46
இன்று..
உள்ளே கால் எடுத்து வைத்தவன் திரும்பி பார்க்க, நின்ற இடத்திலேயே நின்று இருந்தாள் வதனி.
அர்த்த ராத்திரியில் கலைந்து ஓவியமாய் அவள் நிமிர்ந்த கோலம் அவனை வசீகரிக்கவே செய்தது.
அவன் மனைவி..! ஆம் காதல் கொண்டு மணந்த அவன் மனைவி..! அவளால் மட்டுமே கிளறி விடப்படும் அந்த மோகமும் தாபமும் காமமும் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன..! ஆனால்… நெருங்கினால்…?
ஆனால் இவ்வளவுக்கு பிறகும் எப்படி அவளிடம் நெருங்குவது? அத்தனை சமாதானம் சொல்லியே அவன் வந்திருக்க.. பின் எங்கணம் அவளிடம் நெருங்கி தன் மனம் சொல்ல? அவளிடம் உரிமை எடுக்க??
ஆனாலும்.. ஆண் மனது அல்லவா? சில விஷயங்களின் தாக்கங்களை அவர்களது மனம் பெண்களை போல எடுத்துக் கொள்ளாது. அவர்கள் செய்த தவற்றின் வீரியத்தை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
“ஆமா.. தப்பு செஞ்சிட்டேன்.! மன்னிச்சிரு..!” என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்கள். மனைவி மன்னித்து விட்டால்..
“வா அடுத்து நான் எப்பொழுதும் போல நார்மலான வாழ்க்கை வாழலாம்” என்று அழைப்பான். அவனால்.. ஆணால் அது முடியும்..!
ஆனால் பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் அவற்றை ஏற்காது. அவள் அந்த ரணத்தை கணத்தை கடந்து வந்திருப்பாளே ஒழிய.. அதனை மறந்து இருக்க மாட்டாள். பின் எப்படி மனமொத்து வாழ்வது?
”மேகா?”
”ம்ம்?”
”எதுவுமே பேசல.. ?”
”என்ன பேசணும்? அதுவும் உங்க கிட்ட பேச ஒன்னும் இல்ல..!”
”சாரி..! எத்தனை மன்னிப்பு கேட்டாலும் நான் செஞ்சது தப்பு தான். அது இல்லன்னு ஆகாது. ஆனா..அதையே எவ்வளவு நாள் பிடிச்சிட்டு இருக்க போறோம்? விட்டுடலாமே?? அடுத்தடுத்து வாழ்க்கையை மூவ் பண்ணலாமே?” தணிந்தான்.
வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்க நிலையில நான் இருந்து என் நிலையில நீங்க இருந்தா?” என்று அவள் கேட்க, பதில் கூற முடியவில்லை அவனால்..!!
“அதுவும் அந்த கணத்துல நீங்க என் கூட ஒண்ணா இருக்கும்போது நான் வேற ஒரு ஆம்பள பேரை சொல்லி இருந்தா?? அவன நினைச்சுகிட்டு உங்களோட நான் குடும்பம் நடத்தி இருந்தா?? உங்களோட ஒவ்வொரு அசைவுக்கும் நான் அவன் பேரை சொல்லி இருந்தா..?? உங்களோட ஒவ்வொரு முத்தத்துக்கும் உருகி குழைந்த நான் அவன் பேரை முணுமுணுத்தால்..?? உச்சக்கட்ட உணர்ச்சியில் உங்கள கட்டிபிடிச்சு கொஞ்சும் போது அவன் பேரை சொல்லி இருந்தா…??”
“நிறுத்து டி..!” என்று கத்தி இருந்தான் நிரஞ்சன்.
வதனி சொன்னதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் அவள் சொல்லிய ‘அவன்’ என்று வார்த்தையே ஒரு கற்பனை தான்.
‘கற்பனையே இத்தனை தாக்கத்தை வலியை நமக்கு கொடுக்கிறது என்றால்.. நிஜம் அவளுக்கு எத்தனை வைத்திருக்கும்?’ என்று புரிந்தவன் கண்களை மூடி அந்த வலியை உணர்ந்தான்.
அவன் உணரும் வலியை அவனது முகபாவணையில் உணர்ந்த வதனி உணர்ச்சி துடைத்த முகத்தோடு தான் இருந்தாள்.
