அன்று…
“மிரு.. அப்பாவ.. டிஸ்டர்ப் பண்ணாத டா.. நான் லைவ்ல இருக்கேன்” என்று சற்றே கோபமாக பேசிய தந்தையை கண்டு வாடிய முகத்தோடு தள்ளிப் படுத்தாள் அந்த சின்னச்சிட்டு.
வதனி பிரேமாவின் அறையிலேயே இப்போதெல்லாம் இரவு தங்கிக் கொள்ள, நிரஞ்சன் தன் மகளோடு அவர்கள் அறையில் தூங்குவான். பெரும்பாலும் தூக்கம் வரும்வரை அன்னையோடு இருப்பவள் தூக்கம் கண்ணை சொக்கும் போது அப்பாவிடம் அவர்கள் அறைக்கு உறங்க வந்து விடுவாள்.
போன மாதம் வரை மகளை அணைத்துப் படுக்க வைத்து கதை சொல்லி தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்த தந்தையாய் இவன்? என்று எட்டு வயது மிருவே யோசிக்கும் அளவு நிரஞ்சனிடம் நிறைய மாற்றங்கள்.
ஆம்.. வீ ப்ரண்ட்ஸ் என்ற அந்த ஆப்பை என்று அவன் தன் ஃபோனில் அப்லோடு செய்து அதனோடு ஃபோனில் உறவாட ஆரம்பித்தானோ.. அன்றிலிருந்து தன் உறவுகளை எட்ட வைத்து உரையாற்றி வருகிறான்.
அந்த ஆப்பை பொருத்தவரை அதில் லைவ் வருபவர்களுக்கு அவர்களின் பாலோவர்ஸ் தங்களுக்கு பிடித்த கிப்ட்டை அன்பளிப்பாக கொடுக்கலாம். அந்த கிப்ட் காயினை பொருத்து அது அவங்களுக்கு பணமாக ரீடிம் செய்யப்படும்.
இன்று நமக்கு கிப்ட் கொடுத்தவர்களுக்கு அதேபோல் அவர்கள் லைவ்வில் வரும்போதும் கிப்ட் கொடுக்க வேண்டும்.
கிவ்வன் டெக் பாலிசி தான்..!!
அந்த கிப்ட் எப்படி பெறுவது என்றால்.. ஒன்று பணத்தை கட்டி வாங்க வேண்டும். இல்லை என்றால் லைவில் விடிய விடிய இருந்தால் அதன் மூலமாக அவர்களுக்கு காயின்கள் சேரும்.
முதலில் தினமும் ஒரு பத்து நிமிடம் அல்லது 15 நிமிடம் லைவில் இருந்தவன், அதன்பின் ஏதாவது ஒரு பாட்டை போட்டுவிட்டு இவன் மகளோடு உறங்கி விடுவான். ஆனால் இப்போதோ அந்நேரம் இரவு 1 மணி வரை நீடித்தது.
இப்பொழுது சில கம்பெனிகள் இரவு 12 மணி முதல் 6 மணி வரை அன்லிமிடெட் ஆகா டேட்டாவை தான் அள்ளி அள்ளி கொடுக்கிறதே.. அது இவனுக்கு சாதகமாக போனது.
முதலில் நல்ல பிள்ளையாக மனைவியிடம் சொல்லி தான் ஆரம்பித்தான். அவ்வப்போது “இது என் மனைவி.. இது என் பொண்ணு” என்று லைவில் இருவரையும் காட்ட..
கூச்ச சுபாவம் கொண்ட வதனி “என்னை இதில் இழுக்காதீங்க நீங்க என்னவோ செய்யுங்க. பிள்ளையையும் இதில் இழுக்காதீங்க.. பொம்பள புள்ள” என்று நழுவி கொண்டாள்.
அளவாக எதையும் பயன்படுத்தும் போது ஆபத்தும் குறைவே..!
ஏன் அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே..!!
முதல் மாதம் ஓரளவு அளவாக அவன் பயன்படுத்த அவனுக்கு அந்த மாத இறுதியில் 2000 ரூபாய் பணம் வந்தது.
