Share:
Notifications
Clear all

மாமனே 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

மாமனே 11

 

 

முதல் முதலாக தன்னை தேடி வந்த மனைவியை உடனே வீட்டுக்கு அனுப்ப மனம் வரவில்லை மாணிக்கவேலுக்கு!! அதே நேரம் வெகு நேரம் கடையை பூட்டிக் கொண்டு உள்ளே இருக்க முடியாமல்… "நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க அம்மிணி. இதோ வந்துறேனுங்க!" என்றவன் அங்கிருந்தே ஜீவனிற்கு ஃபோன் போட்டு அந்த கடை கணக்கு எல்லாம் தெரிந்து கொண்டவன், நான்கு மணி போல மனைவியை சென்று பார்த்தான். அவளோ உண்ட அசதியில் அங்கே உறங்கி இருந்தாள்.

 

அந்த ஒற்றை நாடா கட்டிலில் ஒருக்களித்து படுத்து கைகளை கழுத்துக்கடியில் வைத்து கால்களை சுருட்டி கருவறை சிசு போல உறங்கும் மனைவியை பார்த்தான்.

மென் புன்னகை அவன் வதனத்தில்!!

 

"கடவுள் எங்கே இருந்தவர்களை எப்படி முடிச்சு போடுகிறார்? ஒரு பத்து நாளுக்கு முன்னால் இவ யாருன்னு எனக்கு தெரியாது! ஆனால் இப்போ…!! அதோடு இப்படி ஒரு கல்யாணத்தை என் மனம் ஏற்குமா என்றும் அப்போது தெரியாது!! ஆனாலுமே ஏற்றுக் கொண்டேனே!" என்று சிரித்தவன், மெல்ல அவளது கன்னத்தை தட்டி எழுப்பினான்.

 

"அம்மணி.. எந்திரிங்க! இது நம்ம வீடு இல்ல கடை. வீட்டுக்கு போய் உங்க தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமுங்க.. எந்திரிங்க!" என்று சற்று நகைத்த குரலில் அவன் எழுப்பவும்.. "ம்ம்ம்..!" என்றவள் வழக்கம் போல அவன் கையைப் பிடித்து கழுத்துக்கடியில் வைத்து தூங்கினாள்.

 

அன்றோ மலை சாரல்!! இன்றோ இடி மின்னலுடன் மாணிக்கத்தின் இதயம் தடதடத்தது அவளின் செயலில்!!

 

பெண்ணை முழுமையாக அறியாதவன்! பெண்மையின் ஸ்பரிசத்தை நுகராதவன் தான். ஆனால் இந்த ஒரு வாரத்தில் இவளின் அருகாமையினால் பல மாற்றங்கள் அவனுள் ஏற்பட்டு இருக்க.. சட்டென அவள் பிடித்து வைத்திருந்த கையை பார்த்தவன், அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவர முடியாதவனாய் "அம்மிணி… எழுந்திருங்க!!" என்றவன் குரலில் அத்தனை கரகரப்பு!!

 

ஆனாலும் அவளோ இன்னும் அவன் கையை நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு தூங்க.. அவள் நெஞ்சுக்குழியின் ஈரமும் பெண்மையின் மென்மையும் மீண்டும் ஒரு தடதடப்பு மாணிக்கத்திடம்!!

 

'இது சரி படாது!' என்று நினைத்தவன் மற்றொரு கையால் அருகில் இருந்த, ஜக்கிலுள்ள நீரை எடுத்து அவள் மீது லேசாக தெளித்தான்.

 

"அய்யய்யோ.. மழை..!" என்று துள்ளி எழுந்தவள், எதிரே இருப்பவனை பார்த்ததும் யோசனையுடன சுற்றும் முற்றும் பார்த்த பிறகு தான் இருக்கும் இடம் தெரிய "சாரி தூங்கிட்டேன்!" என்றாள்.

