2
இன்று…
போனில் செட் செய்து வைத்திருந்த அலாரம் தொடர்ந்து அடித்தபடி இருக்க அலுப்போடு கைகளை நீட்டி அதை அணைத்து வைத்தான் நிரஞ்சன்.
மெல்ல எழுந்து பார்க்க மணி 8 ஆக இருந்தது. ஒரு பெருமூச்சோடு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு அவன் வெளியே வர.. பிரேமா சோபாவில் அமர்ந்து அமைதியாக டீ பருகி கொண்டிருந்தார்.
“டீ குடிக்காதீங்கன்னு சொல்லி இருக்கேன் தானே? கொஞ்சம் வெயிட் பண்ணுனா வந்து சத்துமாவு போட்டு தர மாட்டேனா?” என்று கேட்டவனை திரும்பி கூட பாராமல் அமைதியாக குடித்துக் கொண்டிருந்தார்.
இப்போது எல்லாம் பிரேமா அதிகம் பேசுவதே இல்லை..! யாரிடமும்.. குறிப்பாக அவரின் அன்பு மகன் ஆதவ்விடம்..!
மீண்டும் ஒரு பெருமூச்சு அவனிடம்..! மெல்ல சமையலறை நோக்கி சென்றான்.
நேற்று இரவு சமைத்து வைத்தது அப்படியே இருந்தது. அதிலிருந்து அன்னை உண்ணவில்லை என்பது புரிய..
“நேத்து நைட்டும் சாப்பிடல.. இப்பவும் காலைல வெறும் வயித்துல டீ. சொன்னாலும் கேட்பதில்லை” என்று தலை உலுக்கி கொண்டவன் வேக வேகமாக சமையலறையை ஒதுங்க செய்து பாத்திரங்களை சிங்கில் போட்டு கழுவ ஆரம்பித்தான்.
கடந்த இரண்டு மாத காலத்தில் ஓரளவு சமையல் அத்துபடி. வெளியில் மாவு வாங்கி வைத்து இட்லி தோசை.. வாயில் வைக்கும் படியான சாம்பார்.. ஏதோ கொஞ்சம் தேங்காய் சட்னி அவ்வப்போது காரமாக பூண்டு சட்னி என்று..!
மதியத்திற்கு ரைஸ் குக்கரில் உணவு.. மனைவி என்றோ கத்துக் கொடுத்த இமிடியேட் வத்த குழம்பு ரசம் தயிர் அவ்வளோ தான். காய்கறி எல்லாம் சுத்தமாக செய்ய தெரியாது. அவ்வப்போது முட்டை மட்டும் அதுவும் அம்மாவிற்கு..!
அவர் சாப்பிடுகிறாரா? என்ன சாப்பிடுகிறார் என்பதே தெரியாது. இவன் வேலையிலிருந்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது. சில சமயம் உணவு இல்லாமல் இருக்கும். சில சமயம் அப்படியே இருக்கும். அவரிடம் கேட்கவும் முடியாது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்…
அக்காக்கள் இருவர் அவ்வப்போது வந்தாலும் பொதுவான பேச்சு கூடவே பிரேமாவுக்கு பிரஷர் சுகர் இருப்பதால் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று மட்டும் அழைத்து வந்திடுவர். அதற்கு மறக்காமல் தம்பியிடம் பணமும் வாங்கிக் கொள்வார்கள். கூடவே அவர்கள் வருவதற்கு போவதற்கு என்று அந்த செலவு தனி..!
‘ஆண் பெண் சமம் என்கிறோம்..! சமத்துவம் பேசுகிறோம்..! ஆனால் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள மட்டும் இந்த அக்காளுங்களுக்கு ஏன் மனமே வர மாட்டேங்கிறது? அம்மாவுக்கு மருத்துவ செலவு தம்பி கொடுக்கிறான். சரி.. அவர்கள் வந்து போகும் செலவும் அவனிடமே வா கேட்க வேண்டும்? சுயநல உலகம்..!’ என்ற எண்ணிக் கொண்டே உடை மாற்ற “நீ மட்டும் என்ன சுயநல மற்றவனா?” என்று நக்கலாக கேட்டது மனசாட்சி..!
அதற்கு பதில் கூற முடியாமல் தலையை தொங்க போட்டுக் கொண்டு வெளியே வந்தவன் அம்மாவை பார்த்து ஒரு பெரும் மூச்சு விட்டப்படி “தோசை சுட்டு ஹாட் பாக்ல இருக்கு. தேங்காய் சட்னி அரைச்சு வச்சிருக்கேன். சீக்கிரமா சாப்பிடுங்க.. இல்லன்னா வீணா போயிடும். பேங்குக்கு கிளம்புறேன்” என்று வாசல் நோக்கி சென்றவனை பார்த்தவரின் முகம் அத்தனை வருத்தத்தில் இருந்தது.
வழக்கம் போல இவன் வெளிவரும் அதே நேரத்தில் தான் ரேவதியும் வெளி வந்தாள்.
“என்ன ஆதவா.. ஒரே தேவதாஸ் வேடமா இருக்கு. ஆனாலும் ட்ரிம் செய்யாத தாடியில் கூட யூ லுக்கிங் ஹாட்..!” என்று அவள் வழக்கமாக கூறுவது போல கூற..
அன்று புலங்கிதம் பட்டது போல இன்று அவனால் பட முடியவில்லை. வெறுமையாய் அவரை பார்த்து சிரித்தவன் வேகமாக லிஃப்டை தவிர்த்து படிகளில் இறங்கி சென்றான்.
