறைந்து விட்டார்.
அவளோ பதிலுக்கு சீற்றமாக, "மாஆஆ..!" என்று அலற, கௌதமன் பதறியடித்து வந்தார்.
"என்ன நொம்மா? உனக்கு பின்னாடி பிறந்தவ தானே அவ? நாங்க சொன்ன ஒரு காரணத்துக்கு, தலையை ஆட்டிட்டு சரின்னு சொல்லிட்டா. நீ என்னன்னா இப்போ தான் புதுசா அகராதி பேசுற.." என்றவர் மேலும் அவளை அடிக்க பாய..
நடுவில் வந்த கௌதமன் அவரை தடுத்து நிறுத்த, "நீங்க பண்ணுனது ஒன்னும் நல்ல காரியமில்லை. அவ வாழ்க்கையை எவனோ ஒருத்தன் கையில சிக்க வச்சிருக்கீங்க. நிச்சயம் பண்ணுன எனக்கே அவனோட பேச்சு வார்த்தை, குணம் எதுவும் பிடிக்கல.
எதுவும் தெரியாதவ அவனை கல்யாணம் பண்ணி மண்ணுக்குள்ள தான் போகணும். அவன் எப்படி பேசுறான் தெரியுமா?
அதான் அவங்க வீட்டுல அவனை மெண்டல் லிஸ்ட்ல வச்சிருக்காங்க. அது தெரியாம பெருமை படாதீங்க. நானும் போனா போகுதுன்னு பொறுத்து போனா ஓவர் ரூல்ஸ்.
அதெல்லாம் நாணயமானவன் பேசனும். அயோக்கிய நாய் பேசக் கூடாது.." என அவள் பதிலுக்கு பொங்க, கௌதமன் சப்பென அறைந்து விட்டார்.
இதுநாள் வரை ராசிகாவை தான் துச்சமாக பேசி, பிருந்தாவிற்கு மலர் தூவாது மரியாதை அளித்தவரே அவளின் பேச்சில் சினம் கொண்டு மேலும் அடிக்க பாய்ந்ததில் ஜெயமோகன் தான் வந்து விலக்கி விட்டார்.
"என்ன மச்சான் பண்ணுறீங்க? வயசுப்பிள்ளையை போய் கை நீட்டி அடிச்சுக்கிட்டு.. வாங்க முதல.." என்றவர் வம்படியாக அவரை விலக்கி இழுத்து செல்ல, ராணி அவளை அள்ளி தூற்றிக் கொண்டு தான் இருந்தார்.
உண்மையில் அவள் பேசியதற்கு, அவனும் பேசினான். யாரோ ஒருவளின் பேச்சைக் கேட்டு அவள் செய்த செயல், அவள் தலையில் மண்ணை அள்ளி போட்டு காதலுக்கு பச்சைக் கொடி காட்ட வைத்தது.
இனி அவள் காட்டி என்ன ஆகப்போகிறது? முதலிரவை ஆராதிக்க வேண்டியவன், உர்ரென இருந்தான். அவனது கோவம் அறிந்தவள், அலங்காரம் செய்து கொண்டிருந்த ருத்ராவிடம் கூட ம்ம் மட்டும் தான் கொட்டி வைத்தாள்.
நிகழ்த்த வேண்டியதை தவிர மற்ற எல்லாம் நிகழ்ந்தேறும் என்பது திண்ணம்.
"என் அண்ணா கொஞ்சம் மூடி டைப் தான். நீங்க தான் அட்ஜெஸ்ட் பண்ணி போயாகணும்." என கண்ணை சிமிட்டி கூறியவள், அவள் தலையில் மல்லிகைச்சரம் சூடி அழகு பார்த்தாள் கண்ணாடியில்.
