கள்வன் 10
"பொருள் எனக்கு!!
பொண்ணு உனக்கு!!"
தன் கையில் வைத்திருந்த எதிராளி போட்ட பேக்கை திறந்து பார்த்து அதில் இருக்கிறது பணம் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவன், அதை தன் தோளில் மாட்டிக்கொண்டு, தன் பின்புறம் பயத்தில் மறைந்து நின்றிருந்த வாஹினியை பிடித்து அவர்கள் முன்னே தள்ளி இவ்வாறு கூறினான்.
என்ன?? என்ன நடக்கிறது இங்கே?? அவன் என்ன சொல்கிறான்? என்று எதுவும் புரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை என திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள் வாஹினி.
தன் கண்கள் பார்த்தது மெய்யா??
தன் காதுகள் கேட்டது உண்மையா??
இல்லையில்லை…
கண்களால் பார்ப்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்!
தீர விசாரிப்பதே மெய்!!
ஆனால் யாரிடம் விசாரிக்க? என்னவென்று விசாரிக்க? என்று புரியாமல்.. தன் முன்னே நடந்த நிகழ்வுகளை நம்பமுடியாமல்.. ஸ்தம்பித்து சிலை என சமைந்து நின்றாள் வாஹினி!!
அவள் மட்டுமே சிலையெனச் சமைந்து நின்றிருக்க.. அவளை அவர்களிடம் தள்ளிவிட்டவனோ, தன் ஒற்றை விரலில் பைக் சாவியை சுழற்றியபடி, மறுகையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு விசில் அடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றான்.
சென்றுவிட்டானா?? சென்றே விட்டானா?? என்னை இந்த கயவர்களிடம் விட்டுவிட்டு.. அப்பொழுது இதுநாள் வரை அவன் காட்டிய அந்த அன்பு.. உரிமை.. எல்லாம் பொய்யா??
ஆம்!! நெற்றியில் அறைந்த மாதிரி உரைத்த உண்மை அவளால் தாள முடியவில்லை.
"உன்னை பேக் செய்து அனுப்பனும்!! பேக் செய்து அனுப்பனும்!!" என்று சொன்ன போதெல்லாம் என் வீட்டுக்கு என்று நினைத்தேனே.. இப்படி கயவர்களிடம் என்னை அனுப்பி அதற்கு ஈடாக பேக் ஃபுல்லா மணி வாங்க தானா? அப்படி என்றால் என்னை விற்று விட்டானா அவன்?? அடர் அமிலங்களை உடலில் ஊற்றியது போல தகித்து எரிந்தது அவளுக்கு!!
இந்த பணத்தை நான் கொடுத்து இருந்தால்.. என் கீழ் நாயாக இருந்து இருப்பானோ? நான் செய்யும் ஏவல்களை செய்துகொண்டு நான் தூக்கிப் போடும் எலும்புத் துண்டுகளுக்கு வாலை ஆட்டியபடி என்னை சுற்றி சுற்றி வந்து இருப்பானோ??
அப்போ பணம் தான் பிரதானமா?
மனம் இல்லையா?
நேசம் இல்லையா?
காதல்.. காதல்.. அதை நினைக்கவே பயந்தது மனது அவளுக்கு!!
இவனை நம்பி மோசம் போனமே!! அப்பா சொன்ன என்றோ ஒரு நாள் இவனோடு இருந்த நாளாக எண்ணியது எவ்வளவு மாபெரும் தவறு?? இன்னும் எனக்கு மனிதர்களைப் எடை போட தெரியவில்லையே?? இவனது போலியான பாசத்தை உண்மை என்று நம்பினேனே.. ஆனால் போலியாக தான் நடித்தானா?? அப்படியெனில் நேற்று இரவு அவன் என்னிடம் குழைந்தது.. சரசம் கொண்டாடியது.. அதுவும்கூட இந்நடிப்பின் ஒரு பாகமோ??
மனது முழுக்க ரணமாக இருந்தது. இந்த கணத்தை தாங்க முடியாது தவித்தது!!
"இது எல்லாம் பொய்!! உண்மை இல்லை பால் டப்பா.. பயந்திட்டியா?" என்று ஓடி வந்து தலையில் இரண்டு கொட்டு கொட்டி தோளோடு அணைத்து, நான் தேடும் அந்த ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட மாட்டாயா? என்று ஏக்கம் கொண்டு, சென்றவன் முதுகையே பார்த்திருந்தாள் பாவை!!