 

"பரவாயில்லிங்…! அந்த பக்கம் பாத்ரூம் இருக்கு ரெடி ஆகிட்டு வாங்க அம்மிணி!" என்றான்.

 

"சரி.!" என்றவள் உள்ளே சென்று முகம் கழுவி வெளியில் வந்து, நலுங்கி இருந்த புடவையை சரி செய்து கட்டிக்கொண்டு.. கலைந்திருந்த தலையை வார அங்கே சீப்பு இருக்கிறதா என்று ஆராய.. புதிதாய் சீப்பும் சிறு கண்ணாடி பவுடர் குங்குமம் எல்லாம் இருந்தது!!

 

"முன்னாடி இத நாம பாக்கலையே?" என்று யோசித்தவளுக்கு கணவன் தனக்காக வாங்கி வைத்திருக்கிறான் என்பது புரிய விரிந்த புன்னகை மங்கையிடம்!!

 

தலைவாரி தன்னை அலங்கரித்தவளின் முன்னே நீட்டிய முரட்டுக் கையில் நெருக்க கட்டிய மதுரை மல்லி!!

 

கண்கள் விரிய மல்லிகையை வாங்கி திரும்பியவளோ கணவனின் கண்களில் கண்ட ஏதோ ஒன்றில் அதில் தொலைந்து நிற்க…

 

"சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாங்க அம்மிணி.. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரலாமுங்க!" என்றவன் மெல்ல அவள் கன்னத்தை தட்டி விட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள…

 

நெருக்கமாக தொடுத்த மொட்டு மல்லிகையை வாசம் பிடித்தவள் பின்பு அதை தன் கூந்தலில் சூடிக்கொண்டாள்.

 

"மன்னவன் பெயரைச் சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்…"

 

என்று பாடல் வேறு மெல்லிய குரலில்…

 

அவளது பாடலைக் கேட்டுக் கொண்டு வந்தவன் முகத்தில் மந்தகாச புன்னகை!! தலையை மட்டும் வாரிக் கொண்டு கிளம்பியவன் கையை பிடித்து இழுத்தவள், அங்கிருந்து பவுடரை அவனுக்கு எடுத்த பூசி விட வர.. அவனோ தடுத்தான்!!

 

"நான் இதெல்லாம் உபயோகப்படுத்துவது இல்லிங்.."

 

"பரவாயில்லை இனி பூசுக்கோங்க" என்றவள் அவன் முகத்தில் மீண்டும் பூச வர.. 

 

"ஏன் நான் கருப்பா இருக்கிறதுனால உங்களுக்கு என் கூட வர கௌரவ குறைச்சல் இருக்குங்களா?" என்றான் பட்டென்று!!

 

இந்த கருப்பனை எத்தனை முறை ரசித்து இருக்கிறாள் அவனுக்கு தெரியாமலே.. இப்படி சட்டென்று கேட்டவுடன், முகத்தில் அறை வாங்கிய உண்ரவோடு அவள் கண்கள் கலங்க கையில் இருந்ததை ஓரமாக வைத்துவிட்டு கலங்கி வழிந்த கண்ணீரை கண்களை பின்புறம் திரும்பி முந்தானையால் ஒற்றி எடுத்தாள்.

 

 அவனுக்கே சங்கடமாய் விட்டது "என்னடா செய்யுற மாணிக்கம்! முதல் நாள் வெளியில் செல்லும் போதே அவளை அழ வைக்கிற!" ஆனாலும் தெளிவுபடுத்திக்க வேண்டி அமைதியாக இவன் நிற்க…

 

அவனின் கூர்விழிகள் தன்னை துளைப்பதை உணர்ந்தவள் சட்டென்று திரும்பி "அழகு என்பது கலர்ல கிடையாது! ஆண்மை என்பது லட்சணத்துல கிடையாது.. நம்ம நடத்தையில, ஒழுக்கத்தில, பண்புல இருக்குங்க. நம்ம காக்குற அய்யனாரு பாண்டி கருப்பு எல்லாம் கருப்புதான்! ஏன் கருவறையில் இருக்கும் அந்த மீனாட்சி கூட கருப்பு தானே.. இன்னொரு தரம் இப்படி பேசினீங்க.." என்று படபடக்கும் இமைகளோடு சற்றே கோபத்தோடு விரல் நீட்டி அவள் பேச.. பேச..

