5
அன்று..
காலையிலேயே எழுந்து பரபரவென்று வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள் மேகவதனி.
இன்று அவளின் நாத்தனார்கள் ஆரத்தி மற்றும் நளினா விடுமுறைக்காக பிள்ளைகளோடு வர இருக்கிறார்கள்.
பெரியவள் ஆரத்திக்கு இரண்டும் பெண்கள் பன்னிரெண்டு பத்து வயதில்..
இளையவள் நளினாவுக்கு பத்து வயதில் மகனும் ஏழு வயதில் மகளும் உள்ளனர்.
“வதனி எல்லாம் ரெடி ஆயிடுச்சா? பொங்கல் மட்டும் இருக்கு? கொஞ்சம் வடையும் போட்டுடு நளினாவுக்கு பொங்கல் சாம்பாரோட வடை சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்குனு சொல்லுவா.. அப்புறம் அந்த கிச்சடியில் கேரக்டர் பீன்ஸ் பொடி பொடியா நறுக்கி போடு இல்லைன்னா.. ஆர்த்திக்கு தொண்டையில் இறங்கவே இறங்காது..! ஸ்வீட்டுக்கு பைனாப்பிள் கேசரி பண்ணிட்டியா? என் பேரனுக்கு அதுதான் ரொம்ப பிடிக்கும். பூரிய மாப்பிள்ளைகள் இங்க வந்தவுடன் சூடா போட்டுக்கலாம்.. கிழங்கு இவ்வளவு காரமா இருக்கு.. ரெண்டு பச்சை மிளகாய் கம்மியா போட்டா தான் என்ன?” என்று வதனி சமைத்து வைத்த பதார்த்தங்களை மேற்பார்வையிட்டு அதன் குறைகளை மட்டும் பட்டியலிட்டு கொண்டிருந்தார் பிரேமா.
அதுமட்டுமல்ல நேற்றிலிருந்து வீட்டு இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து துடைத்து பிள்ளைகள் படுக்க வேண்டுமென புதிய பெட்ஷீட் தலையணை மெத்தை என்று வாங்கி வரச் செய்து.. அதனையும் இரண்டு நாள் முன்னாடியே வெயில் நன்றாக காய வைத்து அதற்கு போடும் உரைகள் மெத்தை விரிப்புகளென அனைத்தையும் துவைத்து டெட்டாலில் நனைத்து காயவைத்து எடுத்து வைத்தாயிற்று.
இத்தனையும் தொய்வு இல்லாமல் சேர்ந்து கொண்டே இருப்பவளை ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பதே பிரேமாவின் பொழுதுபோக்கு இரண்டு நாட்களாக..!
“பக்கத்துல தான் இருக்காங்கனு பேரு ரெண்டு பொண்ணுங்களும்.. ஆனா எப்போதாவது இந்த மாதிரி வந்து தங்குறாங்க.. அவங்க தங்குறத்துக்கு நம்ம பார்த்து செய்யணும்மா இல்லையா?” என்றவர்,
“அவங்களுக்கு மாளிகை போல அங்கே வீடு இருந்தாலும் அவ்வளவுக்கு வேலையும் இருக்கும். எங்கே பொறந்து வீடுனு வந்து ஆசுவாசமா இருக்க முடியுது? ம்ஹீம்..” என்று சொல்லும் பிரேமாவின் இரு பெண்களும் மாதத்துக்கு ஒரு முறை இவ்வாறு தங்களை அசுவாசப்படுத்திக் கொள்ள இங்கு வந்து விடுவார்கள். ஆனால் அந்த மாதிரி ஒரு நிலை கூட மேகவதனிக்கு இல்லை.
அவளுக்கும் அன்பான பெற்றோர் உண்டு..! பாசத்தில் போட்டி போடும் தம்பியும் உண்டு..! ஆனால் காதல் படுத்திய பாடு அவளை இப்பொழுது இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
வீட்டுக்கு தெரியாமல் செய்து கொண்டு திருமணத்தினால் பெற்றவர்களை கூட பிறந்தவனை சென்று பார்ப்பதில்லை.