2000 ரூபாய் என்பது சிறிய பணம் அல்லவே இந்நிலையில் நிரஞ்சனுக்கு?
அம்மாவுக்கு மருந்துகள் வாங்கலாம் அல்லது பிசியோதெரபிக்கு ஊதியமாக கொடுக்கலாம் என்று அவனுக்கு ஒரு சிறு மகிழ்ச்சி.
அதை மனைவியிடமும் பகிர்ந்து கொண்டான்.
சரி கணவனும் ஏதும் வீணாக பொழுதை கழிக்கவில்லை. இதிலும் ஒரு வருமானம் வருகிறது அதனால் தான் இதை தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அவனை புரிந்து கொண்டாள் சரியாக. கூடவே கணவன் எந்த தவறும் செய்ய மாட்டான் என்று பூரண நம்பிக்கை அவன் மீது..!
நிரஞ்சனுமே இதில் ஒரு ஊதியம் வந்தால் பார்ட் டைம் ஜாப் என்று எங்கும் வெளியே செல்ல வேண்டாம். வீட்டில் இருக்கலாம் பிள்ளையையும் பார்க்கலாம். மனைவியும் பார்த்துக்கொண்டே வீட்டிலிருந்தே வேலை செய்வது போல என்று நினைத்துதான் இந்த சூழலுக்குள் இறங்கினான்.
ஆனால் அந்த சூழல் அவனை மெல்ல மெல்ல இழுத்தது அவனுக்கு தெரியவில்லை.
இன்று பெரும்பாலான ஆன்லைனில் விளையாடப்படும் கேம்களோ இல்லை அதில் காட்டப்படும் கவர்ச்சியான விளம்பரங்கள் கொண்ட ஆப்களோ, முதலில் நல்ல பிள்ளையாக தான் நம் கண்களுக்கு காட்சி தரும்.. கருத்தை கவரும்..!
அதன் பின்னே அதுவே மலை பாம்பாய் நம்மை சுற்றி வளைத்து நம்மை விழுங்கி விடும். கட்ட கடைசியாய் நாம் அதன் வயிற்றுக்குள் செல்லும்போதுதான் நாம் உணரவே செய்வோம்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!
நிரஞ்சனும் இன்னும் உணரும் காலம் வரவில்லை போலும். ஆனால் அவனை சுற்றியுள்ளவர்கள் இவன் அதில் மூழ்குவதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினர்.
இரவில் தன்னை அணைத்து தட்டி கொடுத்து கதை சொல்லி பள்ளியில் என்ன நடந்தது என்று பாசமாக கேட்கும் தந்தை இப்பொழுதெல்லாம் ஃபோனிலேயே பலியாக கிடந்து எதையோ பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறாரே என்று அவனை ஏக்கமாக பார்த்தபடி அருகில் இருந்த தன் டெடி பியரை கட்டி அணைத்துக்கொண்டு உறங்குவாள் மிரு.
கொஞ்சம் கொஞ்சமாக தனியாக தூங்கிக் கொள்ள பழகினாள். அது நல்ல பழக்கம் தான் என்றாலும் அந்த தனிமையை பழக்கும் விதம் ஒன்று இருக்கு அல்லவா?
“ம்மா.. அப்பா இப்பல்லாம் என்கிட்ட கதையே சொல்ல மாட்டேங்கிறாங்க. தட்டிக் கொடுக்க மாட்டேங்கிறாங்க.. போன்லுயே பாத்துக்கிட்டே இருக்காங்க..” என்று மறுநாள் பள்ளி விட்டு வரும்போது அன்னையிடம் தந்தையை பற்றி புகார் கூறினாள் மிரு.
முதலில் என்ன என்று யோசித்த வதனிக்கு அதன் பின் தான் கணவன் லைவில் இருந்திருப்பான் போல அந்த சமயம் என்று புரிந்தது.