தன் முன் நீட்டி இருக்கும் அந்த வெண்டை பிஞ்சு விரல்களை கடித்து தின்று விட பேராசை கொண்டது இவன் உள்ளம்.

 

ஆசையை அடக்க நடு நெற்றியில் நடுவிரலால் தேய்த்துக் கொண்டவன், அந்த விரல் நுனியை பிடித்து கை இறக்கியவன் எதுவும் நடக்காது போல..

 

"வாங்க.. போகலாம்" என்று அமைதியாக நடக்க, இப்போ இங்கே என்ன நடந்தது என்று புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.

 

கடை பூட்டிவிட்டு வந்து வண்டி எடுத்தவன் அப்போதுதான் தன் வண்டியை பார்க்க.. இவளோ அவன் முன்னே கையைக் கட்டிக் கொண்டு நமட்டு சிரிப்புடன் நின்றாள். 

 

"இப்பொழுதும் முன்னே அமர்ந்து கொள்ளவா?" என்று புருவத்தை உயர்த்தி கண்களால் கேட்க..

சுற்றுமுற்றும் அவன் இருந்த ஏரியாவை பார்த்தவன் "வேண்டாம் தாயே!" என்பது போல தலையாட்டி கண்களால் இறைஞ்சிவன் "சரி வாங்க!" என்று அவளை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான்.

 

வளைந்து நெளிந்து உருண்டு புரண்டு சென்ற ஆட்டோவில் அந்த பக்கம் பிடிமானத்துக்கு கம்பிகள் இருந்தாலும், அது என்னவோ அய்யனார் கணக்காய் அருகில் இருக்கும் இந்த மாயவனை பிடித்துக் கொள்ள தோன்ற.. அவன் புஜத்தை தன் கரத்தால் இறுக்க கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மலர்.

 

ஆட்டோவில் தாராளமாக மூன்று பேர் அமரலாம். ஆனால் இன்னும் ஒருவர் அங்கே அமர்ந்து இருப்பது போலவே இருவரும் நெருக்கியடித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர்.

 

இறங்கியதும் ஒரு மாதிரி இருக்கிறது என்றாள். "குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரவா?" என்றான் நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டே.. சரிங்க என்று நிமிர்ந்தவள், அவன் வியர்வையை துடைப்பது பார்த்து கணவனின் அகன்ற நெற்றியில் வழிந்த வியர்வையை தன் முந்தானையால் வலிக்காமல் ஒற்றி எடுத்தாள் வெகு அழகாய்!! உரிமையாய்!! மனைவியாய்!!

 

ஒற்றி எடுத்த பிறகுதான் சுற்றுப்புறம் புரிய.. அவனும் ஒரு வினாடி அதிர்ந்து நிற்க.. "அச்சச்சோ..!" என்று கண்ணை சுருக்கி உதட்டை கடித்து திரும்பி நின்று கொண்டாள். "வர வர உன் புருஷன் பாசம் அளவில்லாமல் போகுதடி மலரு.. கண்ட்ரோல்! கண்ட்ரோல்!!" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டே திரும்பிப் பார்க்க அங்கே அவன் இல்லை! அப்படியே திகைத்து விட்டாள் மலர்விழி!! கண்கள் கலங்கிவிட்டன…

 

"எங்க போனார் இவரு? ஆள காணோம்?" என்று சுற்றிமுற்றி பார்த்து பரிதவித்தவள் முந்தாணையை கையில் சுற்றிக்கொண்டே கலங்கியபடி நின்றாள்.