ஒரே ஊரில் இருந்தாலும் அரிதிலும் அரிதாக ஏற்படும் சந்திப்பு நேரங்களில் கண்களில் பாசத்தை தேக்கி இவள் பார்த்தால்.. அவர்களோ கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.
துக்கம் தொண்டை அடைக்கும்..! செய்த தவறு அவள் நெஞ்சை கிழிக்கும்..! பிரிவு துயர் அவளை வாட்டும்..!
ஆனாலும் பாசத்துக்கு ஏங்கும் சவலைப் பிள்ளையாக அவர்கள் சென்ற பின்னும் கலங்கிய கண்களோடு அவர்கள் சென்ற பாதையை பார்த்துக் கொண்டே வெகு நேரம் நிற்பாள்.
ஆதவ் தான் ஆதரவளித்து “கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும் மேகா” என்று சமாதானப்படுத்துவான்.
அந்த சீக்கிரம் 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிட்டவே இல்லை.. மேகவதனிக்கு..!
ஒருவேளை தானும் அம்மா அப்பா சம்மதத்தோடு திருமணம் செய்து இருந்தால்.. இதுபோல் ஏக வரவேற்பு கிடைத்திருக்கும் அல்லவா? அம்மா வீட்டில் நாம் சீராடவும்.. பாசத்தோடு அவர்களிடம் அளவளாவும் முடிந்திருக்கும் அல்லவா? என் பொண்ணையும் பேத்தி என்று அவர்களும் தாங்கி இருப்பார்கள் அல்லவா? இன்று ஆதவ் தன் சகோதரிகளின் பிள்ளைகளுக்காக செய்யும் அனைத்தையும் என் தம்பியும் என் மகளுக்கு செய்திருப்பான் அல்லவா?
என்று எண்ணங்கள் தறிகெட்டு போக.. கலங்கி வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே காலை வேலை முடித்து குளித்து ப்ரஷாகி வந்தாள்.
இல்லையென்றால் பிரேமா “என் பிள்ளைகள் வரும்போது இப்படி தான் அழுது வழிஞ்ச முகத்தோட வருவியா? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்று அதற்கும் எண்ணெயிலிட்ட கடுகாய் பொரிந்து தள்ளுவார்.
அதனால் வேக வேகமாக குளித்து மிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்தாள்.
வந்தவர்களை அன்பாக வரவேற்று அவர்கள் விரும்பும் வண்ணம் தண்ணீர் டீ காபி எல்லாம் கொடுத்து உபசரித்து பின் காலை சாப்பாடு தடுபுடல் பட்டது.
அன்று வந்தவர்களை வரவேற்று “எனக்கு முக்கியமா ஒரு மீட்டிங் இருக்கு” என்று அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டான் ஆதவ் நிரஞ்சன்.
வதனி வந்தவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் போது பெண்களோ “அம்மா நீயும் எங்களோட உக்காந்து சாப்பிடு” என்று அன்பு கட்டளையிட,
பிரேமாவும் அதில் உச்சி குளிர்ந்து போய் விட்டார். முதலில் பிள்ளைகள் அடுத்து அவர்களின் கணவர்மார்கள் அதன் பின் நாத்தனார் மாமியார் என்று மாறி மாறி பரிமாறிக் கொண்டே இருந்தாள் வதனி.
“வேலைன்னு வந்துட்டா இந்த பையன் சாப்பிட கூட மாட்டான் அதுலயே பிசியா இருப்பான். நீ மொதல்ல போய் அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வா” என்று விரட்டி விட்டார்.
“இதோ அத்த..” என்றவள் எல்லா உணவு பதார்த்தங்களையும் சிறிது சின்ன கிண்ணத்தில் வைத்து அதை ஒரு தட்டில் வைத்து ஸ்பூன் போட்டு கொண்டு வந்து கணவனுக்கு முன் வைத்து கை காட்டி விட்டு மறுபடியும் இவர்களுக்கு பரிமாற வந்தாள்.
அதற்குள் ஒரு ராமாயணமே பாடி முடித்து விட்டனர் மகள்கள் இருவரும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஊறுகாவாய் மேகவதனியை பற்றியும்..!
அதெல்லாம் அவள் காதில் விழுந்தாலும் காதல் வாங்காதது போலவே நடந்து கொண்டாள்.