எத்தனை பெரிய துரோகம்??
ஆனாலும் இந்த காதல் பைத்திய மனது.. இன்னும் அவனை நம்பி கொண்டு.. அவன் பார்வைக்காக ஏங்கிக் கொண்டுதானே இருக்கிறது!!
இல்லை!! இல்லை!!
ஒன்றுமில்லை!!
அவன் மீது கொண்ட அன்பில்லை!!
அவன் மீதான நேசம் இல்லை!!
அவனுடனான காதல் இல்லை!!
மொத்தத்தில் அவனே இல்லை!!
அணை உடைத்து வெளிவர தயாராக இருந்த கண்ணீர் வெள்ளத்தை ஒரு பெருமூச்சுடன் உள்ளுக்குள் இழுத்து அடக்கி கொண்டாள். ஆனால் கண்கள் கலங்கி அவன் செல்வது இரட்டை பிம்பமாக தெரிந்தது.
நான் சாதாரண பெண்ணில்லை!!
ரெட்டி வம்சத்தின் இளவரசி!!
வருங்கால பெண்ணரசி!!
"இதற்கு எல்லாம் கலங்கி உடைந்து போக கூடாது!!
அப்படி என்னை மீறி என்னதான் நடந்துவிடும் பார்த்துக்கொள்ளலாம்" என்று சட்டென புறங்கையால் ஒரு துளி வெளிவந்த நீரை துடைத்தவள் ஜித்து சென்ற, எதிர் புறம் திரும்பி நின்று அந்த கயவர்களை தான் கண்களில் கனல் கொண்டு பார்த்தாள்.
"என்னடா அம்மாயி கண்ணுலே கனல கக்குறா?? அச்சோ.. பயமா இருக்கே!!" என்று அவளிடம் தெலுங்கில் நக்கல் அடித்தான் அவரக்ளில் ஒருவன்.
பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் பல மொழிகளை அறிந்து வைத்திருப்பது நியாயம்தானே என்று இகழ்ச்சியாக வளைந்தது வாஹினியின் இதழ்கள்.
'சீ உன்னோட பேசுவது கூட என் தகுதிக்கு உகந்தது இல்லை!' என்று அவர்களை நக்கலாக ஒரு பார்வை பார்த்து இவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"இவ்வளவு அலட்சியம் உனக்கு ஆகாது. இப்போது நீ எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறாய் தெரியுமா? நாங்கள் நினைத்தால் உன்னை என்ன வேணாலும் செய்துவிடலாம்?" என்று மிரட்டினான் அவளின் அலட்சியம் கண்டு கொதி நிலையை அடைந்த ஒருவன்.
"அதானே!! வேறு என்ன செய்துவிட முடியும் உன்னை போன்றவனால்?? ஒரு பெண்ணை சிக்கவைக்க அவளது கற்பை மானத்தைப் பற்றி பேசி அவளது மனதை பலவீனப்படுத்தவதைத் தவிர.. வேறு என்ன புடுங்க முடியுமா உங்களால்?" என்று சற்று அலட்சியமாக கேட்டவள் ஒவ்வொருவரையும் விரலால் சுட்டிக் காட்டி.. பின்பு மொத்தமாக அனைவரையும் விரலையே ரவுண்டப் செய்து காட்டி "அல்லக்கைகள் டா நீங்க எல்லாம்!! வெந்து வேட்டு!!" என்றாள்.
"என்ன.. என்ன.. இதுவரை இருந்த பயம் விட்டு போச்சா?? நான் நினைச்சா.." என்று ஒருத்தன் எகிறி கொண்டு முன்னே வர..
"ஒரு மண்ணும் புடுங்க முடியாது!!
தன் தலைமுடியை தொட்டு காட்டியவள், "அதைக் கூட புடுங்க முடியாது டா!! நீங்க எல்லாம் வெறும் அம்பு. உங்களுக்கு மேலாக ஒருத்தன் இருப்பான் இல்லையா? அவன் கிட்ட கொண்டு போய் என்னை நீங்க முழுசாக நிறுத்தணும்! அப்படி நிறுத்தினால் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்.. இல்லேன்னா.." என்று நாக்கை வெளியே நீட்டி அவள் இறந்தது போல சைகை காட்ட..