 

மதுரை அவளுக்கு பழகிய ஊரு தான். ஆனால் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. அதிலும் சட்டென்று அவன் மாயமாய் எங்கோ மறைந்து போக.. எங்கே என்ன செய்வது தெரியாமல் திரு திருவென்று நடுரோட்டில் நின்றிருந்தவளை வேகமாய் வந்த ஷேர் ஆட்டோ லேசாக இடிப்பது போல வந்து "ஏம்மா… பார்த்து ஓரமா போமா" என்று திட்டிச் செல்ல அப்பொழுதும் புரியாத பாஷை கேட்டவளை போல திகைத்து நின்று இருந்தாள் மலர்.

 

"எவ்வளவு திட்டினாலும் அப்படியே நிக்கது பாரு. ஐயே.. போமா அந்தாண்ட!" என்று அவன் மீண்டும் திட்டி விட்டு செல்ல.. வெடவெடத்து நின்றவளின் கரங்களை தன் நோக்கி இழுத்துக் கொண்டாள் ஒரு பூ விற்கும் பெண்மணி!!

 

"ஏம்த்தா இப்படியே நிக்கிற?" என்று கேட்டவள் மலர்விழியின் முகத்தில் என்ன கண்டாளோ "என்னத்தா ஆச்சு?" என்று அக்கறையோடு கேட்க..

 

"அது.. அது.. என் புருஷன்…" என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் துடித்த உதடுகளை மேற்பற்களால் கடித்துக் கொண்டு கலங்கிய கண்களை காட்டாமல் தலை குனிந்து நின்றவளை பார்த்த அந்த பூக்கார பெண்மணிக்கும் பாவமாய் போக…

 

"சரித்தா.. சரித்தா.. வெசனப்படாத இங்கன பக்கத்துல போலீஸ் நிக்கும் அவங்க கிட்ட சொல்லலாம்" என்று பேசி முடிக்கும் முன்னே, "யாருக்கு என்ன? எதுக்கு போலீஸ் போகணுமுங்க?" என்று ஆளுமையான குரலில் ஆசுவாசத்தோடு நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் இன்னும் கலங்க.. அக்கண்களில் அரைகுறையாக நிறைந்தான் மாணிக்கம். அவனும் உரிமையாய் அருகில் நெருங்கி நிற்க…

 

"நீ தேன் அந்த புள்ளையோடு புருஷனா தம்பி! பாவம் கொஞ்ச நேரத்துல உனக்கு காணும்னு பதறி போச்சு! ஆட்டக்காரன் இந்நேரம் ஏத்தி இருப்பியான்! பார்த்து கூட்டிட்டு போப்பா" என்றார்.

 

தன் கையில் வைத்திருந்த டீ கப்பை அவளிடம் முறைத்துக் கொண்டே கொடுத்தவன் "உங்கள அப்படி விட்டுட்டு ஓடிப்போயிட மாட்டேனுங்க! எதுக்கு இந்த பரிதவிப்பு? எதுக்கு இந்த அழகை? ஒரு தடவை பிடிச்ச கையை ஜென்மத்துக்கும் விடமாட்டான் இந்த மாணிக்கம்! அப்போ என் மேல நம்பிக்கை இல்லை!! இதுக்கு நீங்க என்னைய…" என்றவன் பாதியோடு நிறுத்தி தன் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான். அடிக்குரலில் பேசியவனின் குரலும் அவன் காட்டிய கோபமும் அவளுக்கு முதுகு சில்லிட செய்தது.

 

'என்ன இப்படி முறைச்சிகிட்டு திட்டிக்கிட்டே இருக்கியான்!' என்றபடி உள்ளத்தில் பயந்தாலும் அவன் நீட்டிய கப்பை வாங்கி குடித்தாள்.