"சோ கியூட்.. ஆட்ல உங்களை பாத்துருக்கேன்.. அந்த ஃபேர்னஸ் கிரீம் ஆட் செம.." என்றவள், மல்லிகை பூ சரத்தில் ஒன்றை மட்டும் இடது தோளில் முன்னே ஒதுக்கி விட்டு மீண்டும் கியூட் என்றாள்.
அவளோ காளி நீலி சூலி என அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள். எப்படியும் வண்ண வண்ணமாக பேசுவான். இல்லை அறைந்து கன்னத்தை காயமாக்கி விடுவான் என அஞ்சி நடுங்கியவள் பதற்றம் கிஞ்சிற்றும் வெளியே தெரியவில்லை.
"நல்லா மனசு விட்டு பேசுங்க. விலகி விலகி உட்காராதீங்க. முதல நிறைய பேசிட்டு.. அப்பறம்.." என்றவள் அப்பறத்திற்கு மட்டும் அழுத்தம் தந்து இழுவையாக கண்களை சிமிட்ட, அதில் நாயகிக்கு தான் நெஞ்சடைத்தது.
தாலி கட்டிய நேரத்தில் இருந்து, எல்லோரோடும் இருந்ததால் எப்படியோ இரவு வரை சமாளித்து விட்டாள். இனி இவ்விரவை சமாளிக்க வேண்டியது அவளது சாமர்த்தியமே.
அதை நினைத்தவள் முகம் பயத்தில் வெளிறி, எங்கோ வெறிக்க..
"ராசிகா என்ன சைலன்ட் ஆகிட்டிங்க? மார்னிங் நான் பாக்கும் போது, ரெண்டு பேரும் கலகலன்னு பேசி சிரிக்கணும். ஒரே சோபால அங்கையும், இங்கையும் உட்காரக் கூடாது. முடிஞ்ச வரை நிறைய மனசு விட்டு பேசுங்க. அப்போ தான் இப்போவே அண்டர்ஸ்டாண்டிங் வரும்!" என்றவள் அவளை கை பிடித்து எழ வைக்க, அவளுக்கு தான் அவனை காண வேணும் என்பதில் ஜீவனே இல்லை.
"என்ன சதாசிவா எல்லாம் இப்படி தலைகீழா மாறிடுச்சு. அவன் விரும்புனவ இந்த வீட்டுல விளக்கேத்துவான்னு நினைக்கல. ப்ச்...பாவம் பிருந்தா பொண்ணு மனசு என்ன பாடு படும்?" என சண்முகம் அவர்கள் ஏற்ற இறக்கமாக மூச்சை விட்டு சங்கடமான மன நிலையில் பேச, ஏனோ சதாசிவத்திற்கு இப்போது ராசிகாவை வஞ்சிக்க மனம் வரவில்லை.
காலை திருமணம் முடிந்ததில் இருந்து அவளை காண காண அப்படியொரு கடுப்பு தான் அவருக்கே. மதியம் மேல் அவளின் பணிவும், கனிவு நிறைந்த பேச்சும் மனதை இளக வைத்தது.
மதிய விருந்து தடபுடலாக வீட்டில நடக்க, தரையில் அமர்ந்து உண்டவர்கள் எல்லோரும் அவரவர் பாட்டுக்கு எழுந்து கை கழுவ சென்று விட்டனர்.
சதாசிவம் அவர்களோ வெகு நாட்களாக தண்டுவட பிரச்சனையால் அவதிப்பட்டு, மாத்திரை மருந்தில் தான் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
கீழே அமர்ந்தால் அவரை யாராவது தூக்கி விட வேண்டும், இல்லையேல் பிடிமானத்திற்கு எதையாவது பிடித்து எழுந்து கொள்ள வேண்டும்.
உண்டவரை அவரவர் இருந்த பரபரப்பில் யாரும் கவனிக்கவில்லை. கட்டிய மனைவியை அழைக்க, அவருக்கோ காதில் விழவில்லை. உண்டு கொண்டிருந்த ராசிகா அவர் சிரமப்பட்டு எழுந்து கொள்வதை கண்டு, கைத்தாங்களாக பிடித்துக் கொண்டாள்.