“படுக்கலாம் வாங்க.. ” என்று அவள் அழைக்க..
”நீ.. நீ.. போய் படு மேகா.. ” என்றான் கசங்கிய குரலில்..!
”ஏன்.. இப்ப நல்லவன் மாதிரி மன்னிப்பு கேட்டுட்டு.. பேசிட்டு.. நான் தூங்கினப்பறம் வந்து என்னால முடியல.. அது இதுனு சொல்லி என்னை தொந்தரவு பண்றதுக்கா.. ?” என்ற மனைவியின் சாட்டையடி கேள்வியில் கண்களை மூடி வலிகளை விழுங்கப் பார்த்தவன்,
”நான் ஏன் அப்படி ஆனேன்னு சத்தியமாக எனக்கு.. எனக்கே.. தெரியல மேகா.. ” என்றான் கலங்கிய குரலில்..!
”ம்ம்.. ! பரவால வாங்க.. ! இப்படி வெளிய நின்னு பொலம்ப வேண்டாம். பார்க்காறவங்களுக்கு காட்சி பொருளாக வேணாம். உள்ள போலாம்.. !” என்றவள் மெல்ல திரும்ப..
“மேகா..??”
” என்ன?” திரும்பி பார்த்தாள்.
”டயர்டா இருக்கா? உடனே படுக்கணுமா?”
”ஏனாம்?” என்றவள் குரலில் அத்தனை கவனம் கூடவே எரிச்சல்.
”இல்ல.. இப்படி காத்தாட நிக்கணும் போலருக்கு எனக்கு” எப்படி சொல்லுவான் உள்ளே அவளால் தூண்டப்பட்டிருந்த அந்த வலியும் ரணமும்… அதனால் உண்டான நிம்மதியின்மை அத்தனை வெண்மை.. புழுக்கம்..! அதனை போக்க இந்த காற்றும் அதன் குளுமையும் அவசியம் தேவை என்று எப்படி சொல்வான்?
”இருட்லயா.. எவ்வளவு நேரம் நிக்குது. எனக்கு கால் எல்லாம் வீக்கம் வலிக்குது. நீங்க நில்லுங்க.. நான் போறேன்” என்றவள் சோர்வாக நடந்தாள்.
செல்லும் அவளை விரத்தியோடு பார்த்தான் நிரஞ்சன். இதுவே முன்னால் என்றால் இவ்வாறு அவ்வப்போது மொட்டைமாடி இருட்டில் நிற்பது வழக்கம்.
“உங்களுக்கு ஏன் இப்படி ஒரு ஆசை அதுவும் இந்த இருட்டுல மொட்ட மொட்ட முழிச்சுக்கிட்டு..” என்று கொட்டாவி விட்டபடியே கணவனிடம் மல்லுக்கு நிற்பாள் வதனி.
” இயற்கையை ரசிக்க கத்துக்கணும் மேகா.. பிடிச்சமான தட்பவெப்ப நிலை. குளிர்ச்சியான நேரம்.. அதும் எனக்கு பிடிச்ச என் மாதுவோட..” என்று ரசித்து சொல்லுவான் நிரஞ்சன்.
”என்னை அவ்ளோ பிடிச்சிருக்கா..?”
”என்ன டி கேள்வி இது..? இன்னும் எத்தனை வருஷம் வாழ்ந்தால் இந்த கேள்வியை நீ கேட்காமல் இருப்ப? என் மேகாவுக்காக நான் எதை வேணா செய்யத் தயார்..
”அப்போ அவளை விட்றலாமே.. இப்படி அர்த்த ராத்திரில பாதி தூக்கத்துல கூட்டிட்டு வந்து என்னையும் தூங்க விடாம.. நீங்களும் தூங்காம.. இந்த கொடுமை செய்றதை விட்றலாமே?” என்று கண்களை சுருக்கி பாவமாக கேட்டவளை மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சினான் நிரஞ்சன்.
”ம்ம்.. நாளைல இருந்து..”
”ஏன் இன்னிக்கு என்ன. ?”
”அதான் ஏற்கனவே வந்தாச்சே.. அது மட்டுமல்ல இப்படி நீ கண்ணை சுருக்கி கெஞ்சலாக பார்க்கும்போது உன்னை கொஞ்சனும் தான் தோணுது. பின்ன எப்படி விடறது? முடியவே முடியாது.. !!” மெல்ல அவள் இடுப்பில் தன் கையை படர விட்டான். அவளோ நெளிந்தாள். மெல்ல அசைந்து அவனின் கையைப் பிடித்தாள். ஆனால் விலகவில்லை. !
