நித்தம் ஒரு அந்தி மயக்கம்…
தடாதகை நாவல்ஸ்…
1
சென்னை அம்பத்தூர்..!!
சென்னையை பற்றி புதுசா சொல்ல என்னங்க இருக்கு? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தான் சென்னை..!!
அத்தனை பரப்பரப்பிலும் படிப்பு விளையாட்டு வேலை என்று மாஸ் காட்டும் சென்னை பசங்க..
வீடு படிப்பு பார்ட் டைம் வேலை ஆரி ஒர்க் பார்லர் ஒர்க் என்று பரபரப்பாக இருக்கும் நம் சென்னை பொண்ணுங்க..
இளைஞர்களே இவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தால் முதியோர்கள்?? அவர்களோ அறிவுரையும் ஆற்றலையும் கொடுத்து பின்னால் உந்து சக்தியாய் இருக்கிறார்கள்.
அட போம்மா.. எங்கம்மா இப்ப எல்லாம் பிள்ளைங்க இப்படி பொறுப்பா இருக்காங்க? அப்பன் ஆத்தா சொல்றத கேக்காறாங்க? போ மா.. போய் அப்டேட் ஆகு..!
அப்படின்னு நீங்க நினைக்கலாம்..?? ஏன் என்கிட்ட கேள்வி கூட கேட்கலாம்??
தப்பில்லை.. தப்பில்லை..!!
ஆனாலும் ஒரு சிலர் செய்யும் கயமைக்காக அனைவரையும் குறை சொல்வது தவறல்லவா?
//கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... //
காலையிலேயே கந்த குரு கவசம் ஒலிக்க.. அதனோடு கூட தன் காலை வேலையை ஆரம்பித்தார் சிவகாமி. அச்சிறிய வீட்டின் குடும்பத் தலைவி..! தலைவன் இல்லா தலைவி..!!
அவரது வேலை காலை 5 மணிக்கு ஆரம்பித்து விடும். அவரோ தீவிர முருக பக்தர். முதலில் கந்த குரு கவசம்.. அதன் பின் கந்தசஷ்டி கவசம்.. அதன் பின் ஒவ்வொன்றாய் முருகன் பாடல்கள் ஒலிக்கும்.
அனைவருக்கும் காலைப் பொழுதினிலே திவ்யமாய்.. தெய்வீகமாய்..!!
ஆனால் உறங்கும் அவரின் இரு பிள்ளைகளுக்கு அவை நாராசமாய்..!!
80 90 பிள்ளைகளின் காலை விடியலே அப்பொழுது வானொலியில் கேட்கும் அந்த தெய்வீக பாடல்கள் தான்..!
ஆனால் இப்பொழுதோ விழித்தவுடன் கண்களை திறக்கிறார்களோ இல்லையோ அருகில் இருக்கும் ஃபோனை துழாவி எடுத்து அதில் தான் விழிக்கவே செய்கிறார்கள்.
பின் எங்கு இருந்து காலை புத்துணர்ச்சியும் அந்த பாசிட்டிவ் வைப்பும் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் வரும்??
நம் சான்றோர்கள் அறிவியலை ஆன்மீகத்தோடு கலந்து ஊட்டினர். இன்று அது பலருக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பழைய பஞ்சாங்கம்.. மூடநம்பிக்கை என்று விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
போற்றுவர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்..!
அட வாங்க.. நாம நம்ம சிவகாமி தேவியார் குடும்பத்திற்குள் நுழைவோம்..!!
அவரின் இளைய மகன் தணிகைவேலன் அப்பொழுதுதான் காலை கராத்தே கோச் கிளம்பி கொண்டு இருந்தான்.
“மா.. நான் ரெடி மா கிளம்புறேன்” என்று வந்து நின்றவனுக்கு அவசரமாக ஒரு கப்பில் சத்துமாவை கலந்து கொடுத்தவர், “வெறும் வயித்தோட போவியா? இத குடிச்சிட்டு கிளம்பு..!” என்றார் அன்பு கட்டளையாக..!
காலை 6 மணியிலிருந்து ஏழு மணி வரை அருகில் உள்ள கராத்தே வகுப்பேக்கு அவனது நண்பன் குணாவோடு சென்று வருவான். குணாவின் அப்பா தான் இருவரையும் சென்று விட்டு வருவார்.
நான்கு தெரு தள்ளி தான் இருக்கிறது. ஆனாலும் மகனை தனியாக அனுப்ப சிவகாமிக்கு அவ்வளவு பயம்.