அவள் சொல்வதும் உண்மை தானே! இவர்கள் எய்த அம்பு மட்டுமே.. எய்தவன் வேறு எங்கோ இருக்க, அம்பால் இலக்கை பதம் பார்க்க முடியுமே தவிர.. இலக்கை தாண்டி செல்ல முடியாது என்ற நிதர்சனம் புரிந்தாலும், அவர்களுக்குள் இவள் மேல் கோபம் கனன்றாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையை அறவே வெறுத்து.. அவளைத் தரதரவென்று இழுத்து அவர்கள் வந்த வண்டியில் பின்னிருக்கையில் தள்ளினர்.
அதேசமயம் ஜித்துவையும் வாஹினியையும் பின்தொடர்ந்து வந்த கர்னல் ஆட்கள்.. ஜித்து மட்டும் தனியாக திரும்பி செல்வதை பார்த்து.. கர்னலுக்கு உடனே தெரிவித்தனர்.
கர்னல்.. அவர்கள் எட்ட முடியாத தூரத்தில் அதாவது ஹெலிகாப்டரில் உயரே உயரே பறந்து கொண்டிருந்தார். அவரது அலைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்க.. இவர்கள் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் ஜித்து எதிரே வந்த திசையிலேயே வேகமாக தங்கள் காரை விரட்டியடித்தனர்.
என்ன விரட்டி அடித்து சென்றும் இவர்கள் அந்த இடத்தை சென்று சேரும் முன் வாஹினியை அழைத்துக் கொண்டு.. இல்லையில்லை கடத்திக் கொண்டு சென்ற அந்த வண்டிகளை பிடிக்க முடியவில்லை.
அதையும் வாட்ஸ்அப்பில் கர்னலுக்கு தகவல் அனுப்பிவிட்டு தாங்கள் நின்ற இடத்திலேயே என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்தவர்கள், ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று வாஹினியை கடத்தி சென்ற வாகனத்தின் டயர் பதிந்த பகுதியை தொடர்ந்து சென்றனர். அதுவும் ஒரு நால்ரோட்டில் சென்று முடிவடைய விழிபிதுங்கி நின்றனர்.
வாஹினியை ஏற்றி சென்ற வாகனம் அதி விரைவாக சென்று கொண்டிருந்தது. எவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டை தாண்டி அவர்களுடைய எல்லைக்குள் நுழைய முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் நுழையவேண்டும். ஒருபுறம் கர்னல் மறுபுறம் போலீஸ் என்று.. ஏகப்பட்ட கெடுபிடி.
அதையெல்லாம் தாண்டி தான் அவளை தொட வந்தார்கள் அன்று இரவில்.. அவளை காப்பாற்றியவனிடம் ஏற்கனவே டீலிங் பேசி ஆயிற்று என்று இவர்களின் தலை கூறியதால் தான் இன்று அடியாட்களை அனுப்பாமல் வேறு ஒரு டீம் மூலமாக வாஹினியே கவர்ந்து செல்ல வந்தது இந்த கலியுக ராவணனின் அசுரக் கூட்டம்.
கவர்ந்து சென்றவன் ராவணன் என்றால்.. அதற்குத் துணை புரிந்தவன் இவளின் ராமன் அல்லவா??
தன்னை மீறி உடைந்து விடக்கூடாது என்று வழிய இருந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு.. தன் இரு கைகளையும் தன் உடலோடு இறுக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் வாஹினி.
ஸ்ரீநிவாஸ் அடிக்கடி மகளிடம் செல்வது ஒன்று! "ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் அதிக குற்றவாளி!! அதிலும் நாம் ராஜவம்சம். மற்றவரை விட பல மடங்கு கவனம் தேவை ஒருத்தரை நம்புவதில்.. ஆட்களை எடைபோட தெரிந்திருக்கவேண்டும்! அவர்கள் எப்படி இருப்பினும் மனதே அவர்களை நல்லவர்கள் என்று நம்பினாலும்.. அறிவு அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளாது. நாம் மனது சென்ற வழியில் செல்ல முடியாது! கூடாது!! மதி சொல்கிற வழியில் தான் செல்ல முடியும்!! வேண்டும்!! ஏன்னென்றால் நீ சாதாரண பெண்ணல்ல.. இவ்வம்சத்தின் இளவரசி!!"
என்று எவ்வளவோ கூறுவார். அதையெல்லாம் தந்தையின் தோளில் சாய்ந்து அன்று கேட்டுக் கொண்டிருக்கும் போது பல விஷயங்கள் அவளுக்கு புரியாது. இன்று அனைத்தும் புரிந்தாலும்.. அதற்கு பலனில்லை!!