இல்லையெனில் தடுமாறி உண்ட இலையில் தான் கால் வைத்திருப்பார். அதற்கேற்ப காலும் மரமரத்து இருக்க, ஒரு எட்டு கூட அவரால் எடுத்து வைக்க முடியவில்லை. அவளே மெல்ல அழைத்து சென்று, நாற்காலியில் அமர வைத்து விட்டு கை கழுவ கிண்ணமும் சொம்பு நீரும் கொண்டு வந்தாள்.
அதில் தான் அவருக்கு முதன் முதலில் அவள் மீது நல்ல அபிப்ராயம் வந்தது.
"வேணாம் மா.. நான் எழுந்து கழுவிக்கிறேன்.."
"மாமா.. கழுவுங்க.. நான் கொண்டு போய் கீழ ஊத்திக்கிறேன்.."
"இருக்கட்டும் மா.." என்றவர் மீண்டும் தடுமாற முயல, வம்படியாக அவரது கையில் நீரை ஊற்ற அவர் கழுவியப்படி ராசிகாவை தான் இமை பிரிக்காது பார்த்தார்.
தன் மகள், மகன்கள் கூட இதுவரை அக்கறையோடு எதுவும் செய்ததில்லையே என நெகிழ்ந்தவர், சரியாக உண்ணாது பாதியிலே கை கழுவி சென்ற மருமகளை தான் சங்கடமாக பார்த்தார்.
'இந்த பொண்ணுக்கு உண்மை தெரிஞ்சா நம்மள கேவலமா நினைக்குமே.' என நொந்தவர் அவளிடம் முகம் குடுத்துக் கூட பேச யோசிக்க, "ஜூஸ் சாப்புடுறீங்களா மாமா?" என்றாள் மிக அக்கறையாக.
"ஆங்.. வேணாம்.. மா.."
"நான் போட்டு எடுத்துட்டு வரேன் மாமா.." என்றவள் சில நிமிடங்களில் சாத்துக்குடி ஜூசோடு வந்து வலுக்கட்டாயமாக அவர் கையில் குடுத்து சென்றாள் அவர் மறுப்பு தெரிவித்த போதும்.
மனைவிக்கு பின் பிடிக்காத ஒரு பெண்ணிடம் இருந்து வந்த அக்கறை அவருக்கு மனமாற்றத்தை தர, தந்தை பேசியதற்கு பதிலே கூறாது எங்கோ வெறித்திருந்தார்.
"சதாசிவா!"
"ம்ம்ம்.. அப்பாஆஆ.. சொல்லுங்க.."
"என்ன நான் பேசிட்டுருக்கேன்.. நீ எங்கயோ பாத்துட்டுருக்க?"
"இல்லைப்பா.. வேணாம்ன்னு சொன்ன பொண்ணை பத்தி நாம ஏன் யோசிக்கணும்? அவன் விதி இதான்னு இருந்தா யாரு மாத்த முடியும்?"
மகனின் பதிலில் வியப்படைந்தார். எப்படி இம்மாற்றம் திடீரென வந்தது என அவர் யோசிக்க..
அதற்குள் சதாசிவமே, "அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு இதான் அவன் வாழ்க்கை. நாம இனி இடைஞ்சல் பண்ணுறது ரொம்ப தப்பு. ஏற்கனவே எல்லாம் பண்ணுனது நாம தான்னு தெரியும்.
இனி ஏதாவது பண்ணுனா வீட்டுல நம்ம மரியாதை கெட்டுரும். பேசாம படுங்க பா. எதுனாலும், அவன் ஃபேஸ் பண்ணிப்பான்." என்றவர் பிடி கொடுக்காது பேசி கடந்திருக்க, சண்முகம் அவர்களுக்கும் மகனது கூற்று சரியென பட்டது.