அதனால் எப்பொழுதும் குணாவோடு தான் அவன் செல்வது. திரும்பி வரும்போது ஓரளவு வெளிச்சம் வந்துவிடும்.. மக்கள் நடமாட்டம் இருக்கும், என்பதால் இருவரும் நடந்தே வந்துவிடுவர்.
இருவரும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.
மகனை அனுப்பி வைத்து திரும்பி பார்க்க.. மகள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான்..!!
“புள்ளங்க தலையெடுத்து நம்ம கஷ்டத்த பகிர்ந்துக்கும்னு பார்த்தா.. என் தலையெழுத்து இது சரியான தூங்கு மூஞ்சியவே இருக்கு..!” என்று குறைபாட்டுக் கொள்ளும் இதே அன்னை தான் அவளின் வேலை சுறுசுறுப்பை கண்டு மெச்சம் செய்வார்.
என்ன அந்த மாதிரி சுறுசுறுப்பு எல்லாம் அத்தி பூத்தது போல் தான் அவளிடம் நடக்கும்..! அவர் கண்களுக்கும் தெரியும்..!
“ஏன்டி, நேத்து நீ காலைல எந்திரிச்சு மூச்சுப்பயிற்சி செஞ்சு.. யோகா செய்றேன்னு சொன்ன.. இப்போ என்னன்னா இழுத்து போத்திகிட்டு தூங்குற.. எழுந்திருக்க போறியா இல்ல ஜலாபிஷேகம் செய்யவா?” என்று சமையலில் இருந்து வேகமாக குரல் கொடுத்தார் சிவகாமி.
“ஜலாபிஷேகமா?” என்று முகத்தை மூடி இருந்த போர்வை விலக்கி பார்த்தவள் “ஜில்லுனு ஊத்ததம்மா சளி பிடிக்கும். எனக்கு சைனஸ் வேற இருக்கு.. ஊத்துறது தான் ஊத்துற கொஞ்சம் வெதுவெதுன்னு தண்ணியா ஊத்து. உன் பிள்ளை பிழைச்சுக்கும் அப்பத்தான்..!₹ என்று தூக்கத்திலேயே உளறி கொண்டிருந்தவளை கண்டு.. கொதித்தவர் காய் கிண்டிக்கொண்டிருந்த சாரணியோடு வந்து போர்வையை விலக்கி அவரது பின்புறத்திலேயே ரெண்டு அடி போட்டார்.
“அம்மா.. நீ எல்லாம் அம்மாவா மா? இப்படி சுடு சாரணியாலேயே அடிக்கிறியே நாள பின்னால நான் பின்னால் உக்கார வேணாமா? வேணாமா?” என்று அதறி பதறி எழுந்து, பின்னால் தேய்த்திக் கொண்டு கேட்டவளை பார்த்த முறைத்தார்.
“உனக்கு அஞ்சு வயசு சின்னவன் அவன் காலையிலே கிளம்பி கராத்தே கிளாஸ் போயிட்டான். வந்து ஸ்கூலுக்கும் கிளம்பிடுவான். நீ காலேஜ் முடிச்சுட்டுனு தான் பேரு.. இன்னமும் என் உயிரை வாங்கிட்டு தான் இருக்க.. ஏதாவது வேலைக்கு போ என்னாலும் அதுவும் கேட்க மாட்டேங்கிற..” என்று புலம்பியபடியே மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார்.
“ம்மா.. நான் என்ன சாதாரண படிப்பா மா படிச்சிருக்கேன்.. போய் எங்கேயாவது பார்ட்டைமா வேலை செய்ய?”
“ஏன் செஞ்சா என்ன?” என்று தலை மட்டும் திருப்பி மகளைப் பார்த்தார்.
“எது? ஜெராக்ஸ் கடையில் உட்காருவதா.. இல்ல அண்ணாச்சி கடையில் கணக்கு எழுதுவதா.. இல்ல பால் பூத்துல பால் போடுறதா.. இல்ல ஐஸ்கிரீம் ஷாப்ல ஐஸ்கிரீம் விக்கிறதா? நான் யார் தெரியுமா ஒரு செஃப்..! எல்லோருக்கும் என் திறமையை எப்படி காட்டுறதுனு நான் யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றாள் தன்னை நினைத்தே பெருமையாக..!