”மேகா..”
”ம்ம்ம்.. சொல்லுங்க.. ?”
”இந்த நைட்டில கூட செம்ம அழகா இருக்க டி”
”இருட்லயுமா?” மெல்லச் சிரித்தபடி கேட்டாள்.
”ம்ம்.. இருட்டுல தான் உன் வளைவு நெளிவு எல்லாம் செமையா இருக்கு..” என்று அணைத்தான்
”வேணாம்.. சும்மா இருங்க.! மொட்டை மாடியில் நிற்கிறோம் எங்கே இருந்ததுன்னா யார் வேணா நம்மளை பார்க்கலாம்” என்று நெளிந்தாள்.
”ப்ளீஸ்.. ஒரு டூ மினிட்ஸ் ரொமான்ஸ்.. டிட் பிட்ஸ் போல” என்றவன் அவள் இதழ்களில் தொலைந்தான். அவளையும் தொலைந்தான்.
பின் அங்கேயே அமர்ந்து மெல்லிய குரலில் மனசு விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அவன் மெல்ல நகர்ந்து போய் அவள் காலை பிடித்தான்.
”அச்சோ.. என்ன பண்றிங்க.. ?” அடிக்குரலில் பதறினாள்.
அவள் வலது காலை தூக்கி பிடித்து முத்தமிட்டான். அவள் சிலிர்த்து காலை இழுத்தாள். அவளின் கால்களை மென்மையாக பிடித்து தடவினான்.
”உன் மடில கொஞ்ச நேரம் தலை வச்சு படுத்துக்கிறேன் மேகா.”
அவன் நகர்ந்து போய் அவள் மடி மீது தலை வைத்துப் படுத்தான். அவளின் மணத்தை வாசத்தை நுகர்ந்தபடி சில நொடிகள் கண்களை மூடியிருந்தான். அவள் அவனின் தலை முடிக்குள் விரலை விட்டு மெதுவாக கோதி விட்டாள்.
மெல்லக் குனிந்து அவனின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள். அவனோ அந்த ஏகாந்த தனிமையில் மனைவியின் அருகினில் இன்பத்தில் தத்தளிக்க ஆரம்பித்தான்.
பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?
அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?
என்ன இல்லை அவளிடம்?
இறைவன் மிச்சமே வைக்காமல்
படைத்த அழகிய படைப்பு.
அவளுக்கென்று..
தனி அழகு இருக்கு..!
தனி தாய்மை இருக்கு..!
தனி நேசம் இருக்கு…!
தனி பாசம் இருக்கு..!
தனி கற்பனை இருக்கு..!
தனி மனம் இருக்கு..!
தனி திமிர் இருக்கு..!
தனி உலகம் இருக்கு..!
அவளுக்கென்று
அவ்வளவு இருக்கிறதே..!
அவளிடம்...,
அவளிடம் மட்டும்....,
அவள் ஒரு ஆழ் கடல்..!
ஆனால்.. கடலில் கூட கரையேறி விடலாம்.
ஆனால் ஒரு முறை,
அவள் அன்பிற்குள்..
அவள் அரவணைப்பிற்குள்..
அவள் காதலுக்குள்..
அவளின் கரிசனைக்குள்.. சிக்கிக்கொண்டால்..
கரையேறவே ஆசை படாது மனது.
அங்கேயே சிக்கி தவிக்கும்.
மனுசனை கிறுக்காக்கும்..!
அப்படித்தான் மேகாவின் அன்பில் காதலில் அரவணைப்பில் நேசத்தில் கட்டுண்டு கிடந்த நிரஞ்சனது மனது ஏதோ ஒரு நிலையில் தட்டு தடுமாறி தப்பு வழி சென்று.. இன்று மீண்டும் அவளது ஒரு நேச பார்வைக்காக ஏங்கி தவித்தது..!!
பெருமூச்சு விட்டபடி உள்ளே சென்று அன்னைக்கு கீழே விரிப்பை விரித்து படுத்தவனுக்கு தூக்கம் கண்களுக்கு கிட்டுவதாயில்லை.
தொடரும்..