 

வாழ்க்கையின் நிதர்சனம் இது தான்!! அன்பு நேசம் பாசம் போல தான் கோபமும்!! ஒரேயடியாக இனிப்பை தின்றால் எப்படி? அறுசுவையில் காரமும் கசப்பும் உவர்ப்பும் எப்படியோ.. அப்படி தான் இந்த கோபமும் ஊடலும் வாழ்கையை உயிர்ப்புடன் வைக்க!!

 

என்ன குடித்தாள்? என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு அவளிடம் கேட்டால் தெரியாது! ஏனென்றால் அவள் பருகிக் கொண்டிருந்தது டீயை அல்ல.. மாணிக்கவேலை!!

 

இவளை அவன் பார்க்கவே இல்லை இதழ்கள் அந்த டீ கப்பில் பதிந்து இருந்தாலும், கண்களும் சுற்றத்தை தான் பார்த்தது. அந்த கண்களின் அலைப்புறுதலில் ஏதோ ஒரு தவிப்பு!

 

ஆனால் அதையெல்லாம் எங்கே மலரின் கண்களுக்கு தெரிந்தது. அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவன் கண்களில் தீட்சண்யம்.. கூரிய அழுத்தமான கண்கள்.. வில்லென அடர்த்தியான ரோமங்கள் சொறிந்த புருவங்கள்… தன்னிலை மறந்து ரசித்தாள் அவனை!

 

"ஆனாலும் இந்த கருப்பனுக்கு ஓவரா தான் கோபம் வருது! அழகன் டா நீ! கருப்பழகன்!!" என்று ஊடலோடு கூடிய கொஞ்சலும் அவள் உள்ளத்தில்!!

 

சிற்றுடைக்காரி சிலையாக அவனை ரசிக்க.. அவனின் கண்கள் இவள் புறம் திரும்ப.. சுதாரித்தவள் கப்பில் தனது பார்வையை பதித்துக் கொண்டாள்.

 

அவள் குடித்தவுடன் டீக்கப்பை வாங்கி ஓரமாக குப்பை கூடையில் போட்டவன் முன்னே நடக்க… அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் இவள் ஓடினாள்.

 

"அய்யனார்னு சொன்னது சரியா தான் இருக்கு. எப்படி வேக நடை போட்டு போறார் பாரு.. பின்னாடி பொண்டாட்டி வராளா இல்லையான்னு கவலை இருக்கா?" என்று அவள் கடுகடுத்தது, அவன் காதில் விழுந்தாலும் இதழ் ஓரம் விரிந்த சிரிப்போடு வேக நடையை குறைக்காமல் தான் சென்றான்.

 

அதன்பின் கோயில் உள்ளே வரிசையில் நிற்கும் போதும் சரி அதற்கு பின்னான நேரங்களிலும் சரி அவளை முன்னே விட்டு தான் பின்னே அணைவாக நின்று கொண்டான். அரணாகவும் தான்!!

 

திருப்தியான தரிசனம்!! மீனாட்சி அன்னையின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு சொக்கநாதரையும் தரிசித்துவிட்டு பொற்றாமரை குளத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது மனம் நிறைந்த உணர்வு மாணிக்கவேலுக்கு!!

 

இதே கோவிலுக்கு தனியாகவும் ஜீவனோடவும் நிறைய முறை வந்திருக்கிறான். அப்பொதெல்லாம் பலர் குடும்பமாக அமர்ந்திருப்பதை கண்டதும் அவனை மீறி ஒரு ஏக்க மூச்சு வெளிப்படும்.

 

அவன் இம்மென்று சொல்லி இருந்தால் அல்லிமலர் பேத்திகள் என்ன சீமையில் இருக்கும் அத்தனை பெண்களையும் அவன் முன் கொண்டு வந்து நிறுத்திருப்பார். ஆனால் அவன் மனதுதான் வேறு ஒருத்தியின் பால் சாய்ந்து இருந்ததே!! அந்த ஒருத்தி இன்னொருத்தவனோட சொந்தம் என்றாலும் அந்த காதலின் வடு மறைய மறுத்தது!!