ஏமாந்து விட்டாள்.. நன்றாக ஏமாந்து விட்டாள்.. அதுவும் தான் அன்பு வைத்தவனாலே!!
யார் இவர்கள்? எதற்காக என்னை கடத்திக் கொண்டு செல்கிறார்கள்? பணத்திற்காக வா? சொத்திற்காக வா? எப்படி என்றாலும் என்னை மீட்க அம்மா சித்தப்பா அத்தை என்று ஒரு கூட்டமே இருக்கிறது. இவர்கள் இல்லை என்றாலும் கர்னல் அங்கிள் என்னை கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவார். அவருக்கு பயந்து தானே ஒரு போன் செய்யாமல் இருக்கும் இடத்தை கூறாமல் இந்த இரண்டு மூன்று நாட்களில் சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்போது சொல்லியிருக்க வேண்டுமோ??" என்று அவளது அறிவு இன்று அபரிமிதமாக வேலை செய்தது மனதிற்கும் சேர்த்து. காரணம் மனத்தை தான் ஒருத்தன் உடைத்து விட்டு சென்று விட்டானே!!
பறந்து சென்ற கார் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியவுடன் தான் அந்த கைகூலிகளுக்கு ஆசுவாச நிம்மதியே பிறந்தது.
அதேநேரம் கர்னல் தன் ஆட்களை அழைத்தார்.
அவர்கள் அந்த ஏரியாவையே சல்லடை போட்டு சலித்து கொண்டிருக்க.. ஆனால் கண்டிப்பாக இங்கு வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரியும். ஆனால் கர்னல் அவர்களிடமிருந்து எந்த உத்தரவும் வராமல் இங்கிருந்து அவர்களால் செல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
நேரம் கடக்க கடக்க அவர்கள் சொன்னதுபோல மேடம்க்கு தானே ஆபத்து அதிகம் அவர்களால். அவ்வளவு நம்பிக்கை வைத்த பெண்ணை விட்டு இவன் எப்படி தனியே சென்றான் என்று ஜித்துவை பார்த்ததிலிருந்து தங்களுக்குள் புலம்பிக் கொண்டே இருந்தார்கள்.
கர்னல் இடமிருந்து போன் வந்த பிறகுதான் பெரும் நிம்மதி "எஸ் கர்னல்!! நாங்க எங்க வரணும். வீ ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் கமெண்ட்!!" என்று அவர்கள் கேட்ட கேள்வியே தன் ட்ரைனிங் வீண்போகவில்லை என்று புரிவதாய் கர்ணனுக்கு.
கர்னலுக்குமே இன்னும் எதிரி இவன்தான் சரியாக சொல்ல கணிக்க முடியவில்லை. ஆனா தமிழ்நாட்டு எல்லையை தாண்டி ஒரு குறிப்பிட்ட இடத்தை சொன்னவர் அந்த இடத்திற்கு வந்துடுங்கள் என்றார்.
அவரின் பறக்கும் படையோ பறந்து தான் சென்றது தங்கள் இளவரசியை மீட்க…
மீட்க வேண்டியவன் மீட்பானா?
அல்லது மீளா துயரில் ஆழ்த்துவானா??
கார் நின்றாலும் அதிலிருந்து இறங்காமல் அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு ஏதோ சத்தம். அதுவும் அது.. அது.. ஜித்துவின் குரல் தானே!!
ஓஓ.. வந்துவிட்டனா?? எனக்காக வந்துவிட்டானா?? என்று உள்ளே ஒரு நப்பாசை ஓடினாலும், நினையாத மனமே!! அப்படி நினையாதே!! ஏற்கனவே ஒரு முறை பொய்த்து விட்டான்!! என்று அமைதியாக கண்களை மூடி அமர்ந்து இருந்தாள்.
வந்திருந்தது என்னவோ ஜித்துதான்!!
சண்டையிட்டது என்னவோ ஜித்துதான்!!
ஆனால் அந்த சண்டை அவளுக்காக இல்லை பணத்திற்காக..
அதுவும் தன்னிடம் பேக் தூக்கி போட்டவனை அப்போதே அவனுக்கு பிடிக்கவில்லை அவனுக்கு. "வருகிற மகாலட்சுமி கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேணாம்!! பாரு போக்கத்த பயல.." என்று திட்டி கொண்டே தான் வந்திருந்தான். இப்போது அவனைத்தான் பந்தாடி.. அவன் மேலேயே அமர்ந்து கழுத்தில் தன் கையில் வைத்திருக்கும் சிறு கத்தியை சரியாக அவன் தொண்டைக்குழியில் ஒரே ஒரு துளி ரத்தம் வரவைத்திருந்தான். பயத்தில் அனைவரையும் எட்டி நிறுத்தி இவனிடம் டீல் பேசி கொண்டிருந்தான்.