“ம்ஹூம்.. அந்தப் பெருமை எருமை எல்லாம் முதல்ல வீட்ல காட்டு அதுக்கு அப்புறமா வெளியில காட்டலாம்?” என்று அவளை வாரினார்.
“ம்ஹூம்..! வீட்டிலேயே நமக்கு மரியாதை இல்லை. அவமானம் வேதனை வெட்கம்..! ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த உலகமே என்னை திரும்பிப் பார்க்கப் போகும் பாரு..!” என்று வீராவேசமாக டயலாக் அடித்தவள்,
பின் பூனை போல அம்மா பின்னே பதுங்கி சென்றவள், ஒற்றை விரலால் அவரின் முதுகில் சுரண்டி “ம்மா டீ..!” என்று கெஞ்சலாக கேட்டாள்.
“ஒழுங்கா போய் மூச்சுப் பயிற்சி ஆசனம் செய்யணும். உனக்கு முன்னாடி முட்டிக்கிட்டு நிக்கிற அந்த தொப்பையை குறைஞ்சா தான் உனக்கு டீ.. இல்லைன்னா கண்ணா பின்னான்னு மூலிகை எல்லாம் போட்டு ஒரு பொடி செஞ்சு வச்சிருக்கேன். அதுல ரெண்டு ஸ்பூன் போட்டு ஆத்தி கொடுத்துடுவேன். வசதி எப்படி?” என்றது அந்த கசாயத்துக்கு பயந்து தன்னை சுத்தப்படுத்தி வந்தவள், இலகுவான உடையோடு யோகா மேட்டை விரித்தவள், “என்ன செஞ்சும் இந்த உடம்பு மட்டும் வளைய மாட்டேங்குது..!” என்று முதலில் மூச்சுப் பயிற்சியை ஆரம்பித்தாள்.
அந்த மூச்சுப்பயிற்சி சாதாரணமாக எல்லாம் கிடையாது. ஃபோனில் அதுக்கான இன்ஸ்ட்ரக்ஷன் போட்டுவிட்டு அதில் ‘இன்ஹேல்’ என்று வரும்போது மூச்சை நன்றாக உள்ளிருப்பாள்..
‘ஹோல்ட்’ என்கிறபோது சிறிது நேரம் மூச்சு இழுத்து பிடிப்பாள். பின் ‘எக்ஸ்ஹேல்’ என்றதும் மூச்சை வெளியிடுவாள்.
இவள் செய்வதை சிறிது நேரம் நின்று பார்ப்பார் சிவகாமி. “ஏதோ செஞ்சா சரி..!” என்று அவளை விடாமல் இந்த வேலையை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் சிவகாமி.
காரணம் கிருத்திலயாவுக்கு சிறுவயதில் இருந்தே சைனஸ் பிராப்ளம் உண்டு. அதோடு கூட தொடர்ச்சியான தும்மலும் வரும். ரொம்ப நேரம் ஓடவும் முடியாது. குளிர் காலத்தில் சில சமயம் வீசிங்கிங்கும் வரும்.
என்னதான் மாத்திரை மருந்து கொடுத்து அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தினாலும், தொடர் பயிற்சிதான் அவளுக்கு முழு நிவாரணத்தை கொடுக்கும் என்று மருத்துவர்கள் சொல்ல.. காலையில் எழுந்தவுடன் மூச்சுப் பயிற்சி செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகும் சிவகாமிக்கு..!!
அதுவரை அச்சிறிய வீட்டில் வேற எந்த சத்தமும் கேட்கவில்லை. உள்ளே சமையலறையில் அவ்வப்போது வானொலியில் உராயும் கரண்டியின் சத்தமும்.. பாத்திரங்கள் எடுக்கும் சத்தமும்.. குக்கரின் விசில் சத்தம் மட்டுமே கேட்க..
இவை எல்லாம் பழகிப்போன ஒன்றுதான் கிருத்திலயாவிற்கு. அதனால் அமைதியாக அவளது மூச்சுப் பயிற்சியை அவள் மேற்கொண்டாள்.
ஆனால் எதிர்பாராத விதமாக அதிரடி தாக்குதலாக அடுத்து கேட்டது அப்பாடல்வரி…
//அட மாமோய்ஈஈ….//
என்ற குரல் உச்ச ஸ்துதியில் கேட்டதுமே, அதுவரை மூக்கை பொத்தி மூச்சு பயிற்சி செய்துக் கொண்டிருந்தவள், இப்போது தன் காதுகளை இறுக பொத்திக் கொண்டாள்..!