பிரதீஷ் அண்ணி கார்த்திகாவும், ருத்ராவும் அலங்காரம் முடித்து ராசிகாவை அறை நோக்கி அழைத்து சென்றனர். இருவரின் கேலி கிண்டலை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. ஆனாலும், வேறு வலியற்று வெண் முத்து பற்கள் தெரிய சிரித்து வைத்தாள்.
"சீக்கிரம் சிங்க குட்டி வரட்டும். அதுவும் என் கொழுந்தன் போல.." என கார்த்திகா கூற, ஹை-பை அடித்து ஆம் என்றாள் ருத்ரா.
'இவளுங்க வேற என் நிலைமை தெரியாம சிங்க குட்டி மன்னாங்கட்டின்னு சொல்லுறாளுங்க. அவன் என்ன நிலையில இருக்கானு தெரியல..' என்றவள் கையை பிசைந்தப்படி நடக்க, "ரொம்ப டென்சன் ஆக வேணாம். ரிலாக்ஸ் ராசிகா!" என்றாள் ருத்ரா.
அறைக்கு வெளியே அவளை நிற்க வைத்து தம்ப்ஸ் அப் காண்பித்து இருவரும் நகன்று விட்டனர்.
உள்ளே பால் சொம்போடு நுழைந்தவள், கதவை தாழிட்டு திரும்பி பார்க்க விசாலமான மரக்கட்டில் அவனில்லாமல் வரவேற்றது.
அறையை நிரப்பியிருந்த ஊதுவத்தி வாசம், பழங்கள் நிறைந்த தட்டு, மலர்களால் அலங்கரிக்கப்படிருந்த மெத்தை என ஒவ்வொன்றையும் பார்த்தவள் விழிகள் சுவற்றில் மாட்டியிருந்த ஆளுயர கண்ணாடியில் அவளை கண்டாள்.
ரோஸ் நிற காஞ்சிபுரம் பட்டில் புதுபெண்ணாக ஜொலித்தவளை ரசிக்க வேண்டியவன் அவ்விடம் இல்லாமல் போய் விட்டான்.
'எங்க போயிருப்பான்.. காணாமே.. ஒருவேளை ஃபர்ஸ்ட் நைட் வேணாம்ன்னு ஓடிட்டானோ? இருக்காதே.. எப்படியும் என்னை தாளிக்காம அவனுக்கு தூக்கம் வராதே..' என புலம்பியவள் குளியலறை முதற்கொண்டு அவனை காண எங்குமில்லை அவன்.
எங்கு சென்றிருப்பான் என்னும் யோசனையோடு கட்டிலில் அமர்ந்தவள், அவனுக்கு போன் செய்ய போனை எடுக்கும் போது அறைக்கதவு தட்டப்பட்டது. யாராக இருக்கும் என யோசனையோடு கதவை திறக்க, கணவன் நின்றிருந்ததில் துணுக்குற்றாள்.
அவள் கதவை திறந்த நொடி, அவளை அழுத்தமாக முறைத்து விட்டு உள்ளே நுழைந்தவனிடம், "எங்க போயிட்டு வரீங்க.." என கேட்டு தான் வைத்தாள்.
அவன் பதிலே கூறாது செய்த செயலே, அவனது மனநிலைய இடித்துரைத்தது.
மெத்தையின் விரிப்பை மலர் குவியலோடு சேர்த்து தூக்கி ஒரு ஓரம் வீசியதில், பேயறைந்தாற் போல் வாய் பிளந்து நின்று விட்டாள் ஆயிழை.
"பிரதீஷ்!"
என நடுநடுங்கி போய் அழைத்தவளை, ஒற்றை புருவம் உயர்த்தி தீயாக பார்த்தான். அதிலே அவள் திடுக்கிட்டு நின்று விட்டாள்.