"உன்கிட்ட என்ன கேட்டேன்!!" என்று ஆரம்பித்தான் ஜித்து.
"பணம் கேட்ட.. அவளை கொண்டு வந்து விடுவதற்கு!!"
"மரியாதை.. மரியாதை..!!" இப்பொழுது கத்தி சற்று அழுந்த..
"பணம் கேட்டீங்க.. அவங்களை கொண்டுவந்து விடுவதற்கு..!!"
"கேட்டனா..?!"
"ம்ம்ம்..!;"
"நீ கொடுத்தியா..??"
"ம்ம்ம்..!!"
"எவ்ளோ கொடுத்த..??"
"நீங்க எவ்வளவு கேட்டீங்களா அவ்ளோதான் கொடுத்தேன்..!!"
"டேய்!!! உலகத்துக்கே இந்த காமெடியை சொன்னவங்க நாங்கடா.. என் கிட்டே வா டுபுக்கு.. ஒரே அழுத்து அழுத்தினேன் நீ பரலோகத்துக்கு பார்சல் ஆயிடுவ..!!"
அவனும் ஏற்கனவே துளித்துளியாய் தொண்டைக்குழியில் இருந்து ரத்தம் வருவதை உணர்ந்து பயத்தில் உறைந்து தான் இருந்தான்..
"சொல்லுடா உன்கிட்ட நான் கேட்டனா இல்லையா? எவ்வளவு கேட்டேன்?!"
"நீங்க கேட்ட ஒன்ற கோடி ரூபா தான் கொடுத்தாச்சு தானே..!!"
"ஆனா நான் கேட்டது இந்திய ரூபாயில் இல்ல டா.. அமெரிக்க டாலரில்.."
"என்னது அமெரிக்க டாலர்லா??" என்று அவன் ஏகமாய் அலற..
"ஆமா அதனால திரும்பவும்.. பொண்ணு என்னுது!
பொருள் உன்னது!! பொருளை கொடுத்துட்டு பொண்ண வாங்கிட்டு போ சரியா?" என்று அவன் எழ..
அவனை எழ முடியாதபடி அடிக்கத்தான் ஆசை இவனுக்கும். ஆனால் அது முடியாது என்பது கண்முன்னே நடந்த நிதர்சனம்.
அவனும் சிரமப்பட்டு எழுந்து "நில்லு.. நில்லு!! இப்ப என்ன உனக்கு பணத்தை அமெரிக்க டாலர்ல தரணும்! அவ்வளவுதானே? இரு நான் எங்க பாஸ் கிட்ட பேசி உனக்கு வாங்கி தரேன்" என்றான்.
"நீ போ.. உனக்கு சேரவேண்டியது வந்து சேரும்!!" என்று அவன் கூறி மழுப்ப..
"ஹா.. ஹா.. ஹா.. ஹா.." என்று கடகடவென சிரித்தவன் "என் நெத்தியில் பார்த்தால் கேணையனு எழுதி ஒட்டி இருக்கா என்ன?" என்று அவன் முன்னே குனிந்து தன் நெற்றியை காட்டியவன்..
"இப்போ அந்த பொண்ண நீ உன் பாஸ் கிட்ட தான் கூட்டிட்டு போறேனு எனக்கு தெரியும். அங்கு என்னையும் கூட்டிட்டு போ இல்லையா பொண்ண நான் கூட்டிட்டு போறேன் நீ பணத்தோட வந்து கூப்பிட்டுக்கோ" என்று அவன் நகர..
"இல்லையில்லை.. வா வா ஒன்னையும் சேர்த்தே அழைச்சிட்டு போறேன்" எங்கே இந்த பொண்ணை தவறவிட்டால் மீண்டும் பிடிக்க முடியாது என்ற பயம் அவனுக்கு. ஏற்கனவே இரண்டு மூன்று முறை தவறவிட்டு பாஸிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது வேறு. ஏதோ ஜித்து காசு பேராசை பிடித்தவன் அதேசமயம் திறமையும் இருந்ததால் இப்பொழுது வாஹினி அவர்கள் கையில் இல்லை என்றால்.. எப்போது கர்னல் உள்ளே நுழைந்தாரோ அப்போது இவர்கள் ஆட்டம் ஆட்டம் கண்டிருக்கும்.