பயிற்சிக்காக அல்ல..! இருக்கும் கொஞ்ச நஞ்ச கேட்கும் சக்தியையும் காப்பாற்ற வேண்டி..!
“ஆரம்பிச்சிட்டான் இந்த ஒரிஜினல்.. பக்கா.. பச்சை தமிழன்… அய்யோ… ஆண்டவா…!” என்றவளது இரு விரல்கள் காதின் இரு துவாரங்களை அடைத்து இருக்க.. அதை தாண்டி கேட்ட, அந்த பாடலின் ஒலியில் நொந்து போனாள் அவள்.
//டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்..
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்..//
என்று அடுத்து கேட்ட வரிகளில் அவள் மட்டும் அல்ல, சென்னை அம்பத்தூரில் இருந்து சற்றே உள்ளடங்கி இருந்த அவர்களது பழமையான கட்டுமான கொண்ட இரண்டு அடுக்கு வீடும் கூட அதிர்வதாய் தோன்றியது அவளுக்கு..!!
“அய்யோ.. பாட்ட போட்டே… வீட்ட முடிச்சிடுவான் போலியே.. அடேய்.. எங்க அப்பா கொடுத்துட்டு போனா ஒரே சொத்து இது தான்டா…” என்று அலறியவள்,
“மாதாஜி.. எல்லாம் உன்னால் தான்..” என்று அவள் பல்லை கடிக்க..
//மலையூறு நாட்டாம
மனச காட்டு பூட்டாம
உன்னை போல யாரும் இல்ல மாமா
தஞ்சாவூரு ராசாவ
தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா..//
என்று பாடலின் அடுத்தடுத்த வரிகள் கேட்பவர் யாரையுமே ஆசையோடு அப்பாடலோடு பெரிய குத்தாட்டம் போடவில்லை என்றாலும் சின்ன உடல் அசைவையாவது கொடுக்க தோன்றும்..!
“எம்மா நிறுத்துமா..! ஒரு தடவ கேட்டா பரவாயில்ல.. நித்தமும் கேட்டா.. ஆசையாவது ஒன்னாவது.. ஆத்திரமாக தான் வரும். போமா அங்குட்டு..” என்று நம்மை பார்த்து அவள் சிவந்த முகத்தோடு பாராட்ட..
ஈஈஈ… மீ எஸ்கேப்..!!
“மாதாஜி… எம்மோவ்… சிவகாமிதேவியாரே…” என்று கத்தியப்படி வந்தவளின் கையில் சுடச்சுட இஞ்சி ஒரு ஏலக்காய் கெஞ்சமாய் வெல்லம் போட்ட தேநீரை நீட்டினார் அவளது அன்னை சிவாகாமி.
“கரெக்ட்டா.. இந்த டீய கொடுத்து என்னை ஆஃப் பண்ணிடு.. மேலே கத்துது பாரு அந்த பாட்ட மட்டும் ஆஃப் பண்ண சொல்லாத..!” என்றவளின் சிடுசிடுப்பை சிரித்த முகத்தோடு பார்த்தவர்,
“விடு டி.. இன்னும் கொஞ்ச நேரம் தானே..! அப்புறம் அந்த புள்ள கிளம்பிடும், அப்புறம் ராத்திரிக்கு தானே வரும்..” என்று அன்னையை பார்த்து முறைத்தாள்.
“அதுக்குன்னு அவன் பண்ற அந்த அட்ரஸ்சிட்டியெல்லாம் பார்த்துட்டு இருக்க சொல்லுவியா? மூஞ்சில அடிச்ச மாதிரி நச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லுமானா நீயும் பேச மாட்டேங்குற.. என்னையும் பேச விட மாட்டீங்குற..!” என்றவள் அந்த தேநீரை மூக்கு அருகே பிடித்து அந்த நறுமணத்தை ஆழ்ந்துச் சுவாசித்தாள்.
“அதில்ல கண்ணு.. என்ன இருந்தாலும் ஒரே ஊரு.. சொந்தக்காரங்க வேற… மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னா நல்லாவா இருக்கும்” என்றார் தயங்கியபடி..!