 

ஆனால் தன் வாழ்வில் இப்படி ஒருத்தி அதிரடியாக நுழைந்து சூறாவளியாய் சுழற்றி இளந்தென்றலாய் மனதை நிறைத்து செல்வாள் என்று கிஞ்சிற்றும் நினைக்கவில்லை மாணிக்கவேல்.

 

படிகளில் அமர்ந்தவன் கோபுர உச்சியை பார்த்து தன் மனநிறைவை நன்றியாய் உரைத்துக் கொண்டான் அந்த மரகத பச்சை அணிந்த மீனாட்சியிடமும் அவள் சொக்கி கிடக்கும் சொக்கனிடமும்!!

 

அப்போது அந்தப் படிகளில் இரண்டு பிள்ளைகள் இறங்கியும் ஏறியும் விளையாடி கொண்டிருந்தனர். மூன்று வயது இருக்கும் இருவருக்கும்!! அச்சு எடுத்த நகல் போல் இருவரும் ஒரே மாதிரி இருந்தனர். உடைகளின் வண்ணங்கள் கூட ஒன்றாய் இருக்க அவர்களை ரசித்துப் பார்த்தவள் கணவனின் இடுப்பில் தன் புஜத்தால் இடிக்க.. என்ன என்று திரும்பியவனிடம் அந்த குழந்தைகளை காட்டி "அழகா இருக்காங்கள…" என்றாள்.

 

"ஆமா… சுட்டி வேற.." என்றான் இளம் புன்னகையோடு.

 

"நமக்கும் இதே போல ஒரு இரட்டை பிள்ளைகள் பிறந்தால் எப்படி இருக்கும்?" என்று கேள்வியில் அவன் விதிர்விதிர்த்து திரும்பி பார்க்க.. என்ன என்பது போல ஒற்றைப் புருவத்தை தூக்கியவள், "இரட்டை வேணாமா? அப்போ மூணு? " என்றதும் இன்னும் அவன் கண்கள் விரிக்க… வாயை பிளக்க..

 

"அப்போ நாலு ஓகே வா மாமா?" என்றாள் கொஞ்சல் குரலில், பிளந்த அவனது வாயை தாடையில் ஒற்றை விரல் கொடுத்து மூடியப்படி!!

 

அவளது இந்த சீண்டலில் காது மடல் கூட சிவந்து போனது மாணிக்கவேலுக்கு. வலது கையால் காதை லேசாக தேய்த்து கொண்டவன் "அம்மிணி… நமக்கு ஒன்னே ஒன்னு சிங்கக்குட்டியா போதுமுங்க! இத்தனை எல்லாம் பெத்தா உங்களாலையும் தாங்க முடியாதுங்க.. இந்த உலகத்தாலையும் தாங்க முடியாதுங்க!" என்று சிரிக்காமல் அவளை வார, அவளோ அவனை முறைத்துக் கொண்டே இருக்க…

 

கவின்… மிதுன் என்ற அழைத்தது பெண் குரல்! அந்தக் குரலை கேட்டவன் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க.. அவனது எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அங்கே தரிசனம் கொடுத்தாள் மணிமேகலை!!

 

"வாங்க வாங்க… போதுமுங்க விளையாண்டது. பொங்கல் சாப்பிடுங் கண்ணுகளா…" என்று அவள் குரல் அருகில் கேட்க மலர்விழியும் "ஏனுங்க மாமா அவங்களும் உங்க ஊரு தான் போலங்க" என்று அவளது பேச்சை வைத்து கூற… இவனோ ஆடாமல் அசையாமல் இமை கூட தட்டாமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அந்தக்

கண்களில் முன்பிருந்த காதல் இல்லை.. ஆசை இல்லை.. நேசம் இல்லை!!

 

ஒருவித அன்பு மட்டுமே தேங்கி நின்றது! அவளை தாங்கி நின்றது!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top