ஆனாலும் நளினா சும்மா இராமல் “எங்க அம்மா உன்னை எப்படி வச்சிருக்காங்க.. இப்படி நல்ல புடவை கூட எங்க வீட்டில கட்ட முடியாது தெரியுமா? எங்க அம்மா உன்னை அப்படி பார்த்துக்குறாங்க.. ஒன்னுமில்லாம வந்தவனு இல்லாம.. நகை நட்டு பட்டுனு வாங்கி கொடுத்து நல்லாவே வச்சி இருக்காங்க.. உன் அலங்காரத்துக்கே ஆதவ் தனியா சம்பாதிக்கணும் போலவே” என்று குத்தலாய் பேச..
ஆரத்தியும் “ம்ஹீம்.. எங்க வீட்ல எல்லாம் இப்படி முடியவே முடியாது..! வீட்டு பொண்ணுக்கு எதுக்கு இவ்வளவு அலங்காரம்னு ஏசுவாங்க.. ம்ஹீம்..” என்று மாறி மாறி பேச அவர்களுக்கு முன்னால் மூச்சு கூட சீராக விட முடியாது திணறினாள் மேகவதனி. அவ்விடம் விட்டு உள்ளே செல்லவும் முடியாது.
அதற்கும் ஒரு பாடம் ஆரம்பிப்பார்கள் இருவரும்..! மூக்கை சிந்துவார்கள்..!
“அம்மா.. நாங்க வந்தது அவளுக்கு பிடிக்கல. எங்க கூட அவளுக்கு பேச பிடிக்கல.. அதனால மூஞ்ச சுழிச்சிட்டு உள்ளே போய்ட்டா.. இவ இப்படி இருந்தா எங்களால எப்படி இங்க இருக்க முடியும்.. எங்களுக்கு அம்மா வீடும் இனி இருக்காது போல..!” என்பது போல பேச்சுகள் அணிவகுத்து வரும்.
அதனால் “அவர் கூப்பிடுற மாதிரி இருக்கு.. என்ன வேணும் கேட்டுட்டு வந்திடுறேன் அண்ணி” என்று வேகமாக சென்றவள் தங்கள் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள், கணவனுக்கு முதுகு காட்டி..! கண்கள் கலங்க.. உதட்டை பற்களால் கடித்து அதனை அடக்கியப்படி..!
“என்னாச்சு மேகா?” என்று கேட்ட கணவனிடம் அவள் ஏதும் பேசவில்லை. ஆனால் அவளது கலங்கிய கண்கள் ஆயிரம் பேசின..!
சட்டென்று அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து அணைத்தான் ஆதவ் நிரஞ்சன்.
“ஸ்ஸ்.. விடுங்க.. எல்லோரும் வெளியில இருக்காங்க” அவள் திமிறினாள், அவன் கையில் காலையில் அவள் கொடுத்த டிபன் இருந்த தட்டு இருக்க..
“ஊட்டி விடுடி..” என்றான் அவள் நெற்றி முட்டி.
அவனை முறைத்தவள், “அதெல்லாம் முடியாது போ யா..” என்று முறுக்கி கொண்டாள்.
“சரி வா.. நான் உனக்கு ஊட்டுறேன்..” என்று அவளை இழுக்க..
“வேணாம்.. வேணாம்.. நாம தனித்தனியா சாப்பிடலாம்..” என்று அவள் அவன் கையில் இருந்ததைப் பிடுங்கினாள்.
“அதுக்கு நாம டைனிங் டேபிளில சாப்பிட்டு இருக்கலாமே.. இங்க.. நாம இப்படித்தான் சாப்பிடணும்..” அவனது கை அவளது கன்னத்தை வலிக்க கிள்ளியது. பின் அந்த பட்டு கன்னத்தின் மென்மையை விட்டு விலக மனமின்றி அங்கேயே நங்கூரமிட..
“ஸ்ஸ்ப்பா.. வலிக்குது.. இருங்க ஊட்டி விடுறேன்.. கைய எடுங்க..” என்றவள் அவனுக்கு ஊட்ட ஏதுவாக திரும்பினாள்.
அவனும் கையை எடுத்துவிட்டு அவளை திருப்பி நிறுத்தினான். வதனிக்கு கணவனிடம் பிடித்ததே இதுதான்.
அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன்..! அவள் கலங்கும் போது அணைத்துக் கொள்பவன்..! அவளின் தேவைகளை சரி வர புரிந்துக் கொள்பவன்..!
அவர்களின் அந்தரங்க நேரத்தில் கூட ‘என்னைத் தொடாதிங்க.. இப்ப வேணாம்..!’ என்றால் தொடமாட்டான்.. எவ்வளவு உணர்வின் படியில் அவன் இருந்தாலுமே..!
என்னதான் இருந்தாலும் தன் பொண்டாட்டி தானே என்ற உரிமை மீறல் எல்லாம் கிடையாது. எப்போதும் புரிதலுடன் தான் நடந்துகொள்வான்.
அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்.. எத்தனை பேர் என்னைச் சுற்றி இகழ்ந்தாலும்.. அரணாய் தாங்கி கொள்ள கணவன் இருக்கும் போது என்ன கவலை? என்ற புன்னகையோடு அவனுக்கு உணவினை எடுத்து ஊட்டிவிட்டாள். அவளது நீளமான அழகான விரல்களை அவனது உதடுகளும் நாக்கும் உரசின. அவளுக்கு கூச்சமாய் இருந்தது.
“உஷ்.. வெளியில் எல்லோரும் இருக்காங்க.. என்ன காரியம் செய்றிங்க.. ஒழுங்கா சாப்பிடுங்க” என்றவளது கண்களையே காதலாக பார்த்தான் நிரஞ்சன். அவன் பார்வையின் வீச்சை தாங்க இயலா தத்தையவளுக்கோ நாணம் ஒட்டிக் கொள்ள தலை குனிந்தபடியே அவனுக்கு ஊட்டிலானாள்.
நான்கு வாய் ஊட்டியபிறகு நிரஞ்சன் அவள் கரத்தை பிடித்து தடுத்தவன், கொஞ்சம் உணவினை எடுத்து அவளது வாயருகே கொண்டு சென்றான். “ஆ.. காட்டு மேகா..” என்றான் அதி அன்போடு.
“ம்ஹூம். வேணாம்..”
“எல்லாத்தையும் எனக்கே கொடுத்துட்டு நீ சாப்பிடாம இருக்கப் போறியா? ஆ.. காட்டு டி. அங்க போய் நீ ஒழுங்கா சாப்பிட மாட்ட.. அதான் மீட்டிங்கனு நான் இங்க வந்தேன்..” என்றவனை அவள் அதிர்ந்து விழி விரிய பார்க்க..
சட்டென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். “ஆஆ காட்டுடா செல்லம்.. உனக்கு ஊட்டிவிடணும்னு எனக்கு ஆசை.. சாப்பிடு.. மொதல்ல..”
மேகவதனி பெரும் உணர்ச்சி பெருக்கில் ஆட்கொண்டவள், சட்டென்று அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.. வன் அழுத்தமாக..!!
“ஹே.. மேகா.. என்னாச்சு.. இப்போ ஆ காட்டப்போறியா? இல்லையா? ஏய்.. ஏய்.. என்ன டி பண்ணுற?” என்று அவன் நெஞ்சில் அவள் முகத்தை தேய்க்க.. கூச்ச மிகுதியில் தத்தளித்தான் தலைவன்.
இதோ இவனின் இந்த அன்பு தான் அனைத்து வலியையும் தாங்க வலு தருகிறது..! இவனின் அளவில்லா காதல் தான் அனைத்து சோதனைகளையும் தூசி போல தட்டி விட முடிகிறது..! என்று கணவன் மீது கண்டப்படி காதல் பெருக.. மீண்டும் அவன் நெஞ்சில் தன் முகத்தை தேய்க்க..
“ஏய்.. என்னடி பண்ற? சட்டை கசங்குது டி..!” என்றவன் அவளை விலக்க முடியாமல் தவிக்க..
“ம்ம்.. பரவால்ல.. வேற சட்டை போட்டுக்கோங்க” என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு மீண்டும் அவள் முகத்தை அழுத்தி அவன் நெஞ்சோடு புதைத்துக்கொண்டாள் பாவை.