“லாங்.. லாங்.. எகோ.. சோ லாங் எகோ.. உங்க அப்பாவோட அப்பாவோட அப்பா.. அந்த மாடியில இருக்குறவனோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவுக்கு பங்காளினு கதை கட்டிட்டு இருக்குற உங்க குடும்பப் புராணத்த சொல்லி… என்ன கடுப்பேத்தாத மா” என்றவள்,
“பாத்துகிட்டு இரு.. ஒரு நாள் இல்ல ஒரு நாளு அந்த ஆள் வச்சிருக்கிற அந்த ஸ்பீக்கர் தூக்கி பழைய பேப்பர்காரனுக்கு போடுறேனா இல்லையானு.. ஒரே ஊருக்காரன குடி வச்சி என் உயிரை வாங்குறம்மா நீனு”
என்றவள் தேநீரை எடுத்துக் கொண்டு அதில் சிறிது காரசேவை போட்டு குடிப்பதைக் கண்டு,
“அப்படியே அப்பனக் கொண்டு பிறந்திருக்கு..” என்றப்படி காலை வேலையை அவர் பார்த்திருக்க…
திரும்பவும்…
“அட மாமோய்ஈஈஈ….” என்று கேட்ட உச்ச ஸ்துதியில்.. அதிர்ந்தவள் கையில் பிடித்திருந்த தேநீரை நழுவ விட.. அது அவளின் மேனியை அபிஷேகம் செய்தது..!
“எம்மாஆஆஆஆஆ…” என்று அவள் அந்த பாட்டுக்கு மேல் அலற… சமையலறையில் இருந்து வந்து எட்டிப் பார்த்தவர் அவளது நிலை கண்டு வாய் மூடி சிரிக்க..
“அம்புட்டுதான் பார்த்துக்க…!” என்றவள் விடுவிடுவென்று மாடியேறினாள்.
“ஹலோ.. ஹலோ… மிஸ்டர் புவன்..” என்று அவள் பத்து முறை கூப்பிட்டதும் தான் வந்து எட்டி பார்த்தவன்,
“ஓம்..!” என்று பதிலளிக்க..
“என்ன நினைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல..” என்றவளுக்கு
//நான் மின்னால பிடிக்கதானே…
ஒரு வலைய கொண்டு போறேன்…
அடி மீன் புடிக்க.. மான் புடிக்க…
மனசு இல்ல போடி…!
நான் வேட்டையாடதானே…
ஒரு வேல கொண்டு போறேன்…
அடி பூ பறிக்க.. தேன் எடுக்க…
பொழுது இல்ல போடி…!”// என்ற பாடல் வரிகள் பதிலாக வர..
ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தவன் பார்வையும் அந்த பாடலின் வரிகளையே பதிலாக சொல்ல..
“என்னமோ நீங்க மட்டும் தான் இந்த ஏரியாவுலேயே இருக்குற போல ஃபிஹேவ் பண்ணாதிங்க மிஸ்டர்.. கீழே.. அக்கம் பக்கத்தில எல்லாம் வீடு இருக்கு, அங்கேயும் மனுஷங்க குடித்தனம் இருக்காங்க.. இவ்ளோ சத்தமா காலையிலேயே பாட்ட போட்டு எல்லாருக்கும் டென்ஷன் கொடுக்குறீங்க.. உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க மட்டும் கேளுங்க..!” என்றவள் ஆத்திரமாய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேச..
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் பிங்க் நிற குர்த்தியில் தேநீர் கொட்டிய கரை அப்பட்டமாக தெரிந்தது.
“ஓஓஓ.. உங்கட தேத்தண்ணி ஊத்துப் பட்டதுக்கு என்னட்ட வந்து சண்டை பிடிக்கிறியளோ?” என்றவனின் சரியான கேள்விக்கு அவள் முறைப்பை பதிலாக கொடுக்க…
“அப்புறம்.. அந்த பாட்ட பிடிச்சதனால கேக்கல.. பிடிக்காதனால தான் கேட்டனான்” என்றவன் டிப் டாப்பாய் கிளம்பி வீட்டை பூட்டிவிட்டு அவளை கடந்து போனான்..
“எதே..? பிடிக்காம கேட்கிறானா? எல்லாரும் பாட்டு பிடிச்சு தானே கேட்பாங்க அதுவும் இவ்வளவு வலியும் வச்சு இவன் வீடு மட்டும் இல்லாம சுத்திருக்குற வீடு அதர வச்சு கேட்டுட்டு கடைசியா என்னென்னா என்னையே குழப்பிட்டு போறான்?” என்று வாஹீஷ திருபுரபவனன் சென்ற திசையையே பார்த்திருந்தாள் கிருத்திலயா.
மயக்க வருவான்..