சரி சரி என்று அவனையும் அழைத்துக் கொண்டு செல்ல சம்மதம் தெரிவித்தனர்.
இரு கண்களை மூடி கைகளை இறுக பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தவள் ஜன்னல் புறம் குனிந்து மெதுவாக ஜன்னல் கதவை தட்ட.. சட்டென்று புருவம் சுருங்கினாலும்.. அவன் தான் என்று இவளுக்கு தெரிந்தாலும்.. கண்களை திறக்கவில்லை. இவனே முன்பக்கம் இருந்த சென்ட்ரல் லாக்கிலிருந்து ஜன்னல் கதவைத் திறந்தான்.
சட்டென்று முகத்தில் அடித்த தென்றலில் கலந்து வந்தது ஜித்துவின் ஆண்மை வாசம்!!
அதை ஆழ்ந்து சுவாசித்தவாறு நெஞ்சு முழுக்க நிறைத்தவள் உணர்ந்தது என்னவோ அவன் செய்த மோசம்!!
"என்ன பால் டப்பா ரொம்ப பீலிங்கா இருக்கிறியா.. இந்த ஃபீலிங்ஸ்க்கு எல்லாம் வொர்த்தான ஆளு நான் கிடையாது சரியா?" என்றவன் அவள் புறம் கதவை திறந்து அவளை இறக்கியவன் கையை பிடித்து நடந்தான் அவள் திமிற.. திமிற..
"நான் ஒன்னும் நல்லவன் எல்லாம் இல்லை பால் டப்பா!! திருடன்!! பக்காத்திருடன்!! நமக்கு வேண்டியது காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி அவ்வளவே தான்!!" என்று தோள் குலுக்கி கூறியவனை கன்னம் கன்னமாக அறையும் வேகம் வந்தாலும் அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை வாஹினி.
"ஸ்ஸஸ்ப்பபா.. பார்க்க முடியல! பால் டப்பா பயங்கர கோபத்தில் இருக்குது போல!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அவள் உடனே நடந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.
"என்ன வீட்டுக்குள்ள உங்க பாஸ் வைத்துவிட்டுத்தான் வெளியிலே என்கிட்ட அவ்வளவு பேரம் பேசுனியா?" என்று இவன் எகத்தாளமாய் கேட்டான்.
"எங்க பாஸ் இங்க இல்லை!" என்று ஜித்து மற்றும் வாஹினி இருவர் கண்களையும் கட்டி ஒரு லிஃப்ட் உள்ள அழைத்து செல்ல.. எப்பொழுதும் லிஃப்ட் மேலும் கீழும் தான் செல்லும். இதுவோ பக்கவாட்டில் செல்வது போல் தோன்ற.. "என்னங்கடா.. புதுசு புதுசா ஜேம்ஸ்பாண்ட் படம் காட்டுறிங்க? டேய் என்ன பத்தி தெரியாது!! எக்குத்தப்பா என் மேல கை வச்சா ஒரு படையே வரும் சொல்லிட்டேன்!!" என்று வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான் இவன்.
'இவன் கண்ணை கட்டுவதற்கு பதில் வாயை கட்டி இருக்கலாம்!' என்று அவர்களே புலம்பும் அளவுக்கு இருந்தது அவனது வார்த்தைகள்!!
ஒருவழியாக இவர்கள் வேறு ஒரு இடத்திற்கு லிஃப்டிலேயே கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் பயணம் செய்து வந்திருந்தனர்.
உள்ளே நுழைந்தவுடன் புதுவித நறுமணம். பக்கத்தில் ஏதேனும் பூந்தோட்டம் இருக்குமோ? என்று கண்ணைக் கட்டி இருந்தாலும் தன் காது மூக்கு என்று மற்ற புலன்களை தீட்டி யோ
சித்துக் கொண்டே வந்தாள் வாஹினி.
மீண்டும் ஒரு பத்து நிமிட நடைக்குப் பின் ஒரு அறையில் இவர்களை நிற்க வைத்தார்கள்.
"வாங்க வாங்க இளவரசி!!
ரெட்டி வம்சத்தின் பெண்ணரசி!!"
என்று இவர்களை வரவேற்றான் ஸ்ரீவத்ஸவ் ராஜூ.
வாஹினியின் அத்தை மகன்!!!
