27
அன்று..!
நிரஞ்சனை வர வர புரிந்துக் கொள்ளவே முடியவில்லை வதனியால்.
எப்பொழுது பதமாக தேனாக பேசுகிறான்? எப்பொழுது புலியாக மேலே பாய்க்கிறான் என்று கணிக்கவே முடியவில்லை அவளால்..! இத்தனை வருட தாம்பத்தியத்தில் இதுபோலெல்லாம் அவன் நடந்து கொண்டதே இல்லை.
திடீரென்று எட்டிக்காயாய் கசக்கிறான்.. பின் அவனே நெல்லிகாயாகவும் இனிக்கிறான்.
ஏன் இப்படி மாறி விட்டான்? என்று புரியாமல் தவித்தாள் பேதை வதனி.
ஒரு பக்கம் நிரஞ்சனின் இந்த மாற்றத்திற்கு காரணம் தெரியாமல் குழம்பினாள் என்றால்.. மறுபக்கம் பிரேமாவின் உடல்நலமில்லாமையும் அவரின் இன்ஃப்ரீயாரிட்டி காம்ப்ளக்ஸால் உண்டான எரிச்சலையும் கோபத்தையும் அவள் மீது காட்டிட உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போனாள் வதனி.
மிரு கூட இப்போதெல்லாம் அன்னையை தொந்தரவு செய்வதில்லை. அவளாகவே சில நேரம் விளையாண்டு, சில நேரம் படித்து, அன்னை செய்வதை உண்டு, தன்னோடு படுக்கும் தந்தை போனிலேயே உலாவுவதை பாவமாய் பார்த்து ஒதுங்கி போனாள் பிள்ளை..!
ஒரு வீட்டுக்கு அச்சாணி பெண் தான். அதில் சந்தேகமில்லை..! ஆனால் அந்த அச்சாணியே ஒடிந்து நொடிந்து போகும் வண்ணம் வாட்டி வதைத்தால் என்ன தான் செய்வாள் பெண்ணவளும்??
காதல் கணவனாய் அவளை ஆராதிப்பான் சில நேரம். பல நேரம் அவளை வார்த்தைகளால் வதைத்தான்..!!
இப்போதெல்லாம் கணவனிடம் தானாய் நெருங்வதை தவிர்த்தாள் வதனி. அவனை நெருங்கவே பயமாக இருந்தது.
ஒரு முறை வேலை பளு அதிகம். கணவனின் ஆதரவான ஒரு வார்த்தை, அன்பான அணைப்பு, காதலாக பார்வை வேண்டுமென பெண்ணவளின் உள்ளமும் உடலும் தவியாய் தவிக்க, கூச்சத்தை விட்டு நாணத்தை தவிர்த்து ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவனின் பின்னால் வந்து அவனை மெல்ல அணைத்து “மிஸ் யூ நிரஞ்சன்” ஏக்கமாக கூறி உதட்டை அவனது கன்னத்தில் பதித்தாள்.
சட்டென்று அவளை உதறியவன்,
“சும்மா இரு மேகா.. வேலையா இருக்கேன்ல. உனக்கு என்ன.. நீ வீட்டுல சும்மா தானே இருக்க. எனக்கு தான் ஆயிரம் டென்ஷன். வேலையில.. வெளியிலனு” என்று கத்தினான்.
முணுக்கென்று கண்களில் கண்ணீர் பெருக, உதட்டை கடித்து விலகினாள் வதனி.
“சும்மா சும்மா அழுது கடுப்பு ஏத்தாத..! ஆயிரம் டென்ஷன் எனக்கு. ஃபினான்ஸியலா வேலையில எவ்வளவு பிரச்சனை தெரியுமா இந்த ஆறு மாசத்துல.. போய் போய் தூங்கு. இல்ல அம்மாவ பாரு” என்றான் கடுப்பாக.
இதுவே முன்பு இருந்த நிரஞ்சனாக இருத்தால்.. அவள் அணைத்த வேகத்தில், அதே விட வேகமாக அவளை முன்னால் இழுத்து முத்தமழை பொழிந்து அவளை தன்னிடம் தொலைக்க வைத்து, அவளுள் தான் தொலைந்து இருப்பான்.