சில மணி நேரங்கள் அவனையே அவதானித்து இருந்தாள். அவன் ஒப்புக்கு கூட அவள் புறம் திரும்பவில்லை. ஏதேனும் பேசிவிட்டால் கூட தீர்வு கிடைக்கும். மனம் பாரம் குறையும் என நினைத்தவள், "பிரதீஷ்!" என அழைத்தாள்.
மொபைலில் மூழ்கி இருந்தவன் சன்னமாக கூட அவள் பக்கம் திரும்பவில்லை.
"ஸாரி பிரதீஷ்! எல்லாம் என்னால தான்.." என்றவள் விசும்பிட, கணவனாகிய காதலன் கண்ணீரை துடைப்பான் என எதிர்பார்த்தவளுக்கு, அவன் புறமுதுகு காட்டி படுத்துறங்கியது தான் செய்த கேவலமான செயலை எண்ணி கேவல் உண்டானது.
பட்டு புடவை கசங்க வேண்டிய நேரத்தில், பாவையவள் கொட்ட கொட்ட முழித்து அழுது கொண்டிருந்தாள். ஆனால், பார்வை முழுவதும் அவன் மீதே பதிந்திருந்தது.
சில மணி நேரங்களுக்கு பின் எழுந்தவன், அவள் தன்னையே பார்த்து அழுது கொண்டிருப்பதை கண்டு காணாமல் எழுந்து லக்கேஜ் பேக்கை எடுத்தான்.
அதில் அவனது துணிகளை அள்ளி வைத்தவனை கண்டதும், ஊருக்கு கிளம்ப போகிறான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு மேலும் அழுகையே வந்தது.
"இப்போ எதுக்கு.. பேக் பண்ணுறீங்க?"
"........"
"நான் உங்க கிட்ட.. தான் பேசுறேன் பிரதீஷ்.."
"........."
"நான் பண்ணுனது தப்பு தான். அதுக்குன்னு என்னை திட்டுங்க.. இப்படி பேசாம இருக்காதீங்க ப்ளீஸ் பிரதீஷ்.."
"..........."
காதில் வாங்கியும் வாங்காமலும், குளியலறைக்குள் புகுந்தவன் உடை மாற்றி வந்திருந்ததில் அதிர்ந்து எழுந்தாள்.
வந்தவன் கடுப்பில் கட்டிலை எட்டி மிதித்து, தலையணையை அவள் முகம் நோக்கி விசிறியடித்து, மெத்தையை கீழே தள்ளி விட்டான்.
அதன் பின் பிரதீஷ் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப, கண்ணீர் மல்க கை விரித்து நின்று வழி மறித்தாள்.
"பிரதீஷ்.. என்கிட்டே பேசுங்க.. எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.. ஏன் இப்படி பண்ணுறீங்க? உங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு, நான் தான் ஒவ்வொரு நாளும் செத்துட்டுருந்தேன்.
இப்போ இந்த கல்யாணம் நிக்கவும் நான் எவ்வளவு சந்தோஷ பட்டேன்னு தெரியுமா? அதுவும் நமக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் ஆகும்ன்னு நான் நினைச்சு பாக்கவே இல்லை..
என்மேல கோவம் இருந்தா, கோவம் குறையுற வரை அடிங்க.. என்னை விட்டு போகாதீங்க ப்ளீஸ்.." என்றவள் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழ, அவனோ எவ்வித உணர்ச்சியற்று நின்றிருந்தான்.
"பிரதீஷ்! பேசுங்க.. ப்ளீஸ்.."
அவன் முகம் காண, அவனோ முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே செல்லவே எத்தனித்தான்.
"இப்போ போகாதீங்க. விடியவும் எங்க வேணாலும் போங்க!"
என்றவள் மீண்டும் அவனை வழி மறிக்க, தன்னை எவன் கேட்பான் இனி என்பது போல் கிளம்பி விட்டான்.
தேன்மழை💖