“அது ஒன்னுமில்லாமல் மிரு குட்டி.. பாட்டி கீழே விழுந்துட்டாங்க இல்லையா? இப்ப நிறைய ஹாஸ்பிடல் செலவாகுது. அப்பா மட்டுமே வேலைக்கு போறாங்களா. ஒரு சம்பளம் பத்தல இல்ல.. அதான் அந்த போன்ல அந்த மாதிரி பேசினா பணம் கொடுப்பாங்களாம். அதை வச்சு நம்ம பாட்டிக்கு மெடிசின் வாங்கலாம்.. உனக்கு சாக்லேட் வாங்கலாம்.. உனக்கு புடிச்ச டெடி பியர் எல்லாம் வாங்கலாம் இல்லையா? அதுக்காக தான் அப்ப அதுல போறாங்க.. நமக்காகத்தானே அப்பா கஷ்டப்படுறாங்க” என்று கணவனை மகளிடம் விட்டுக் கொடுக்காமல் பேசினாள மனைவி.
ஆனாலும் கணவனிடம் இது பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்று நினைத்தவள் அன்று இரவு மாமியாரை உறங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்கு செல்ல.. அங்கே மகள் உறங்கிக் கொண்டிருக்க, நிரஞ்சன் லைவ்வில் இருந்தான்.
மனைவியை கண்டதும் “வா வா..” என்று அவளை இழுத்து அருகே வைத்து அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் இவன் சொல்லிக்கொண்டு மனைவியையும் கைகளால் சீண்டினான்.. தாபமாக தீண்டினான்.
“என்ன ரொம்ப நாளைக்கு அப்புறம் மகாராணியின் பார்வை இந்த அடியேன் மீது விழுகிறதே..!” என்று லைவில் மியூட் போட்டுவிட்டு இங்கே மனைவியை கொஞ்சியவன், பின் அங்கே கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்துக் கொண்டே இருந்தான்.
பெரிதாக எந்த மாற்றமும் கணவனிடம் அவளுக்கு இல்லை. அதே பாசமுள்ள நேசமுள்ள அன்பான கணவன் தான்..!
என்ன அவனுக்கான நேரம் தான் எங்களுக்கு கொடுக்க அவனுக்கு நேரமில்லாமல் போகிறது என்று வருத்தமாக எண்ணியவள், பின் அவனை ரசித்து பார்த்தாள் வெகு நாட்களுக்கு பிறகு.
விரிந்து பரந்த மார்பு.. குறுகிய வயிறு.. உருண்டு திரண்ட தசை கோலங்கள் என்று கட்டுக்கோப்பாக வைத்திருந்தான் நிரஞ்சன் இந்த வயதிலும் அவனது உடலை. ‘என் கணவன் ஆணழகன்.!’ என்று ஆசை அபரிமிதமாய் பொங்க மெல்ல தன் தளிர் விரல்களால் அவனது நெஞ்சை நீவினாள் வதனி.
அவளின் தீண்டலில் சிலிர்த்து போனான் நிரஞ்சன். வெகு நாள் கழித்து மனைவியின் நெருக்கம், நெருப்பாய் அவனுள் இறங்கி இரத்தநாளங்களை சூடேற்றி, அவனின் ஹார்மோன்களை எக்கி தப்பாய் எகிற செய்து மனைவியின் அங்கங்களை தின்று தீர்க்க ஏக்கம் கொண்டது.
“ஏன் டி ஏன்? இன்னைக்கு எனக்கு ஆஃபிஸியல் லைவ் டி. நார்மல் லைவ் விட இதுல டபுள் பங்கு பணம் கிடைக்கும். இன்னைக்கு தான் எனக்கு அலாட் பண்ணி இருக்கான். இன்னைக்குனு பார்த்தா நீ என் கிட்ட வருவ..?” என்று ஏக்கமாய் மனைவியை பார்த்தவன் மனைவியின் ஆப்பிள் கன்னத்தை நிமிண்டினான்.
“அப்போ நீங்க லைவ் போங்க.. நான் தூங்க போறேன்..” என்று என்று சென்ற மனைவியை ஏக்கத்தோடு பார்த்தவன், பின் தன் கவனத்தை இங்கே திருப்பி விட்டான்.