தாம்பத்யத்தியம் என்பது இரு உடலின் சங்கமம் அல்ல..!
இரு மனங்களின் புரிதல்..! இரு பாலினமும் தன் தகுதி விகுதி ஏற்ற தாழ்வை மறந்து ஏன் தன்னையே மறந்து தன்னையே ஒப்புக் கொடுத்து, தன் இணையிடம் ஐக்கியமாகி விடும் நிலை..!!
ஜாதி மத இன பேதமின்றி தன் இணையை இணையாய் மட்டும் பார்க்கும் குணம்.
பெருவாரியான ஆண்கள் ஏதோ பெண்களை திருமணம் செய்து வந்து அவளின் தகுதி மீறி தான் அவளுக்கு பணம் நகை உடை என செய்கிறோம் என்ற எண்ணுமுண்டு..!
அவளின் புனித அன்புக்கு முன் இதெல்லாம் வெறும் பொருட்களே என்பது சில ஆண்கள் மட்டுமே உணர்ந்துள்ளனர்.
வதனி அவளாக அவனை நெருங்குவதுமில்லை. அவனாக நெருங்கி வரும் தருணத்தில் அவனை விலக்குவதும் இல்லை. அவனிடம் விளக்கம் கேட்கவும் இல்லை..!!
ஆனால் நாளாக நாளாக அவனிடம் தோன்றிய மாற்றங்கள் அவளுள் சிறு பயத்தை ஏற்படுத்தியிருந்தது.
பெண்ணுக்கு அவன் மாற்றத்துக்கான காரணம் புரியாமல் அவன் என்ன செய்தாலும் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பித்தாள். தன்னை நம்பாத மனைவி மேல் அவனுக்குக் கோபம் அதிகமாகியது. விலகல் விஸ்வரூபமெடுத்தது. பிரேமாவுக்கு கூட மகனின் இந்த மாற்றத்தில் சிறிது அதிர்ச்சி தான்.
“பொழுதன்னைக்கும் பொண்டாட்டிய கொஞ்சிக்கிட்டே இருக்க முடியுமா? அவனுக்கு வேலை வெட்டி இல்லையா? இதென்ன காதலிச்ச சிறு வயசு புள்ளையா? காதலிச்ச வேள வேற.. இப்ப கல்யாணமான பிறகு நிலைம வேற? பொழுதனைக்கும் இப்படி அழுது வடிஞ்ச முகத்தோடு இல்லாம சிரிச்ச முகத்தோடு இருக்க பழகு..” என்று பிரேமாவும் அவர் பங்குக்கு அறிவுரை கூறினார்.
“இல்ல.. எனக்கு புரியல.. காதலிக்க முன் பின் என்ன வித்தியாசம்? அப்ப இருந்த அதே ஆதவ் நிரஞ்சனும் மேகவதனியும் தானே இப்பொழுதும் இருக்கிறோம்? கல்யாணமான பின் மாறி விட்டோமோ என்ன?” தனக்குள்ளயே இந்த கேள்வியைக் கேட்டு கேட்டு குழம்பி அதற்கு பதில் தெரியாமல் தவித்து தடுமாறிப் போனாள் வதனி.
பொதுவாக ஆண் பெண் பிரச்னைகளின் ஆணிவேர்க் காரணமே ஆணை ஆணின் இயல்போடு பெண்ணால் அணுக முடியாததும், பெண்ணைப் பற்றிய புரிதலே இல்லாமல் ஆண் அவளை அடைய நினைப்பதும்தான்.
பெண்ணுக்கு ஆணின் அரவணைப்பும், அவன் மூலம் கிடைக்கும் பாதுகாப்பும் முக்கியமென்றால்.. ஆணுக்கு உடற் பசி தீரலும், சுதந்திரமும் மிக முக்கியம். அதைத் தவிர தன்னுடைய வேலை மிக மிக முக்கியம். என்னதான் காதலாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் வேலை நேரத்தில் தன்னை நெருக்கும் பெண் மேல் அவனுக்கு வெறுப்புதான்
வரும். சமீப காலத்தில் நிரஞ்சனின் இந்த வெறுப்பு காரணம் தெரியாமல் தவித்தவள், அதனை பேசி
த் தீர்க்க அன்றிரவு அவன் வரும்வரை காத்திருந்தாள்.