தனியார் மயமாக்கப்பட்ட ஒரு தேசிய வங்கியில் தான் அவனது வேலை. பதவி என்னவோ உயர் பதவி அதுவும் அவ்வளவு சாமானியத்தில் வந்து விடவில்லை. பல எக்ஸாம் எழுதி படித்து.. சில இடத்தில் லஞ்சமும் கொடுத்துதான் இன்று அந்த கிளையின் ஜென்ரல் மேனேஜராக இருக்கிறான்.
அதுவும் இரண்டு மாத காலமாக..!!
எவ்வளவு உயரத்தில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தால் என்ன? வீட்டிற்குச் சென்றால் வெறுமையாக இருக்கும் வீடும்.. மகள் சத்தம் இன்றி இருக்கும் வீடும்.. மனைவியின் என்னங்க என்று விளிப்பு இல்லாத வீடும்.. வீடா என்ன? வெறும் கட்டிடம்.!!!
வாழ்க்கை சிறுவயதில் இருந்து அவனுக்கு பல பாடங்களை கற்பித்து இருந்தாலும் இந்த இரண்டு மாதம் அவனை புரட்டி போட்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும்..!
காலை வேலை முடிந்து மதிய உணவு இடைவெளியில் மனைவி கட்டி தரும் அந்த சாப்பாட்டிற்கு மனம் ஏங்கியது.
ஏதோ உண்ண வேண்டும் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இரண்டு தோசை மட்டும் உண்டு வந்திருந்தவனுக்கு, துக்கம் தனி டிபார்ட்மெண்ட் பசி தனி டிபார்ட்மெண்ட் என்பது போல பசியில் வயறு கிள்ள கேண்டினை நோக்கி சென்றான்.
“என்ன சார் வைஃப் இன்னும் ஊர்ல இருந்து வரலையா? இன்றைக்கும் கேண்டின் தானா?” என்று சக ஊழியர் கேட்க.. அவனிடம் சிரித்து தலையாட்டியவன் தனியாக சென்று அமர்ந்தான் உணவை வாங்கிக் கொண்டு..!
உப்பு சப்பில்லா உணவு தொண்டையைத் தாண்டி இறங்க மறுத்தது. வெறும் ரசமே ஆனாலும் மனைவியின் கையால் குழைத்து ரசத்தை ஊற்றி ஒரு அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிடும் நிறைவை.. இதோ இரண்டு வகை கூட்டு பொரியல் அப்பளம் பாயாசம் கொண்ட முழு சாப்பாடு தரவில்லை..!
மணி நான்கானதும் வேகவேகமாக தனது அசிஸ்டன்ட் இடம் கூறிவிட்டு பள்ளி நோக்கி காரில் சென்றான் ஆதவ் நிரஞ்சன்.
அங்கே அவனுக்கு முன்னே வந்து காத்திருந்தாள் அவனது தர்ம பத்தினி மேகவதனி.
கணவனை திரும்பி கூட பார்க்கவில்லை. அதற்காக கையில் மொபைல வைத்தும் நோண்டிக் கொண்டிருக்கவில்லை. கைகளை கட்டி நின்றபடி சூழ்நிலையை அனுமானித்தபடி நின்று இருந்தாள்.
ஆதவன் நிரஞ்சனின் கண்களோ மனைவியை தான் உச்சாதி பாதம் தழுவி நின்றது. ஒரு காலத்தில் உரிமையோடு கைகளால் தழுவ முயன்றவனால் இன்று கண்களால் மட்டுமே..!
மிருணாளினி.. ஆதவ் நிரஞ்சன் மற்றும் மேகவதனியின் எட்டு வயது நான்காம் வகுப்பு படிக்கும் மகள்..!
அவள் வரும்போது “மிரு..” என்று ஆசையோடு ஓடி சென்று அணைத்துக் கொண்டான். அவளும் தந்தை அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் மகளோடு உரையாடினான். அவ்வளவுதான் தனக்கான நேரம் என்று தாங்க இயலா வலியோடு மகளையும் திரும்பி மனைவியையும் பார்த்தவன் “ஓகே பாய் மிரு குட்டி” என்றான்.
செல்லும் தந்தையின் கையைப் பிடித்து “எப்ப அப்பா நம்ம வீட்டுக்கு போவோம்?” என்று ஏக்கத்தோடு கேட்ட மகளை வாரி அணைத்து கரை புரண்ட கண்ணீரை உதடு கடித்து தடுத்துக் கொண்டவன் “சீக்கிரமேடா சீக்கிரமே..” என்றவன் மனைவியை கெஞ்சும் கண்களால் பார்க்க.. அவளோ இருவரையும் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டாள்.
நிரஞ்சன் மகளை விட்டு சென்றதும்தான் இவள் மகளருகே சென்றாள்.
“போலாமா தங்கம்?” என்று கேட்டாள்.
“போலாம் மா.. அம்மா நான் கேட்ட ரெட் இட்லி நைட்டுக்கு பண்ணி தரீங்களா?” என்று ஆசையோடு கேட்ட மகளின் நெற்றியில் முத்தமிட்டு கண்டிப்பாக என்றாள் மேகா.
தன்னுடைய டூவீலரில் மகளை அமர வைத்து அவளுக்கு ஒரு குட்டி ஹெல்மெட் மாட்டிவிட்டு தானும் மாட்டிக் கொண்டு செல்லும் மனைவியை கண்ணில் வழியும் ஏக்கத்தோடும் மனதில் எழுந்த பெரும் வலியோடும் பார்த்திருந்தான் ஆதவ் நிரஞ்சன்..!
கால்களால் அ
வளை தொடர முடியாமல் போக.. கண்களால் மட்டுமே தொடர்ந்தான் அவளை..!
தொடரும்..
